சென்னை: தமிழ் சினிமாவின் மண்வாசனை இயக்குநர், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டுள்ள உருக்கமான இரங்கல் கவிதை ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கண்களை கலங்க வைத்துள்ளது.
வெறும் இரங்கல் பதிவு மட்டுமல்ல... தனது வாழ்வின் ஒரு பகுதியை இழந்த மனிதனின் கதறலாகவே அந்தக் கவிதை அமைந்திருக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாரதிராஜாவின் மறைவு செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே "முதல் மரியாதைக்கு... இறுதி மரியாதை" என்ற தலைப்பில் வைரமுத்து தனது இரங்கல் கவிதையை வெளியிட்டார். பின்னர் அந்த கவிதையை அவரே கண்ணீர் மல்க வீடியோவாக வாசித்ததும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கவிதையின் தொடக்கத்திலேயே, "பிதாமகனே... போய்விட்டாயா?, கிராமத்து ராஜாவே... இறந்துபட்டாயா? எங்கள் மண் வாசனையில் இன்று சாவு மணக்கிறதா?" என்று எழுதியிருக்கும் வைரமுத்து, ஒரு இயக்குநரின் மறைவை மட்டும் அல்ல, ஒரு காலத்தின் முடிவை வர்ணித்திருக்கிறார். பாரதிராஜா தமிழ் சினிமாவை நகரத்து ஸ்டுடியோக்களில் இருந்து கிராமத்து வயல்வெளிகளுக்கு கொண்டு சென்றவர். அதை நினைவுகூர்ந்த வைரமுத்து, "அடைத்துக் கிடந்த திரையுலகக் கதவுகளைத் திறந்தவெளிக்குத் திறந்துவிட்டவனே! ஆகாயத்திற்கு அடுத்து அதிக நட்சத்திரங்களை அறிமுகம் செய்தவனே!" என்று பாரதிராஜாவின் சாதனைகளை கவிதையில் பதிவு செய்துள்ளார். ராதிகா, ரேவதி, ரஞ்சிதா, ரேகா, நெப்போலியன், பாண்டியன், விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமான கலைஞர்களை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா என்பது குறிப்பிடத்தக்கது. வைரமுத்துவின் கவிதையில் அதிகம் பேசப்படும் வரிகளில் ஒன்று, "சினிமாவின் நிறம் வெள்ளையென்று இருந்ததை கருப்பென்று மாற்றிய கலையாளன் நீ!" என்பதாகும். அதாவது, அழகுக்கான ஒரே அளவுகோலாக வெண்மை தோலை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த காலத்தில், மண்ணின் நிறத்தையும், சாதாரண மக்களின் வாழ்க்கையையும், கிராமத்து முகங்களையும் திரையில் ஹீரோக்களாக மாற்றியவர் பாரதிராஜா என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வைரமுத்து - பாரதிராஜா உறவு வெறும் இயக்குநர் - பாடலாசிரியர் உறவு அல்ல. இருவரும் தேனி மண்ணில் பிறந்தவர்கள். ஒரே மண்ணின் மணத்தை சினிமா மூலம் உலகம் முழுவதும் பரப்பியவர்கள். அதனால்தான் கவிதையின் நடுப்பகுதியில், "நீ தூரிகை... நான் வண்ணம்... நான் தூரிகை... நீ வண்ணம்... தூரிகை இல்லாமல் வண்ணமும்... வண்ணம் இல்லாமல் தூரிகையும்... என்னத்துக்காகும்?" என்று தனது நட்பை வர்ணித்திருக்கிறார். அதேபோல், "நீ அரிவாள்... நான் கைப்பிடி... நான் அரிவாள்... நீ கைப்பிடி..." என்ற வரிகளும் இருவரின் கலைப்பயணத்தை பிரதிபலிக்கின்றன. கவிதையின் மிகவும் உருக்கமான பகுதி இதுதான். "இனி நான் எப்படித் தனியாகத் தேனி போவேன்? மேற்குத் தொடர்ச்சி மலை அருவிகளால் அழுதுகொண்டே கேட்குமே... எங்கே பாரதிராஜா கத்தாழங்காட்டுக் கரிச்சான் கேட்குமே... எங்கே பாரதிராஜா? கருவேலமரம் கேட்குமே... எங்கே பாரதிராஜா?"இந்த வரிகளை வீடியோவில் வாசிக்கும் போது வைரமுத்துவின் குரல் தழுதழுத்து போய்விட்டது. கவிதையின் இறுதியில், "என்னை அழவிடு... உடம்பின் உப்பெல்லாம் கண்ணீராய்க் கரையட்டும்... இனி என்ன எழுத?" என்று கலங்கிய வைரமுத்து, "முதல் மரியாதை செய்தவனே... உனக்கென் இறுதி மரியாதை..." என்று முடித்துள்ளார். இந்த ஒரு வரியே, பல தசாப்தங்களாக நீடித்த நட்பின் ஆழத்தையும், பாரதிராஜா மறைவு வைரமுத்துவுக்கு ஏற்படுத்திய வெற்றிடத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. ஒரு இயக்குநரை இழந்த சோகத்தை விட, வாழ்நாள் நண்பனை இழந்த வேதனையே இந்தக் கவிதையின் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது. அதனால்தான் தற்போது சமூக வலைதளங்களில் பலரும் ஒரே கருத்தை பதிவிட்டு வருகின்றனர்... "பாரதிராஜாவுக்கு பலர் இரங்கல் தெரிவித்தனர்... ஆனால் வைரமுத்து மட்டும் தனது இதயத்தையே கவிதையாக எழுதி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்!"வைரமுத்து இரங்கல்
மாயக்காரன்
சினிமாவின் நிறத்தை மாற்றிய மனிதர்
நீ தூரிகை... நான் வண்ணம்
எப்படி தனியாகத் தேனி போவேன்?
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்!
முதல் மரியாதை செய்தவனே