சென்னை: தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயமாக போற்றப்பட்ட பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏராளமான நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வரும் நிலையில், நடிகர் நெப்போலியன் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ ரசிகர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது.
பாரதிராஜாவின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோன நெப்போலியன், அமெரிக்காவில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது குருநாதர் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோவில் பேசிய நெப்போலியன், "காலை நேரத்தில் என் குருநாதர் பாரதிராஜா உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. முதலில் அதை என்னால் நம்பவே முடியவில்லை. சில மாதங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும், இது ஒரு வதந்திதான் என்று நினைத்தேன். ஏனெனில் ஒரு மாதத்திற்கு முன்புகூட இதேபோன்ற தகவல் வெளியானது. அப்போது அவருடைய மகள் ஜனனியிடம் பேசினேன். 'அப்பா நல்லா இருக்கிறார் அங்கிள், யாரோ வதந்தி பரப்புகிறார்கள்' என்று அவர் கூறினார். அதனால் இந்த முறையும் அதே மாதிரி இருக்கும் என்றுதான் நினைத்தேன்" என உருக்கமாக கூறினார். தனக்கு வந்த தகவலை உறுதிப்படுத்த மீண்டும் ஜனனிக்கு அழைத்ததாக கூறிய நெப்போலியன், "அவர் மலேசியாவில் இருந்து இந்தியா வந்து கொண்டிருந்தார். அப்போது 'அங்கிள்... அப்பா தவறிட்டார்' என்று கூறிய பிறகுதான் அந்த செய்தியை என்னால் நம்ப முடிந்தது. அந்த நிமிடத்தில் இருந்து என் குடும்பத்தில் யாராலும் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நேற்று இரவு முழுவதும் பாரதிராஜா பற்றிய செய்திகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். தூக்கமே வரவில்லை" என்று கண்ணீருடன் தெரிவித்தார். நெப்போலியனின் திரைப்பயணத்தில் மிக முக்கிய பங்கு வகித்தவர் பாரதிராஜா. அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர் போல அன்பு காட்டியதாக நெப்போலியன் கூறியுள்ளார். "எனது வாழ்க்கையில் எல்லாமே குருநாதர்தான். என்னை நடிகனாக அறிமுகப்படுத்தியவர் அவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என் மகன் திருமணத்திற்கு நேரில் வந்து அழைப்பிதழ் கொடுத்தேன். அதுவரைக்கும் எங்கள் உறவு அதே பாசத்துடன் இருந்தது. மூன்று மாதங்களுக்கு முன்புகூட என்னுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசினார். இன்னும் சில மாதங்களில் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதற்குள் இப்படி ஆகிவிட்டது" என அவர் வருத்தத்துடன் கூறினார். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியன், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா வர முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். "நான் இந்தியாவில் இருந்திருந்தால், என் குருநாதரின் இறுதி யாத்திரையில் முதல் ஆளாக நின்றிருப்பேன். ஆனால் இப்போது வர முடியாத நிலை. அதுதான் என்னை இன்னும் அதிகமாக வேதனைப்படுத்துகிறது" என்று கூறியபோது அவரது குரலில் இருந்த வலி ரசிகர்களையும் கண்கலங்க வைத்துள்ளது. பாரதிராஜாவின் மறைவு செய்தி வெளியான உடனேயே நெப்போலியன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் பதிவொன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், "எத்தனையோ கலைஞர்களை உருவாக்கியவர். என்னை நடிகனாக அறிமுகப்படுத்தியவர். தமிழ் சினிமாவிற்கு அவர் செய்த பங்களிப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. என் குருநாதரை இழந்த துயரத்தில் இருக்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார். அந்த பதிவும் தற்போது இணையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இயக்குநர் சிகரமாக தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு சகாப்தத்தை உருவாக்கிய பாரதிராஜாவை நினைவுகூர்ந்த நெப்போலியன், "அவருடைய படைப்புகள் எல்லாம் காலத்தால் அழிக்க முடியாதவை. அவர் போன்ற ஒரு நல்ல மனிதரை இனி பார்க்க முடியாது. என்னைப் போன்ற பலரின் வாழ்க்கையை மாற்றியவர் அவர்" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.நெப்போலியன் வெளியிட்ட வீடியோ
உடைந்துபோன நெப்போலியன்
என் வாழ்க்கையே அவரால்தான்
அமெரிக்காவில் சிக்கிய நெப்போலியன்
Bharathiraja: பாரதிராஜா உடலை பார்த்து சிவகுமார் பேசிய வார்த்தை.. கண்கலங்க வைத்த காட்சி
நேற்று வெளியிட்ட பதிவும் வைரல்
ரசிகர்கள் வருத்தம்