உன் நடிப்பு பிடிக்காதுன்னு பாரதிராஜா சொல்லுவாரு.. கடைசிவரை நான் நினைச்சது நடக்கல! ரஜினிகாந்த் உருக்கம்


  • சென்னை: தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு, திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உருக்கமான பேச்சு ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.

    Advertisement

    பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசும்போது தன்னுடைய 50 ஆண்டுகால நண்பரை இழந்த வேதனையை மறைக்க முடியாமல் திணறினார்.

    Advertisement

    "என்னுடைய 50 ஆண்டுகால நண்பர் பாரதிராஜா. அவருடைய திறமை, சாதனை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. எத்தனையோ நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தி வாழ்வு கொடுத்தவர். யாருக்கு பிரச்சினை வந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுத்து போராடியவர்," என்று கூறினார்.

    சூப்பர் ஸ்டாருக்கு அடையாளம் கொடுத்த மனிதர்

    இன்று உலகமே சூப்பர் ஸ்டாராக கொண்டாடும் ரஜினிகாந்தின் ஆரம்பகால பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர் பாரதிராஜா. தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகளுக்கும், யதார்த்தமான கதாபாத்திரங்களுக்கும் புதிய முகம் கொடுத்த பாரதிராஜா, ரஜினியின் திறமையையும் ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டவர்களில் ஒருவர்.

    Advertisement

    ரஜினிகாந்த் பலமுறை, "சினிமாவில் நான் வளர்ந்த பாதையில் பாரதிராஜா போன்ற கலைஞர்களின் பங்களிப்பை மறக்க முடியாது" என்று கூறியிருக்கிறார். அதனால் தான் இந்த இழப்பு அவருக்கு சாதாரண நண்பனின் இழப்பாக இல்லை; வாழ்க்கைப் பயணத்தில் உடன் வந்த ஒரு சகோதரனை இழந்த வேதனையாக மாறியுள்ளது.

    ரஜினிகாந்த்

    "பாரதிராஜா குழந்தையைப் போல. மனதில் இருப்பதை அப்படியே பேசிவிடுவார். பிடித்தால் பிடிக்கும் என்பார்; பிடிக்கவில்லை என்றால் பிடிக்காது என்பார். என்னைப் பற்றி நிறைய விமர்சனங்கள் செய்திருக்கிறார். 'ரஜினி... உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் உன் நடிப்பு எனக்கு பிடிக்காது' என்று கூட நேராக சொன்னவர்," என்று சிரிப்பும் சோகமும் கலந்த குரலில் கூறினார்.

    Advertisement

    இது தான் பாரதிராஜாவின் தனித்துவம். யாராக இருந்தாலும் உண்மையை மறைக்காமல் சொல்வார். அந்த நேர்மையே அவரை பலரின் இதயத்தில் தனி இடத்தில் வைத்தது.

    கடைசியாக பார்க்க முடியாத வருத்தம்

    மேலும் ரஜினிகாந்த் "அவர் உடல்நிலை சரியில்லை என்று தெரிந்ததும் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் 'விரைவில் குணமடைந்துவிடுவார்... அப்போது வாருங்கள்' என்று சொன்னார்கள். இறுதியில் அவரை உயிரோடு பார்க்க முடியாமலே போய்விட்டது," என்று கூறியபோது அவரது குரலில் இருந்த ஏக்கம் அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.

    பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு
    Advertisement

    ஒரு காலத்தின் நினைவுகள்

    1970 மற்றும் 80களில் தமிழ் சினிமாவை மாற்றிய மூன்று பெரிய பெயர்கள் என்றால் அது பாரதிராஜா, இளையராஜா, ரஜினிகாந்த். ஒருவர் கதை சொன்னார், ஒருவர் இசையால் உயிர் கொடுத்தார், ஒருவர் நடிப்பால் மக்களை கவர்ந்தார். அந்த தலைமுறையின் நினைவுகளை சுமந்து வந்த பாரதிராஜா இன்று இல்லை என்ற உண்மையை ஏற்க முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். குறிப்பாக, அரை நூற்றாண்டுக்கும் மேலான நட்பை பகிர்ந்த ரஜினிகாந்துக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பாக மாறியுள்ளது.

    பேச்சின் இறுதியில் ரஜினிகாந்த், "இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் பாரதிராஜாவின் படைப்புகள் நிலைத்து நிற்கும். அவர் உடலால் நம்மை விட்டு பிரிந்திருக்கலாம். ஆனால் அவரது திரைப்படங்களும், அவர் உருவாக்கிய கலை உலகமும் எப்போதும் வாழும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்," என்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.

    English Summary

    The passing of legendary filmmaker Bharathiraja has deeply saddened the Tamil film industry, with tributes pouring in from political leaders, actors, and filmmakers. Among the most emotional was the tribute from Rajinikanth, who paid his final respects and spoke about their five-decade-long friendship. Struggling to hide his grief, Rajinikanth described Bharathiraja as a fearless and honest person who always spoke his mind without hesitation.Recalling their memorable conversations, Rajinikanth revealed that Bharathiraja once told him, “I like you very much, but I don’t like your acting,” a remark that reflected the director’s trademark honesty. He also expressed regret that he could not meet Bharathiraja during his final days despite wanting to visit him. Rajinikanth said he was informed that the filmmaker would recover soon, but unfortunately never got the chance to see him again.The Superstar further praised Bharathiraja’s immense contribution to Tamil cinema, highlighting how he introduced numerous actors and actresses and transformed the industry with realistic rural storytelling. Alongside legends like Ilaiyaraaja and Rajinikanth himself, Bharathiraja helped define an unforgettable era in Tamil cinema. Concluding his tribute, Rajinikanth said that while Bharathiraja may no longer be physically present, his films, characters, and artistic legacy will continue to inspire generations of filmmakers and movie lovers.