கொச்சி: மலையாள திரையுலகில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ள AMMA (Association of Malayalam Movie Artists) சங்க விவகாரம் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. 'திரிஷ்யம்' படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடம் பிரபலமான நடிகை அன்சிபா ஹசன், நடிகர் டினி டாமுக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தற்போது கேரள திரையுலகையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளன.
மோகன்லாலின் மகளாக 'திரிஷ்யம்' படத்தில் நடித்த அன்சிபா ஹசன், சில மாதங்களுக்கு முன்பு AMMA நிர்வாகக் குழுவில் இருந்து திடீரென விலகினார். அப்போது அவர் தனிப்பட்ட காரணங்களை மட்டுமே குறிப்பிட்டிருந்தார். ஆனால் சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், தனது விலகலுக்கு பின்னால் நடிகர் டினி டாம் இருப்பதாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். அன்சிபாவின் குற்றச்சாட்டுப்படி, டினி டாம் தன்னை "ஜிகாதி" என்று அழைத்ததாகவும், தனது மத நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் கூறியுள்ளார். மேலும், திரையுலகில் சிலருடன் தன்னை இணைத்து பொய்யான வதந்திகளையும் பரப்பியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தை AMMA அமைப்புக்குள் பேசிப் பயனில்லை என்று கூறிய அன்சிபா, இனிமேல் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார். அதற்காக கேரள காவல்துறை மற்றும் மாநில உள்துறை அமைச்சரிடம் நேரடியாக புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். "இந்த நாட்டில் சட்டமும் இருக்கிறது, நீதிமன்றங்களும் இருக்கின்றன. எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நீதி வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட விதமும் தனக்கு மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறியுள்ள அவர், சம்பந்தப்பட்ட பெண் காவல் நிலைய அதிகாரி மீதும் புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்சிபாவின் குற்றச்சாட்டுகளை நடிகர் டினி டாம் முற்றிலும் மறுத்துள்ளார். "அன்சிபா எனக்கு தங்கையைப் போன்றவர். நான் ஒருபோதும் அவரை அவமதிக்கும் வகையில் பேசவில்லை. அவர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை" என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும், AMMA அமைப்புக்குள் யாரோ ஒருவர் திட்டமிட்டு தன்னை சிக்க வைக்க முயற்சிப்பதாகவும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக சங்கத்தில் இருந்து வரும் தன்மீது இதுவரை இத்தகைய குற்றச்சாட்டு எதுவும் வரவில்லை என்றும் டினி டாம் கூறியுள்ளார். இந்த நிலையில் அன்சிபா ஹாசன் கேரள முதல்வரிடம் புதிய புகார் கொடுத்திருக்கிறார். அதில் தன்மீது பொய் புகார் அளித்த சங்க துணை தலைவர் லட்சுமி, பிரியா காவல் நிலையத்தில் வைத்து தன்னை மனரீதியாக துன்புறுத்திய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரேஷ்மா மற்றும் இந்த விவாகரத்தில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட சங்க தலைவர் ஸ்வேதா மேனன் ஆகிய மூவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி அதில் வேண்டுகோள் வைத்து இருக்கிறார். மலையாள திரையுலகின் முக்கிய நடிகர் சங்கமாக இருக்கும் AMMA-வில் இவ்வளவு பெரிய மோதல் வெடித்திருப்பது அரசியல் வட்டாரங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இரு தரப்பாக பிரிந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு தரப்பு அன்சிபாவுக்கு ஆதரவு தெரிவித்து வர, மற்றொரு தரப்பு டினி டாமை ஆதரித்து வருகிறது. 'திரிஷ்யம் 3' வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் மலையாள சினிமாவுக்கு, தற்போது இந்த AMMA சர்ச்சை புதிய தலைவலியாக மாறியுள்ளது. சங்கத்திற்குள் தீர்க்க வேண்டிய பிரச்சனை தற்போது காவல்துறை, நீதிமன்றம் மற்றும் அரசியல் மட்டம் வரை செல்லும் சூழல் உருவாகியுள்ளதால், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒரு நடிகையின் புகாரால் தொடங்கிய இந்த விவகாரம், மலையாள நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தையே கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், வரவிருக்கும் நாட்களில் இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.AMMA சங்கத்தில் தொடங்கிய மோதல்
போலீசில் புகார்
டினி டாம் தரப்பின் பதில்
திரிஷ்யம் 3 எப்படி இருக்கு? கதை இதுதான்... ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது
திரிஷ்யம் நடிகையால் வெடித்த புதிய புயல்