மாஸ்டர் மகேந்திரன் திடீரென்று மன்னிப்பு கேட்ட காரணம் இதுதானா? பின்னணியில் விழுந்த டோஸ்”!


  • சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தொடங்கி ஹீரோவாக வளர்ந்த மாஸ்டர் மகேந்திரன், கடந்த சில நாட்களாக எந்த திரைப்படத்தாலும் அல்ல, ஒரு மின்வெட்டு பேச்சால் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். முதலில் அவர் பேசிய கருத்துகள் கடுமையான சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது அவர் வெளியிட்ட மன்னிப்பு வீடியோ மேலும் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

    Advertisement

    நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேட்டி

    தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினை குறித்து ஒரு பேட்டியில் பேசும்போது மகேந்திரன், "தமிழ்நாட்டுல மின்வெட்டு இருக்கு... என் வீட்டுலயும் மின்வெட்டு இருக்கு. அதுக்காக முதலமைச்சர் விஜய்யை கேள்வி கேட்டா உங்க வீட்டுக்கு கரண்ட் வந்துருமா? மைக்க நீட்டி கேள்வி கேட்ட உடனே கரண்ட் வந்துருமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

    Advertisement

    அதோடு நிற்காமல், "சோலார் என்று சிலர் கண்டுபிடிச்சுருக்காங்களே அதை பயன்படுத்த வேண்டியதுதானே? ஒரு பல்புக்கு ஒரு சோலார் பேனர் வைத்து அதில் ஒயர் கொடுத்தால் கரண்ட் வந்துட போகுது. எனக்கு அந்த அறிவு இருக்கு. அது எல்லாருக்கும் இல்லனா நாம ஒன்னும் செய்ய முடியாது." என்றும் பேசியிருந்தார்.

    மேலும், "வேணும்னா என் வீட்டில் இருந்து கூட கரண்ட் எடுத்துக்கோங்க. ஆறு மாசத்துக்கு எந்த கேள்விகளையும் கேட்காதீங்க. இதற்கு முந்தைய ஆட்சியிலும் தான் கரண்ட் கட் இருந்துச்சு. அப்ப யாருமே கேட்கலையே. ஏன் இப்ப மட்டும் கேள்வி கேக்குறீங்க?" என்று கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவியது.

    Advertisement

    ட்ரோல் மெட்டீரியல்

    இந்த பேட்டிக்கு பிறகு மீம்கள், ட்ரோல்கள், விமர்சனங்கள் என இணையம் முழுவதும் மகேந்திரன் பெயரே பேசப்பட்டது. "என் வீட்டுல இருந்து கரண்ட் எடுத்துக்கோங்க" என்ற வசனம் பலரது காமெடி வீடியோக்களிலும் இடம்பிடித்தது.

    சர்ச்சை பெரிதாகிய பிறகும் மகேந்திரன் உடனடியாக பின்வாங்கவில்லை. மாறாக தனது கருத்துக்கு விளக்கம் அளித்தபோது, "நான் என்ன சொல்ல வந்தேன்னு புரிஞ்சுக்காதவங்க தான் தற்குறிகள்" என்று கூறியதாக பரவிய கருத்தும் புதிய விவாதத்தை ஏற்படுத்தியது.

    இதனால், "மக்கள் கோபத்தை புரிந்து கொள்ளாமல் இன்னும் பிடிவாதமாக பேசுகிறார்" என்ற விமர்சனங்களும் எழுந்தன. ஆனால் இன்று வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் முற்றிலும் மாறுபட்ட தொனியில் பேசினார் மகேந்திரன்.

    Advertisement

    முடிவில் உறுதி

    அதில் அவர் கூறியதாவது, "கேள்வி கேட்டா கரண்ட் வந்திடுமா என்ற கேள்வியை நான் பொதுமக்களிடம் கேட்கவில்லை. மின்சாரத்தை வைத்து அரசியல் செய்பவர்களிடமும், மக்களின் உணர்ச்சிகளை வைத்து அரசியல் செய்பவர்களிடமும் தான் கேட்டேன்" என்றார்.

    அதன்பிறகு "6 மாதம் கேள்வி கேட்காதீங்க" என்று சொன்னதற்கான காரணத்தையும் விளக்கினார். "விஜய் அண்ணா ஆட்சிக்கு வரும்போது எனக்கு 6 மாதம் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அவர் மீது இருக்கும் அன்பிலும் நம்பிக்கையிலும் தான் நானும் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன்." என்று தெரிவித்தார்.

    மாஸ்டர் மகேந்திரன் பாவம்.. 3 நிமிட வீடியோவால் மாறிய வாழ்க்கை! இனிதான் பிரச்சனை.. சிறகடிக்க ஆசை நடிகர் ஓபன்
    Advertisement

    சோலார் குறித்த சர்ச்சைக்கும் அவர் பதில் அளித்தார். "நான் நல்லா படிச்ச மாணவன் கிடையாது. கஷ்டப்பட்டு பள்ளிப்படிப்பை முடித்தவன். படிக்க முடியாமல் பாதியிலேயே ஓடி வந்த சாதாரண மாணவன். அதனால வார்த்தை பிழை வந்திருக்கலாம்." என்று கூறிய அவர்,

    "2015 முதல் கொச்சி விமான நிலையம் முழுவதும் சோலார் எனர்ஜியில் இயங்கி வருகிறது. அந்த மாதிரி மாற்று மின்சார திட்டங்கள் அதிகரிக்க வேண்டும் என்பதைத்தான் சொல்ல வந்தேன்."
    என்றும் விளக்கம் அளித்தார்.

    மக்களிடம் மன்னிப்பு கேட்பு

    அதன்பிறகு மக்களை நோக்கி மிகவும் உணர்ச்சிகரமாக பேசிய மகேந்திரன், "மக்களின் கஷ்டத்தை பார்த்து நான் சிரிக்கிறேன் என்ற பட்டத்தை எனக்கு கொடுக்காதீர்கள்." "நான் இன்று ஒரு வேளை சாப்பிடுகிறேன் என்றால் அதற்கு காரணம் மக்கள் தான். என்னுடைய பேச்சு யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மனதார வருத்தம் தெரிவிக்கிறேன்."எனது மக்களிடம் மன்னிப்பு கேட்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை." என்று கூறினார்.

    Advertisement

    இந்த மன்னிப்பு வீடியோ வெளியான பிறகுதான் புதிய கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன. நேற்று வரை தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக கூறியவர், இன்று திடீரென மன்னிப்பு கேட்பதற்கு என்ன காரணம் என்பதே தற்போது இணையத்தில் பேசப்படும் முக்கிய விஷயமாக மாறியுள்ளது.

    கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம்

    பின்னணி காரணம்

    இதற்கிடையில் திரையுலக மற்றும் அரசியல் வட்டாரங்களில் சில தகவல்களும் பரவி வருகின்றன. மக்களின் அன்றாட பிரச்சினையை பற்றி பேசும்போது வார்த்தைகளில் கூடுதல் கவனம் தேவை என்றும், பொதுமக்களின் கோபத்தை புரிந்து கொள்ளாமல் பேசுவது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மகேந்திரனுக்கு தவெகவின் தலைமை தரப்பிலிருந்து அறிவுறுத்தல்கள் சென்றதாக கூறப்படுகிறது.

    மேலும், தொடர்ந்து வந்த ட்ரோல்கள், எதிர்மறை விமர்சனங்கள், ரசிகர்களின் அதிருப்தி மற்றும் சமூக வலைதளங்களில் ஏற்பட்ட அழுத்தம் ஆகியவை அவரை மீண்டும் விளக்கம் அளிக்க வைத்ததாகவும் பேசப்படுகிறது.

    ஒரு சில நிமிட பேட்டியால் தொடங்கிய இந்த சர்ச்சை, தற்போது மன்னிப்பு வீடியோ வரை வந்து சேர்ந்திருக்கிறது. ஆனால் மகேந்திரனின் விளக்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா அல்லது இந்த விவாதம் இன்னும் தொடருமா என்பதுதான் இப்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படும் கேள்வியாக உள்ளது.

    English Summary

    Master Mahendran: Actor Master Mahendran, who recently found himself at the center of a major social media controversy, has released an emotional apology video following criticism over his comments on power outages.The controversy began when Mahendran questioned whether asking Chief Minister C. Joseph Vijay about power cuts would immediately restore electricity to people's homes. His remarks about solar power solutions and his statement asking people not to question the government for six months quickly went viral, drawing criticism, memes, and trolling across social media platforms.As the backlash intensified, Mahendran initially defended his position and attempted to clarify his comments. However, in his latest video, he adopted a noticeably softer tone. He explained that his remarks were directed at those allegedly politicising public issues rather than ordinary citizens. He also stated that his reference to six months was inspired by Vijay's request for time to implement changes after assuming office.Addressing criticism over his solar power comments, Mahendran admitted that he may not have expressed himself clearly and said he was only trying to highlight alternative energy solutions, citing the example of solar-powered infrastructure. He further stressed that he never intended to mock people's hardships.In the most emotional part of the video, Mahendran directly addressed the public, saying that he earns his livelihood because of the people and would never intentionally hurt them. He expressed regret if his words had offended anyone and openly apologised to the public.