சென்னை: தமிழக சட்டப்பேரவையின் நிறைவு நாளான இன்று அரசியல் சூடு உச்சத்தைத் தொட்டது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய், திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததோடு, எதிர்க்கட்சியை நேரடியாக தாக்கும் வகையில் ஒரு "குட்டிக்கதை"யும் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அந்த பேச்சை தாங்கிக்கொள்ள முடியாத திமுக உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் வெளிநடப்பு செய்தனர். ஆனால் அதற்குப் பிறகுதான் இந்த விவகாரம் அரசியல் மோதலைத் தாண்டி, தனிநபர் தாக்குதல் விவாதமாக மாறியது.
சட்டசபையில் பேசிய விஜய், "ஒரு குட்டி ஸ்டோரி சொல்ல தோன்றுகிறது... சொல்லலாமா?" என்று சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்ததும், ஒரு ஊரில் வெயில் அதிகமாக இருந்ததால் ஒருவர் கண்ணை கையால் மறைத்தபடி ஒருவரை தேடிக்கொண்டிருந்தார்; அப்போது அருகில் இருந்த சிறுவன் "என்ன தேடுகிறீர்கள்?" என்று கேட்டபோது, "உங்க அப்பா இங்கதான் இருப்பார் என்றார்கள்... அதான் தேடிக்கொண்டு இருக்கிறேன், உங்க அப்பாவை காணோம்" என்று அவர் சொன்னதாக விஜய் கதையை முடித்தார். இந்த கதை சட்டசபையிலேயே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. திமுக தரப்பில் இது நேரடியாக மு.க.ஸ்டாலினை குறிவைத்து சொல்லப்பட்ட அரசியல் கிண்டல் என எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான பதிலடி பதிவு வெளியிட்டார். அதில், "சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டியிருக்கிறார் முதலமைச்சர்" என்று தொடங்கிய அவர், பேரவையின் லைவ் கேமராவை சினிமா கேமராவாக நினைத்து முதலமைச்சர் பேசினார் என்றும், அதனை single take-ஆக எடுக்க பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குற்றம்சாட்டினார். அதிலும் உதயநிதி பதிவின் மிகக் கடுமையான பகுதி, விஜய் சொன்ன குட்டிக்கதைக்கான பதில்தான். "குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு எதிரானது. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும். எனவே நடிகர் விஜய் என்பதை மறந்து, இனியாவது தமிழக முதலமைச்சராக நடந்து கொள்ள வேண்டும்" என்று உதயநிதி நேரடியாக தாக்கினார். இந்த வரிகள் வெளியானவுடன், விஜய்-திமுக மோதல் அரசியல் விவாதத்தைத் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையை நோக்கி நகர்ந்துவிட்டதாக விமர்சனங்கள் கிளம்பத் தொடங்கின. அந்த சூழலில்தான் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட பதிவு தற்போது கவனம் ஈர்த்துள்ளது. அவர் தனது பதிவில், "இதுவரை தனிப்பட்ட வாழ்க்கையை சட்டசபையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் பேசியதில்லை. 'உங்க அப்பாவை காணோம்' என விஜய் பேசியது முதல்வர் பதவிக்கு அழகல்ல. விஜய் மனைவி பற்றி உதய் பேசியதும் தவறு. தமிழக அரசியல் ரீல்ஸ், பஞ்ச், தனிநபர் வாழ்க்கை என மிக மட்டமாக போகிறது. Shame" என்று கடுமையாக சாடியுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. காரணம், அவர் ஒரே நேரத்தில் விஜய்யையும், உதயநிதியையும் தவறு செய்தவர்கள் என்றே குறிப்பிட்டிருக்கிறார். விஜய் முதல்வர் பதவியில் இருந்து கொண்டு சட்டசபையில் தனிப்பட்ட நபரை குறிக்கும் வகையில் "உங்க அப்பாவை காணோம்" என்ற கதையை சொல்லியது சரியல்ல என்றும், அதற்கு பதிலடியாக உதயநிதி விஜய்யின் குடும்ப வாழ்க்கையை இழுத்து பேசுவதும் அதே அளவு தவறுதான் என்றும் அவர் கூறியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. சமூக வலைதளங்களிலும் இதே விவகாரமே தற்போது வெடித்து வருகிறது. ஒரு தரப்பு, "திமுக தொடர்ந்து விஜயை 'சோஃபா மாடல் ஆட்சி' என்று கலாய்த்தது; அதற்கான பதில்தான் இந்த குட்டிக்கதை" என்று கூறி முதலமைச்சரை ஆதரிக்கிறது. மற்றொரு தரப்பு, "மக்களின் பிரச்சினைகள், மின்வெட்டு, விவசாயிகள், சட்டம் ஒழுங்கு பற்றி பேச வேண்டிய சட்டசபை, இப்போது பஞ்ச் வசனம், குட்டிக்கதை, குடும்ப கிண்டல் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது" என்று விமர்சிக்கிறது. அந்த இரண்டாவது கோணத்தையே ப்ளூ சட்டை மாறன் தனது பதிவில் வெளிப்படையாகச் சொல்லியிருப்பது கவனிக்கப்படுகிறது. அரசியல் மேடையில் வாதம், எதிர்வாதம், கடும் விமர்சனம் - இவை எல்லாம் புதிதல்ல. ஆனால், முதலமைச்சர் பதிலுரையில் குட்டிக்கதை மூலம் எதிர்க்கட்சித் தலைவரின் தந்தையை மறைமுகமாக குறிவைப்பதும், அதற்கு பதிலாக எதிர்க்கட்சித் தலைவர் முதல்வரின் குடும்ப வாழ்க்கையை இழுத்து பதிலடி கொடுப்பதும், அதையடுத்து "Shame" என்று திரைப்பட விமர்சகர் ஒருவர் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவிப்பதும் - இந்த மூன்று சம்பவங்களும் சேர்ந்து தமிழக அரசியலின் தற்போதைய தரத்தைப் பற்றி பெரிய கேள்வியை எழுப்பியுள்ளன.முதல்வர் விஜய் சொன்ன கதை குட்டி ஸ்டோரி
உதயநிதி ஸ்டாலின் பதிலடி
ப்ளூ சட்டை மாறன் பதிவு
ரசிகர்கள் கருத்து
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்