சென்னை: பாரதிராஜா தனியாகக் கஷ்டப்பட்டு, தூக்கத்திலேயே அவரது ஆன்மாவும் பிரிந்துவிட்டது. இது மிகவும் கொடுமையான விஷயம். அவர் மறைந்தாலும், தனது மகன் மனோஜின் குடும்பத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற அவரது கடைசி ஆசையாவது இனி நிறைவேற்றப்பட வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
media circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள வெங்கடேச்ன், "பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த இயக்குனர் கங்கை அமரன், அங்கிருந்த குடும்பத்தினரை நோக்கி, "கடைசியில எல்லாரும் அவரை அனாதையாகத் தவிக்க விட்டுட்டு போயிட்டீங்க இல்லை?" என்று ஆவேசமாகத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பாரதிராஜாவும் கங்கை அமரனும் ஆரம்ப காலத்தில் வறுமையைப் பகிர்ந்து கொண்டு வளர்ந்த நண்பர்கள் என்பதால், அந்த நட்பின் உரிமையிலேயே அவர் அங்கு கோபமாகப் பேசினார். இந்த ஒட்டுமொத்த சூழ்நிலைக்கும் காரணம், பாரதிராஜாவின் மகன் மனோஜின் இழப்பும், அதைத் தொடர்ந்து எழுந்த சொத்துப் பிரச்சினைகளுமே முக்கியக் காரணங்களாகும். சினிமாவில் பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் போன ஏக்கத்தில், மனோஜ் கடுமையான குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். ஒரே மகனின் இழப்பை பாரதிராஜாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. "மகன் உயிரோடு இருந்தபோதே அவனுக்குரிய சொத்தைப் பிரித்துக் கொடுத்து ஆதரவாக இருந்திருக்கலாமே, அப்படிச் செய்திருந்தால் அவன் நம்மை விட்டுப் பிரிந்திருக்க மாட்டானே" என்ற குற்ற உணர்ச்சியும், கேள்விகளும் அவரது மனசாட்சியைத் தொடர்ந்து உலுக்கிக் கொண்டே இருந்தன. மனோஜின் மறைவிற்கு பிறகாவது, சென்னை நீலாங்கரையில் உள்ள பல கோடிகள் மதிப்புள்ள பங்களா உள்ளிட்ட சொத்துக்களில், மனோஜிற்குச் சேர வேண்டிய பங்கை அவனது மனைவி மற்றும் 2 பெண் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட பாரதிராஜா விரும்பினார். ஆனால், மனோஜே இறந்துவிட்ட பிறகு, அவனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஏன் சொத்தைக் கொடுக்க வேண்டும்? என்று சொல்லி பாரதிராஜாவின் சுற்றத்தாரும் உறவினர்களும் அந்த சொத்துக்களை போய் சேர விடாமல் தடுத்தனர். இது ரொம்பா கொடுமையான விஷயம். தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தை தன் மகனின் வாரிசுகளுக்கு கூட கொடுக்க விடாமல் உறவினர்கள் முடக்கியதாக தெரிகிறது.. இதனாலும் பாரதிராஜா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். அந்த மனவலியின் காரணமாகவே அவர் படுக்கையில் விழுந்து, தன் சுயநினைவை முழுமையாக இழந்தார். மனிதன் வாழும் போது பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தாலும், இறந்த பிறகு அவனுக்குச் சொந்தமாவது ஆறடி நிலம் மட்டுமே. இந்த உண்மையை நாம் கண்ணெதிரே பல சம்பவங்களில் பார்த்துள்ளோம். இவ்வளவு சொத்துக்கள் இருந்தும் பாரதிராஜாவும், அவரது மகன் மனோஜும் இன்று உயிரோடு இல்லை. இந்தச் சொத்துக்களை இனி யார் அனுபவிக்கப் போகிறார்கள் என்றே தெரியவில்லை. எல்லாவற்றையும் விட வேதனையான விஷயம் என்னவென்றால், தமிழ் சினிமாவையே மாற்றி அமைத்த ஒரு மாபெரும் ஜாம்பவான் மரணமடையும் போது, அவரது ரத்த சொந்தங்கள் யாரும் அருகில் இல்லை. அவரது மகள் மலேசியாவிலும், மனைவி தேனியிலும், மருமகள் வேறொரு இடத்திலும் தனித்தனியாக வசித்து வந்தனர். கடைசி காலத்தில் அவருக்கு உதவி செய்ய சொந்த பந்தங்கள் இல்லாமல், பணம் கொடுத்து நியமிக்கப்பட்ட ஹோம் நர்ஸ், வேலைக்காரர்களுமே அருகில் இருந்து கவனித்துக் கொள்ளும் அவல நிலை ஏற்பட்டது. பாரதிராஜா மலேசியாவில் இருந்தபோதே, தன் சொந்த மகளையே அடையாளம் தெரியாத அளவுக்குச் சுயநினைவை முழுமையாக இழக்கத் தொடங்கினார். அந்த காலகட்டத்தில்தான் அவருடைய சொத்துக்கள் கைமாறியதாக கூறப்படுகிறது. அந்த சொத்துக்கள் அனைத்தும் முறையாக பிரித்து கொடுக்கப்பட்டதா அல்லது மனைவி, மகள், மருமகள் ஆகிய 3 பேரில் யாருக்கு சென்றது என்பது இன்னும் மிகப்பெரிய கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. பாரதிராஜாவிற்கு சொந்தமான 400 முதல் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒட்டுமொத்த சொத்தில், அவர்களுக்கு மிகக் குறைந்த அளவாக வெறும் 10 முதல் 15 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்து செட்டில்மென்ட் செய்ததாக ஒரு தகவலும் உள்ளது. இதை பற்றியும் உறுதியாக தெரியவில்லை. ஆனால், பாரதிராஜாவின் இறுதிப் பயணத்தில் சொந்த பந்தங்கள் யாரும் அருகில் இல்லாத இந்த அவல நிலையைக் கண்டுதான், அங்கு அஞ்சலி செலுத்த வந்த இயக்குனர் கங்கை அமரன் கடுமையான ஆவேசமடைந்தார். கங்கை அமரன் ஆதங்கப்பட்டதை நாம் ஏற்றுக்கொண்டாலும், பாரதிராஜா தனிமையில் கஷ்டப்படுகிறார், சுயநினைவை இழந்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் இத்தனை நெருங்கிய நண்பர்களுக்கு முன்பே தெரிந்திருந்ததே? அவர் உயிரோடு இருந்தபோதே ஏன் அவர்கள் தலையிட்டு உதவி செய்யவில்லை? மனோஜின் வாரிசுகளான 2 பேத்திகளுக்கும் தாத்தாவின் சொத்தில் சட்டப்படி உரிமையும் உள்ளது. எனவே அவரது குடும்பத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற பாரதிராஜாவின் கடைசி ஆசையாவது இனி நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும், பாரதிராஜா போன்ற மாபெரும் ஜாம்பவான்கள் மறைந்த பிறகு, அவர்களது பர்சனல் வாழ்க்கையை சமூக வலைத்தளங்களில் தேவையற்ற முறையில் நோண்டிப் பார்த்து நெகட்டிவாகப் பேசுவது என்பது மிகவும் தவறான விஷயம். எனவே அதை விட்டுவிட்டு, கிராமத்து சடங்குகளை உடைத்தெறிந்து எடுத்த புதுமைப் பெண் படம் குறித்தும், கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசுக்கொலை செய்யும் கொடூரத்தை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டிய கருத்தம்மா படத்தை குறித்தும் நாம் பேச வேண்டும். கேரளா அரசு அங்குள்ள சிறந்த இயக்குனர்களுக்கு 'ராமு காரியத்' பெயரில் விருது வழங்குவது போலவும், மத்திய அரசு 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்குவது போலவும், தமிழக அரசும் இனி வரும் காலங்களில் சிறந்த திரையுலக சாதனையாளர்களுக்கு 'பாரதிராஜா விருது' என்ற பெயரில் விருதுகளை வழங்க வேண்டும். அதுமட்டுமன்றி, சென்னையில் ஒரு குறிப்பிட்ட அழகான இடத்தில் அவருக்கு அரசு சார்பில் வெண்கலச் சிலை அமைப்பதுதான் நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்..மகன் மனோஜ் இழப்பு
பாரதிராஜா வீட்டில் சொத்து பிரச்சனை
மனைவி தேனி, மருமகள் வேறு இடம்
கங்கை அமரன் கோபப்பட்டது ஏன்
பர்சனல் ஏன் பேசணும்