சென்னை: தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், ஆட்சிப் பொறுப்புகளை தீவிரமாக கவனித்து வருகிறார். தினமும் புதிய திட்டங்கள், திடீர் ஆய்வுகள், அதிகாரிகளுடன் ஆலோசனைகள் என பிஸியாக இயங்கிவரும் அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் பெரிய விவாதமாக மாறி வருகிறது.
அந்த வகையில், இன்று தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறைக்காக புதிதாக கொண்டுவரப்பட்ட 40 வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் விஜய் வழங்கினார். நிகழ்ச்சியில் வாகனங்களின் தரம் எப்படி இருக்கிறது என்பதை நேரடியாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், அவர் தானே ஒரு வாகனத்தை ஓட்டி பார்த்ததார். இதன் வீடியோக்கள் வெளியாகியதும் தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் அதை வைரலாக்கி, "மக்களுக்காக நேரடியாக களத்தில் இறங்கும் முதல்வர்" என பாராட்டத் தொடங்கினர். ஆனால், இதே சம்பவம் எதிர்ப்பாளர்களுக்கு வேறு மாதிரியான ட்ரோல் கன்டென்டாக மாறிவிட்டது. குறிப்பாக பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், இதை கிண்டலாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்து கவனம் ஈர்த்துள்ளார். அவரது பதிவில், "தன் கையால் தானே மதிய உணவு சாப்பிட்டதை தொடர்ந்து... தன் கையால் தானே வண்டி ஓட்டினார்... வைரலாகும் வீடியோ" என்று நக்கலாக குறிப்பிட்டுள்ளார். இந்த ஒரு வரி பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே முதலமைச்சர் விஜய்யின் சில நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள், "இவை அனைத்தும் வெறும் இமேஜ் பில்டப் அரசியல்" என்று விமர்சித்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவு அந்த விவாதத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது. மறுபுறம் விஜய் ஆதரவாளர்கள், "ஒரு முதல்வர் நேரடியாக சென்று பார்ப்பதும் தவறா?", "எதையும் விமர்சிக்கத்தான் பார்க்கிறார்கள்" என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். சிலர் ப்ளூ சட்டை மாறனின் பதிவை ரசித்து பகிர, இன்னும் சிலர் இது தேவையில்லாத கிண்டல் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சினிமாவில் விமர்சனங்களால் சர்ச்சையை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன், இப்போது அரசியல் விஷயத்திலும் ஒரே ஒரு பதிவால் இணையத்தை பரபரப்பாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.விஜய் செய்த செயல்
ப்ளூ சட்டை மாறன் பதிவு
ரசிகர்கள் கருத்து