சட்டசபையா... பட்டிமன்றமா? அப்பா, மனைவி பற்றி எல்லாம் ஏன் பேசுறீங்க? கூல் சுரேஷ் பேச்சு.. திட்டி தீர்க்கும் ரசிகர்கள்


  • சென்னை: எந்தப் படத்தின் புரமோஷனாக இருந்தாலும் அதை வித்தியாசமாக மாற்றி பேச வைப்பதில் நடிகர் கூல் சுரேஷ் வல்லவர். ஒரு காலத்தில் "வெந்து தணிந்தது காடு... வெந்து தணிந்தது காடு" என்ற ஒரு வசனத்தால் சமூக வலைதளங்களை கலக்கிய அவர், இப்போது மீண்டும் அரசியல் பேச்சால் இணையத்தை சூடேற்றியுள்ளார்.

    Advertisement

    சமீபத்தில் 'அனந்தன் காடு' திரைப்படத்தின் புரமோஷனுக்காக ராணுவ வீரர் உடை அணிந்து வந்த கூல் சுரேஷ், படம் பற்றி பேசுவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு பதிலாக, தமிழக சட்டசபையில் நடந்த சமீபத்திய சம்பவங்கள் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    Advertisement

    கூல் சுரேஷ் பேச்சு

    அவர் பேசும்போது, "இது சட்டசபையா... பட்டிமன்றமா எனக்கே புரியல. மக்கள் வாக்களித்து ஒருவரை முதலமைச்சராகவும், இன்னொருவரை எதிர்க்கட்சித் தலைவராகவும் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் உள்ளே போன பிறகு மக்களின் பிரச்சினையை பேசுவதற்கு பதிலாக, ஒருத்தர் அப்பாவை பற்றி பேசுறாரு... இன்னொருத்தர் மனைவியை பற்றி பேசுறாரு. இதெல்லாம் சரியா?" என்று கேள்வி எழுப்பினார்.

    சட்டசபை பஞ்சாயத்து

    அதோடு, "'நீ என்னை விமர்சிச்சா... நான் உன்னை விமர்சிப்பேன்' என்ற மாதிரி பேசுறது, 'சோபா மாடல் ஆட்சி'ன்னு ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் பண்றது எல்லாம் மக்கள் எதிர்பார்த்த அரசியல் இல்லை. சட்டசபை மக்களின் குரல் ஒலிக்க வேண்டிய இடம்; தனிப்பட்ட விமர்சனங்கள் நடக்கும் மேடை கிடையாது" என்றும் கூறினார்.

    Advertisement

    ரீல்ஸ் ஆட்சி

    சமீபத்தில் முதலமைச்சர் விஜய் அரசு பேருந்து சேவையை தொடங்கி வைத்தபோது பொதுமக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்ததும், வீடியோ பதிவு செய்ததும் சமூக வலைதளங்களில் வைரலானது. அதை சிலர் "ரீல்ஸ் ஆட்சி" என்று விமர்சித்ததையும் குறிப்பிட்ட கூல் சுரேஷ், "மக்களோடு மக்களாக கலந்துக்கிற ஒரு முதலமைச்சரை ஏன் குறை சொல்லணும்? அவர் நம்மோடு நின்று புகைப்படம் எடுக்கிறார் என்றால் அது மக்களுக்கு பெருமைதானே. எதையாவது பேசணும் என்பதற்காக விமர்சனம் செய்யக்கூடாது" என்று தெரிவித்தார்.

    கூல் சுரேஷின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு தரப்பினர், "மக்கள் நினைப்பதை நேரடியாக சொல்லிட்டாரு", "சட்டசபை மக்களுக்காக இயங்கணும் என்பதைத்தான் நினைவூட்டியிருக்கிறார்" என்று பாராட்டி வருகிறார்கள்.

    Advertisement

    ரசிகர்கள் கருத்து

    ஆனால் மற்றொரு தரப்பினர், "சுரேஷ் கருத்து தெரிவிப்பது இருக்கட்டும் ஆனால் அவர் பிரமோஷனுக்கு அணிந்து வந்த உடை சரியா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதாவது, ராணுவ உடை என்பது மரியாதைக்குரிய சின்னம். திரைப்பட புரமோஷனுக்காக அந்த உடையை பயன்படுத்துவது சரியல்ல", "சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்" என்றும் விமர்சித்து வருகின்றனர்.

    விஜய்யை நேருக்கு நேர் கேள்வி கேட்டதும்.. எவ வேலு வீட்டுக்கு ரெய்டு வந்துட்டாங்க.. சின்ன பசங்க! ஆர்எஸ் பாரதி

    இதற்கு முன்பும் 'ஆட்டி' திரைப்படத்தின் புரமோஷனுக்காக சிங்கப்பெண் போலீஸ் படை உடை அணிந்து வந்த கூல் சுரேஷ் பெரும் விவாதத்தை கிளப்பியிருந்தார். தற்போது ராணுவ உடையில் வந்து அரசியல் குறித்து பேசியிருப்பதும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    ஒருபுறம் அவரது கருத்துக்கு ஆதரவு குவிந்தாலும், மறுபுறம் அவர் தேர்வு செய்யும் புரமோஷன் முறைகள் குறித்து விமர்சனங்களும் அதிகரித்துள்ளன. இதனால், 'அனந்தன் காடு' படத்தை விட கூல் சுரேஷின் பேச்சும், உடையும் தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

    English Summary

    Cool Suresh: Actor Cool Suresh has landed in controversy after speaking about the recent debates in the Tamil Nadu Assembly during the promotion of his upcoming film Ananthan Kaadu. Questioning whether the Assembly had turned into a debate stage, he criticized politicians for discussing personal issues instead of public welfare. He also defended Chief Minister Vijay against criticism over interacting with the public during official events.While some social media users praised Cool Suresh for voicing public concerns, others criticized him for wearing an army uniform as part of the film's promotional campaign, arguing that military attire should not be used for publicity. As a result, both his comments and promotional style have become major talking points online.