சென்னை: இந்திய திரையிசை வரலாற்றில் அழியாத தடம் பதித்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, இசைஞானி இளையராஜா பகிர்ந்த உருக்கமான வீடியோ ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றிய நண்பர், சக கலைஞர் மற்றும் இசையின் உயிராக இருந்த எஸ்பிபி குறித்து இளையராஜா பகிர்ந்த அரிதான தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஜூன் 4-ம் தேதி எஸ்பிபியின் பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனும், இசையமைப்பாளர் இளையராஜாவும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் சிறப்பு பதிவுகளை பகிர்ந்தனர். ஆனால் அதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது இளையராஜாவின் குரல் பதிவு தான்.
தனது பதிவில் இளையராஜா, "ஒரு கம்போசரோட மனசுல என்ன ஓடுதுன்னு எஸ்பிபி அளவுக்கு யாராலயும் அவ்வளவு சீக்கிரம் புரிஞ்சுக்க முடியாது. மைக் முன்னாடி நின்னுட்டாருன்னா அந்த பாட்டுக்குள்ள உயிரையே கொண்டு வந்து கொட்டிடுவாரு" என குறிப்பிட்டிருந்தார். ஒரு இசையமைப்பாளர் நினைப்பதை அப்படியே குரலில் வெளிப்படுத்தும் அபூர்வ திறமை எஸ்பிபியிடம் இருந்ததாக இளையராஜா கூறியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் பேசிய இளையராஜா, "எஸ்பிபியின் குரலுக்கு நிகரான குரல் யாருக்கும் இல்லை. பலர் அவரை போல பாட முயற்சிக்கிறார்கள். ஆனால் அவருடைய குரலுக்கு அருகில் கூட செல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனால் அவருடைய குரலை காப்பி அடிக்கவே முடியாது" என்று தெரிவித்தார். பாடும் திறமை மட்டுமல்ல, ஒரு பாடலுக்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடுதான் அவரை மற்றவர்களிடம் இருந்து தனித்து நிறுத்தியது என்றும் இளையராஜா கூறியுள்ளார். தமிழ் சினிமா இசை வரலாற்றில் இளையராஜா - எஸ்பிபி கூட்டணி தனி அத்தியாயமாகவே பார்க்கப்படுகிறது. 80ஸ் மற்றும் 90ஸ்-களில் ரசிகர்களின் இதயங்களை வென்ற ஏராளமான பாடல்கள் இந்த கூட்டணியில் உருவாகின. அதனால்தான் தனது இசையில் ஆண்கள் மட்டும் பாட வேண்டிய பல முக்கிய பாடல்களை எஸ்பிபிக்கே கொடுத்ததாக இளையராஜா கூறியுள்ளார். "அது அவரது புகழுக்காக அல்ல... அவரது திறமைக்காக" என்று அவர் குறிப்பிட்டிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு பாடலுக்குள் எந்த உணர்வு வர வேண்டும் என்று தான் நினைப்பேனோ, அதை மிகவும் நேர்த்தியாக வெளிப்படுத்தி கொடுப்பவர் எஸ்பிபி என இளையராஜா தெரிவித்துள்ளார். அதனால் தான் பாடகர் என்ற உறவை தாண்டி, கலைஞராக எஸ்பிபியின் திறமை தன்னை அதிகமாக ஈர்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். எஸ்பிபி தனது வாழ்நாளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருப்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் அந்த சாதனை குறித்து இளையராஜா கூறிய கருத்து தற்போது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. "50 ஆயிரம் பாடல்களை பாடியிருக்கிறார் என்றால் அது அவரது திறமையால்தான். இந்த சாதனையை யாராலும் நெருங்க கூட முடியாது. வார்த்தைகளாலும் கற்பனைகளாலும் அவரது புகழை விவரிக்க முடியாது" என்று அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் எஸ்பிபி மறைந்து பல ஆண்டுகள் கடந்தாலும், அவரது இழப்பு இன்னும் இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத வெற்றிடமாகவே இருப்பதாக இளையராஜா தெரிவித்துள்ளார். "பாலு இல்லாமல் இருப்பது என் மனதில் இன்னும் ஒரு வெற்றிடமாகவே இருக்கிறது" என்ற அவரது ஒரு வரி, இருவருக்கும் இடையே இருந்த நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தியுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து என்ற பெயரில் சாதாரணமாக ஒரு பதிவு வெளியிடாமல், தனது மனதில் இருந்த நினைவுகளையும், எஸ்பிபியின் அபார திறமையையும் உலகுக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளார் இளையராஜா. ஒரு பாடகராக மட்டுமல்லாமல், ஒரு நண்பராகவும், இசையின் உயிராகவும் எஸ்பிபியை நினைவு கூர்ந்த இளையராஜாவின் இந்த உருக்கமான பதிவு, ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "எத்தனை பாடகர்கள் வந்தாலும் எஸ்பிபியின் திறமைக்கு அருகில் கூட நெருங்க முடியாது" என்ற இளையராஜாவின் வார்த்தைகள், எஸ்பிபி ஏன் ஒரு சகாப்தம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன.கம்போசரின் மனசை படிச்ச மனிதர்
குரலை காப்பி அடிக்கவே முடியாது
வெற்றியில் இருந்த எஸ்பிபி
இளையராஜாவின் பாராட்டு
50 ஆயிரம் பாடல்கள்
காற்றின் முகவரி, கானக் குயில் எஸ் பி பாலசுப்பிரமணியம் பிறந்தநாள்! என்றும் அழியாத 'பாடும் நிலா' எஸ்பிபி!
இன்றும் நிரப்ப முடியாத வெற்றிடம்
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?”
பிறந்தநாள் அஞ்சலி