சென்னை: தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், விநியோகஸ்தர் என பல முகங்களுடன் இருந்த கே. ராஜனின் மறைவு செய்தி தமிழ் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைப்பட உலகில் எந்த பிரச்சனைகளுக்கும் தைரியமாக குரல் கொடுத்து கொண்டிருந்த அவர் இப்படி திடீரென உயிரிழந்தது திரையுலகினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக மாறியுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தி கவனத்தை ஈர்த்துள்ளது. கே. ராஜனின் மறைவு செய்தி தன்னை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். குறிப்பாக சிறு பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரைப்படத் தொழிலாளர்கள் ஆகியோரின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தைரியமாக குரல் கொடுத்தவர் கே. ராஜன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் தற்போதைய நிலை, திரைப்படத் துறையில் இருக்கும் சவால்கள், சிறிய தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கல்கள் போன்றவற்றை எந்த மேடையிலும் வெளிப்படையாக பேச தயங்காதவர் கே. ராஜன் என்றும் விஜய் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். திரைப்படத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் மறக்க முடியாதவை என்றும், அவரது பங்களிப்புகள் தமிழ் சினிமா வரலாற்றில் நிலைத்திருக்கும் என்றும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் தமிழ் திரைப்படத் துறையினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் மன ஆறுதலையும் தெரிவித்துள்ளார். கே. ராஜனின் இழப்பு திரைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத ஒன்று என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார். கே. ராஜன் பற்றி பேசும்போது, அவர் வெறும் தயாரிப்பாளர் மட்டும் அல்ல. பிரம்மச்சாரிகள், நினைக்காத நாளில்லை போன்ற படங்களை தயாரித்தவர். நம்ம ஊரு மாரியம்மா திரைப்படத்தை இயக்கியவர். தங்கமான தங்கச்சி உள்ளிட்ட படங்களில் கதாசிரியராக பணியாற்றியவர். சில படங்களில் நடித்தும், பல திரைப்படங்களை விநியோகித்தும் சினிமாவில் பல துறைகளில் தனது முத்திரையை பதித்தவர். தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம், திரைப்பட அரசியல்என எது பற்றியும் தைரியமாக கருத்து சொல்லும் அவரது பாணி பலராலும் கவனிக்கப்பட்டது. ஆனால் வெளியில் இவ்வளவு உறுதியான மனிதராக இருந்த கே. ராஜன் உள்ளுக்குள் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது மகன் தற்போது கூறியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அவரது மூன்றாவது மகன், "அப்பா கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்தார். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்த சில நண்பர்களை நம்பி அப்பா பணம் கொடுத்திருந்தார். ஆனால் அந்த பணம் எதுவும் திரும்ப வரவில்லை" என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் பேசும்போது, "இது ஒரு நாளில் நடந்த விஷயம் இல்லை. கடந்த ஐந்து வருடங்களாக இந்த பிரச்சனை அப்பாவை வாட்டியது. அந்த பணத்தை திரும்ப பெற பலமுறை முயற்சி செய்தார். ஆனால் பணம் வரவே இல்லை. இந்த மன அழுத்தம் காரணமாக அவருக்கு ஏற்கனவே மாரடைப்பும் ஏற்பட்டது" என்று கூறியுள்ளார். "நானும் நேரடியாக சென்று அந்த பணத்தை கேட்டேன். அப்பாவுக்காக பேசினேன். ஆனாலும் யாரும் திருப்பி கொடுக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுத்து எங்களுக்கு அந்த பணத்தை வாங்கித் தர வேண்டும்" என்றும் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த தகவல்கள் வெளியாகிய பிறகு திரையுலகில் பல கேள்விகள் எழுந்துள்ளன. வெளியில் தைரியமாகத் தெரியும் ஒருவர் உள்ளுக்குள் இவ்வளவு மன வேதனையுடன் இருந்தாரா? நம்பிக்கை வைத்தவர்களால் ஏற்பட்ட ஏமாற்றம்தான் அவரை இவ்வளவு பாதித்ததா? என்ற கேள்விகள் தற்போது பேசப்பட்டு வருகின்றன. கே. ராஜனின் மறைவு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவத்தின் முழு உண்மை என்ன என்பது அடுத்தடுத்த தகவல்களில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக முதல்வர் விஜய் அறிக்கை
கே ராஜன் பயணம்
மன அழுத்தம்
பணம் பிரச்சனை