சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகையே உலுக்கியுள்ள நிலையில், அவரை பற்றிய நினைவுகளை பிரபலங்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கவிப்பேரரசு வைரமுத்து பகிர்ந்துள்ள ஒரு பழைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலரது கண்களையும் கலங்க வைத்துள்ளது.
பாரதிராஜாவின் மறைவு செய்தி வெளியான உடனே, தனது நீண்டநாள் நண்பரும் படைப்புப் பயணத் துணையுமான பாரதிராஜாவுக்காக வைரமுத்து உருக்கமான இரங்கல் பதிவை வெளியிட்டிருந்தார். அந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அவர் பகிர்ந்துள்ள வீடியோ இன்னும் அதிக எமோஷனல் ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரை நேரில் சந்திக்க சென்றிருந்தார் வைரமுத்து. அப்போது வெறுமனே நலம் விசாரித்துவிட்டு திரும்பாமல், பாரதிராஜாவின் வாழ்க்கை சாதனைகள், தமிழ் சினிமாவுக்காக அவர் செய்த புரட்சி, கிராமத்து மக்களின் வாழ்க்கையை உலக அரங்கில் கொண்டு சென்ற அவரது கலைப்பயணம் என அனைத்தையும் கவிதையாக வடித்து அவருக்காக பாடிக் காட்டியிருந்தார். அந்த கவிதை வெறும் பாராட்டு வார்த்தைகளாக இல்லாமல், ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்காக செலுத்திய அன்பு மரியாதையின் வடிவமாக இருந்தது. வைரமுத்துவின் கவிதையை கேட்டுக் கொண்டிருந்த பாரதிராஜாவின் முகத்தில் மெல்ல புன்னகை மலர்ந்தது. பின்னர் நெகிழ்ச்சியுடன் பேசிய அவர், "எனக்கு மருத்துவர்களால் கூட கிடைக்காத மகிழ்ச்சியும் சந்தோஷமும் உங்களுடைய இந்த பாடலால் கிடைக்கிறது நண்பா" என்று கூறியுள்ளார். அந்த வார்த்தைகளை சொல்லும்போது பாரதிராஜாவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும், நண்பனின் அன்பை ரசித்த அந்த உணர்வும் தற்போது ரசிகர்களை கண்கலங்க வைத்து வருகிறது. அதோடு நிற்காமல், "நீங்கள் ஒரு சிறந்த கவிஞர். ஒரு கவிஞரால் மட்டும்தான் இப்படிப்பட்ட வார்த்தைகளால் மனிதர்களை சந்தோஷப்படுத்த முடியும்" என்று வைரமுத்துவை பாராட்டியிருந்தார் பாரதிராஜா. பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவில் இணைந்து பயணித்த இரு ஜாம்பவான்கள் பரிமாறிக் கொண்ட அந்த அன்பு வார்த்தைகள், இன்று அவர்களது நட்பின் ஆழத்தை நினைவுபடுத்துகிறது. இதற்கு பதிலளித்த வைரமுத்து, பாரதிராஜாவை வெறும் இயக்குநராக மட்டுமல்லாமல், ஒரு தலைவராகவும், நடிகராகவும், பன்முகத் திறமை கொண்ட கலைஞராகவும் புகழ்ந்திருந்தார். "தமிழ் சினிமாவுக்கு நீங்கள் செய்தது சாதாரண பங்களிப்பு அல்ல. ஒரு தலைமுறையின் பார்வையையே மாற்றியிருக்கிறீர்கள்" என்ற பொருளில் அவர் பேசிய வார்த்தைகள் பாரதிராஜாவை மேலும் நெகிழ்ச்சியடைய வைத்திருந்தது. பாரதிராஜாவின் மறைவுக்கு பிறகு அந்த பழைய வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வைரமுத்து, "இனி யாரோடு பாட? யார் குறித்துப் பாட?" என்ற வேதனை கலந்த கேள்வியை எழுப்பியுள்ளார். அந்த ஒரு வரியே பல ஆண்டுகால நட்பின் ஆழத்தையும், இழப்பின் வலியையும் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாரதிராஜாவை சிரிக்க வைத்த அந்த சில நிமிடங்கள், இன்று அவரை நினைத்து ரசிகர்களை அழ வைக்கும் தருணங்களாக மாறியுள்ளன. தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், படைப்பாளியாகவும், நண்பராகவும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய பாரதிராஜா இல்லாத வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. ஒரு கவிஞனின் குரலில் நண்பனுக்காக பாடப்பட்ட கவிதை... இன்று அதே கவிஞனின் கண்ணீராக மாறி சமூக வலைதளங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.கவிஞர் வைரமுத்து பகிர்ந்த வீடியோ
உச்சி குளிர்ந்து போன பாரதிராஜா
கவிஞரால் மட்டும்தான் இதை செய்ய முடியும்
தேனி மண்ணில் பாரதிராஜா உடல் .. கை குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள்.. பிரபலங்களின் நெகிழ்ச்சி செயல்
நீங்கள் ஒரு தலைவன்
இனி யாரோடு பாடுவேன்?
2 வருஷமா போராட்டம்.. 3 மாசத்துக்கு முன்பு பேசினேன்! அப்போது கூட.. பாரதிராஜா பற்றி நெப்போலியன் உருக்கம்
வைரலாகும் வீடியோ