அப்பா 5 வருடமாக மன கஷ்டத்தில் இருந்தார்! நம்பினவங்க செய்த ஏமாற்றம்.. கண்கலங்க பேசிய கே ராஜன் மகன்


  • சென்னை: தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை செய்து கொண்டது தமிழ் சினிமா உலகத்தையே அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. தற்போதைய தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையில் அவர் youtube சேனல்களிலும் பேட்டி கொடுத்து பிரபலமாக இருந்தார். ஆனால் இந்த தவறான (தற்கொலை) முடிவை எடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை இது குறித்து அவருடைய மகன் கண்கலங்க பேசியிருக்கிறார்.

    Advertisement

    தயாரிப்பாளர் கே ராஜன் மகன் பேட்டி

    கே. ராஜன் சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட திடீர் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பவத்திற்குப் பிறகு அவரது உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவரது உடல் தண்டையார்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    திரைப்பட உலகில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், இயக்குநர், கதாசிரியர், நடிகர் என பல முகங்களுடன் பயணித்த கே. ராஜன் திடீரென உயிரிழந்தது திரையுலகையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் அவரது மகன் செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் தகவல்கள் இந்த சம்பவத்திற்கு புதிய கோணத்தை ஏற்படுத்தியுள்ளன.

    கே. ராஜனின் மகன் பேசும்போது, "என்னுடைய அப்பா கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். நான் அவருடைய மூன்றாவது மகன். அப்பா சாதாரண மனிதர் கிடையாது. தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும், பலருக்காக குரல் கொடுத்தவராகவும் இருந்தவர். ஆனால் அவருடைய மனசுக்குள் இவ்வளவு வேதனை இருந்தது எங்களுக்கு கூட முழுமையாக தெரியவில்லை" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

    Advertisement

    கே ராஜன் இறப்பின் காரணம்

    அவர் தொடர்ந்து பேசும்போது, "திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்த சில நண்பர்களை நம்பி அப்பா பணம் கொடுத்திருந்தார். அது சாதாரண தொகை இல்லை. நம்பிக்கையோடு கொடுத்த பணம். நண்பர்கள் என்பதால், திரையுலகில் பழக்கம் இருந்ததால், ஒரு நம்பிக்கையுடன் கொடுத்திருந்தார். ஆனால் அந்த பணம் எதுவும் திரும்பி வரவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

    "இது ஒரு நாள், இரண்டு நாள் பிரச்சனை இல்லை. கடந்த ஐந்து வருடங்களாக இந்த பிரச்சனை அப்பாவை மனரீதியாக பாதித்து வந்தது. அந்த பணத்தை திரும்பக் கேட்டு அவர் பலமுறை முயற்சி செய்தார். நேரில் கேட்டார். நினைவூட்டினார். ஆனால் எந்த பலனும் இல்லை. பணம் திரும்ப வரவே இல்லை"

    Advertisement

    ஐந்து வருட கஷ்டம்

    இதனால் கே. ராஜன் மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். "இந்த மன உளைச்சலால்தான் ஏற்கனவே அப்பாவுக்கு மாரடைப்பும் ஏற்பட்டது. ஒரு விஷயம் மனிதரை எவ்வளவு உள்ளுக்குள் பாதிக்குமோ, அந்த அளவுக்கு அவர் இந்த பிரச்சனையை மனதில் வைத்திருந்தார்" என்று மகன் உருக்கமாக கூறியுள்ளார்.

    அதோடு, தானும் இந்த விஷயத்தில் தலையிட்டு முயற்சி செய்ததாகவும் தெரிவித்துள்ளார். "நானும் நேரடியாக போய் அந்த பணத்தை கேட்டேன். அப்பாவுக்காக பேசினேன். இத்தனை வருடம் ஆகிவிட்டது, திருப்பி கொடுக்கலாம் என்று கேட்டேன். ஆனால் யாரும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    "எங்களுக்கு அந்த பணம் திரும்ப கிடைத்தால் நல்லது. இது வெறும் பண விஷயம் மட்டும் இல்லை. அப்பாவின் மன அமைதியோடு சம்பந்தப்பட்ட விஷயம். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இதிலே தலையிட்டு நடவடிக்கை எடுத்து அந்த பணத்தை வாங்கித் தர வேண்டும்" என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    85 வயதான கே. ராஜன், தமிழ் சினிமாவில் நீண்ட காலம் இருந்த முக்கியமான நபர். பிரம்மச்சாரிகள், நினைக்காத நாளில்லை போன்ற படங்களை தயாரித்தவர். தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் நம்ம ஊரு மாரியம்மா என்ற படத்தை இயக்கியும் இருந்தார். தங்கமான தங்கச்சி உள்ளிட்ட சில படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார். சில படங்களில் நடித்தும், பல திரைப்படங்களை விநியோகம் செய்தும் திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியிருந்தார்.

    English Summary

    Veteran Tamil film producer K Rajan’s son has emotionally spoken about the personal struggles his father reportedly faced in recent years. According to him, K Rajan had been under severe mental stress for nearly five years due to financial issues involving people he trusted in the film industry. The emotional statement has sparked widespread discussion in the Tamil film fraternity, as many continue to mourn the shocking loss of the veteran producer.