சென்னை: திரை உலகிலும் நிஜ வாழ்விலும் பல்வேறு சவால்களைக் கடந்து வெற்றிகரமாகத் தடம் பதித்த நடிகர் கருணாஸ் மற்றும் அவரது மனைவி கிரேஸ் கருணாஸ் ஆகியோரின் வியக்கத்தக்க வாழ்க்கைப் பயணம் குறித்து, பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சமீபத்தில் சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ளார்.. ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றி அடைகிறான் என்றால் கருணாஸ் மாதிரிதான் அந்த மாற்றங்கள் இருக்க வேண்டும் என்றும் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
media circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, ""நடிகர் கருணாஸின் இந்த இமாலய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம், அவருடைய மனைவி கிரேஸ் தான். கருணாஸ் ஆரம்பக் காலத்தில் "மேஸ்ட்ரோ" என்கிற இசைக்குழுவை நடத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில், அவரோடு சேர்ந்து பாடுவதற்காக வந்தவர்தான் கிரேஸ்.
நிறைய கச்சேரிகளில் இவர்கள் இருவரும் சேர்ந்து பாடினார்கள். அப்போது இவர்களுக்குள் ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டு, ஒரு காதல் மலர்ந்தது. அதன் பிறகு கிரேஸை கருணாஸ் திருமணம் செய்துகொண்டார். கிரேஸைப் பொறுத்தவரைக்கும் எல்லாரிடமும் ரொம்ப அன்பாக, பாசமாக, பிரியமாக பழகக்கூடிய ஒரு நல்ல பெண்மணி. அந்த இசைக்குழுவில் இருந்தவர்கள் எல்லாரும் அவர்களை "அக்கா அக்கா" என்றுதான் பாசமாக கூப்பிடுவார்கள். கருணாஸை திருமணம் செய்துகொண்ட பிறகுதான் கருணாஸின் வாழ்க்கையிலேயே ஒரு ஒளிவட்டம் தெரிய ஆரம்பித்தது. ஏனெனில், அந்த அளவுக்கு அவர்கள் கணவன் மீது அன்பைக் காட்டினார்கள், பாசத்தைக் காட்டினார்கள். கணவனுக்காக உயிரையே கொடுக்கிறார்கள். கருணாஸை ஒரு சரியான மனிதராக வழிநடத்தி, இந்த அளவுக்கு, இவ்வளவு தூரத்திற்கு உயர்த்தியிருப்பது கிரேஸ் தான். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆனதற்கு பிறகு, கோயம்பேடு நூறடி சாலையில் இருக்கிற அம்பிகா எம்பயர் ஹோட்டலை ஒட்டியுள்ள சின்ன தெருவில், ஒரு சிங்கிள் பெட்ரூம் பிளாட்டில் தான் இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் குடியிருந்தார்கள்." கருணாஸ் எப்போதுமே நிறைய தொழில்கள் செய்து, எல்லா தொழிலையும் முயற்சி செய்துதான் அடுத்த இடத்திற்கு வந்தார். ஒருமுறை நான் பெங்களூர் போயிட்டு காரில் சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு ஒரு 11:30 மணி இருக்கும், பயங்கர பசி. குடும்பத்தோடு போயிருந்ததால் ஒரு தரமான உணவகம் இல்லையே என்று தேடிக்கொண்டே வரும்போது, ஸ்ரீபெரம்பத்தூரில் "திண்டுக்கல் சாரதி ஹோட்டல்" என்று ஒரு பெரிய போர்டு கண்ணில் பட்டது. "திண்டுக்கல் சாரதி" என்று ஹோட்டலுக்குப் பெயர் வைத்திருக்கிறார்களே என்று உள்ளே போய் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, அங்கே உணவு பரிமாறியவரிடம் கேட்டேன், "என்னங்க திண்டுக்கல் சாரதி என்று பெயர் இருக்கிறது?" என்று கேட்டதற்கு, "சார் இது நடிகர் கருணாஸ் இருக்கிறாரே, அவருடைய ஹோட்டல், அவர்தான் இதற்கு ஓனர்" என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏற்கனவே வடபழனியில் சினிமா தொழிலாளர்களுக்காகக் குறைந்த விலையில் 'லொடுக்கு பாண்டி மெஸ்' நடத்தியது போல, இங்கேயும் உணவகத் தொழில் செய்திருக்கிறார். அதன் பிறகு 'அம்பாசமுத்திரம் அம்பானி' படத்தை கருணாஸே தான் தயாரித்தார். ஆனால் அந்தப் படம் வணிக ரீதியாக கொஞ்சம் தோல்விப் படம்தான், அதனால் கருணாஸுக்குப் பெரிய நஷ்டம் வந்தது. அதே காலகட்டத்தில் இயக்குனர் ராம் இயக்கிய 'கற்றது தமிழ்' படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையைக் கிட்டத்தட்ட இரண்டே கால் கோடி ரூபாய்க்கு கருணாஸ் வாங்கினார். அந்தப் படம் தரமான படமாக இருந்தாலும், போட்ட பணத்தில் ஒரு பைசா கூட திரும்பி வராத அளவுக்குப் படுதோல்வி அடைந்தது. இரண்டே கால் கோடி ரூபாய் என்பது அந்த காலத்தில் சாதாரண விஷயம் இல்லை, கருணாஸுக்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. ஆனாலும் அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பிறகு முக்குலத்தோர் புலிப்படை கட்சியை ஆரம்பித்து, ஜெயலலிதா அம்மையார் மூலமாக சீட் வாங்கி தேர்தலில் நின்று எம்.எல்.ஏ-வாகவும் மாறினார். ஆரம்பத்தில் இருந்த கருணாஸையும், இப்போது இருக்கிற கருணாஸையும் ஒன்றாக வைத்துப் பார்த்தால் முழுமையாகவே வேறு மாதிரி இருக்கும். ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றி அடைகிறான் என்றால் கருணாஸ் மாதிரிதான் அந்த மாற்றங்கள் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் நான் சொன்னது போல, இன்றைக்கு இவ்வளவு பெரிய இடத்திற்கு கருணாஸ் வந்திருக்கிறார் என்றால் அதற்கு முக்கியமான காரணம் அவருடைய மனைவி கிரேஸ் தான். கருணாஸுக்கு கிரேஸ் மனைவியாக வந்தது இறைவனின் அருள் (God's Grace) என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு கணவனுக்குப் பக்கபலமாகவும், பின்பலமாகவும் இருந்து இவ்வளவு தூரத்திற்கு உயர்த்தி இருக்கிறார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.நடிகர் கருணாஸின் இமாலய வளர்ச்சி
கிரேஸ் கருணாஸ்
திண்டுக்கல் சாரதி ஹோட்டல்
நஷ்டம் ஏற்பட்டாலும் கவலைப்படல
முக்குலத்தோர் புலிப்படை