சென்னை: பிரபல உணவு விமர்சகர் இர்பான் (Irfan's View) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சொந்தமாகப் பிரியாணி தயாரித்து விற்பனை செய்த விவகாரம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மற்றவர்களின் உணவகங்களை விமர்சித்து வந்த இர்பான், அவரே சமைத்து விற்பனை செய்தபோது கடுமையான குளறுபடிகளில் சிக்கியுள்ளார். இது குறித்து media circle இணையதள நேர்காணலில் எழுத்தாளரும், விமர்சகருமான கவிஞர் ராஜகம்பீரன் தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ராஜகம்பீரன் பேசும்போது, "அடுத்தவர்கள் மீது குறை சொல்வது மிகவும் எளிதான விஷயம். இர்பான் அவரே சமைத்து, அவரே வந்து பக்கெட் பிரியாணி விற்பனை செய்தபோது அதன் சுவை மிகவும் சுமாராகவே இருந்துள்ளது.
விலை மட்டும்தான் அதிகமாக இருந்ததே தவிர சுவை என்று ஒன்றுமே கிடையாது என்று பலரும் சொல்லி உள்ளனர். அவர் மற்றவர்களை விமர்சனம் செய்வதற்குப் பதிலாக, மக்கள் இப்போது அவரை விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டனர். அதன் பின்னர், மக்கள் அந்தப் பிரியாணியை எடை போட்டுப் பார்த்திருக்கிறார்கள். அந்த எடையில் பாதி ஆட்டுக்கறியை காணவில்லை. பெரிய பெரிய உணவகங்களில் பிரமாதமான முறையில் பக்கெட் பிரியாணியை 2500 ரூபாய்க்கு விற்கும்போது, இவர் 3200 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்து, அதிலும் இறைச்சித் துண்டுகளைக் காணவில்லை என்கிற விவாதம் எழுந்துள்ளது. 4 கிலோ பிரியாணியில் ஒரு கிலோ கறி இருப்பதாக சொல்கிறார். ஆனால் உண்மையில் அங்கு 700 கிராம் கறி மட்டும்தான் இருந்திருக்கிறது. இதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்தப் பிரியாணியை வாங்குவதற்காகச் சக யூடியூபர் ஒருவர் சென்றுள்ளார். கண்டிப்பாக இர்பானுக்கும் அவரைத் தெரிந்திருக்கும். அவர் பிரியாணி வாங்கச் சென்றபோது, அவரைப் பார்த்து இர்பான் 'நீங்கள் யார்?' என்று கேட்கிறார். அவரைப் பார்த்ததும் 'உங்களைத் தெரியும், வாருங்கள்' என்று அன்போடு அழைத்திருக்கலாம். ஆனால், அவரைத் தெரியாதது போல ஒருவித நக்கல் தொனியுடன் இர்பான் நடந்து கொண்டார். இவ்வளவு கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியிலும், அவர் அறிவித்த உடனே பிரியாணி அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டது என்பதுதான் உண்மை. மக்கள் அதை முண்டியடித்துக் கொண்டு வாங்கினார்கள் என்றாலும், இறுதிவரை அது ஒரு பெரிய விமர்சனத்திற்குரிய விஷயமாகவே மாறிவிட்டது. பொதுவாக, தன் மீது இவ்வளவு குற்றச்சாட்டுகள் வரும்போது நியாயமாக அவர் என்ன செய்திருக்க வேண்டும்? வாடிக்கையாளர்களின் பணத்தைத் திரும்பக் கொடுத்திருக்க வேண்டும் அல்லது அதற்குரிய விளக்கத்தையாவது அளித்திருக்க வேண்டும். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் கச்சேரியில் ஒரு பிரச்சனை ஏற்பட்டபோது, வாங்கிய தொகையைத் திரும்பக் கொடுத்தார்கள். நீங்கள் சில உணவகங்களுக்குச் சாப்பிடச் செல்லும்போது, உணவில் ஏதேனும் குறைபாடு இருந்தால் உடனடியாகப் பணத்தைத் திரும்பக் கொடுப்பார்கள் அல்லது உணவை மாற்றிக் கொடுப்பார்கள். தேடி வரும் வாடிக்கையாளரின் மனம் புண்படக் கூடாது, அவர் மீண்டும் நம் கடைக்கு வர வேண்டும் என்பதுதான் ஒரு வியாபாரியின் நோக்கமாக இருக்கும். ஆனால், இர்பானைப் பொறுத்தவரை, அவர் தொடர்ந்து இந்த உணவு வியாபாரத்தைச் செய்யப் போவதில்லை. அவருக்கு இப்போது ஊடகங்களில் முதன்மையாக இருக்க வேண்டும், இன்றைய பஞ்சாயத்தில் அவர் மாட்டியிருக்கிறார், அவ்வளவுதான். அவர் மீண்டும் அடுத்த முறை பிரியாணி விற்க வருவதற்கு இன்னும் ஒரு வருடம் ஆகும், அதற்குள் மக்கள் இதை மறந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார். அதனால்தான் அவர் இந்தச் சர்ச்சை குறித்து எந்த இடத்திலும் வாய் திறக்கவில்லை. சமூக வலைதளங்களில் ஒருவர் இவ்வளவு பிரபலமாக மாறுகிறார் என்றால், அவருக்குச் சமூகப் பொறுப்புணர்வும் சேர்ந்தே வர வேண்டும். நீங்கள் வழங்கும் உணவாக இருந்தாலும் சரி, நீங்கள் பேசும் வார்த்தையாக இருந்தாலும் சரி, அதற்கு நீங்கள்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்." என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.பக்கெட் பிரியாணி
யாரந்த மற்றொரு யூடியூபர்
உணவு வியாபாரம்
வாய் திறக்காத இர்பான்