சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள மாஸ்டர் மகேந்திரன், கடந்த சில நாட்களாக சினிமா செய்திகளில் அல்ல... சமூக வலைதள ட்ரோல்களில்தான் அதிகமாக இடம்பிடித்து வருகிறார்.
சென்னையில் நிலவி வரும் மின்தடை பிரச்சினை குறித்து அவர் பேசிய ஒரு வீடியோ, தற்போது அவரை இணைய உலகின் ஹாட் டாபிக்காக மாற்றியுள்ளது. ஒரு பக்கம் மக்கள் மின்வெட்டால் அவதிப்படுவதாக புகார்கள் எழுந்து கொண்டிருக்க, மற்றொரு பக்கம் மகேந்திரன் கூறிய சில கருத்துகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவின.
சென்னையில் நிலவி வரும் மின்தடை பிரச்சினை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மாஸ்டர் மகேந்திரன், "தமிழ்நாட்டுல மின்வெட்டு இருக்கு... என் வீட்டுலயும் மின்வெட்டு இருக்கு. அதுக்காக முதலமைச்சர் விஜய்யை கேள்வி கேட்டா உங்க வீட்டுக்கு கரண்ட் வந்துருமா?" என்று பேசியிருந்தார்.
அதோடு நிற்காமல், "சோலார் வசதி இருக்கு. ஒரு பல்புக்கு ஒரு சோலார் பேனல் போட்டாலே கரண்ட் கிடைக்கும். வேணும்னா என் வீட்டுல இருந்து கூட கரண்ட் எடுத்துக்கோங்க. ஆறு மாதம் கேள்வி கேட்காதீங்க" என்றும் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றது. ஆனால் அவர் எதிர்பார்த்த ஆதரவை விட, கடுமையான விமர்சனங்களே அதிகமாக வந்தன. "ஒரு மாதம் கரண்ட் இல்லாமல் வாழ்ந்து காட்ட முடியுமா?", "மக்களின் பிரச்சினையை புரியாமல் பேசுகிறார்" என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதன் காரணமாக மாஸ்டர் மகேந்திரன் சமூக வலைதளங்களில் ட்ரோல் மெட்டீரியலாக மாறினார். மீம்ஸ், ட்ரோல் வீடியோக்கள், நையாண்டி பதிவுகள் என அவரது பேச்சு இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. இந்த சூழ்நிலையில் தற்போது அவர் தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். "நான் சொன்னதை முழுமையாக யாரும் கேட்கவில்லை. சில விநாடிகள் மட்டுமே வெட்டி எடுத்து பரப்பியதால் தவறான புரிதல் உருவாகிவிட்டது. நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. யாருக்காகவும் பேசவில்லை. எதிர்காலத்தில் மின்சார பிரச்சினைக்கு தீர்வாக சூரிய ஒளி மின்சாரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதைத்தான் கூறினேன். கொச்சி விமான நிலையம் முழுவதும் சோலார் மின்சாரத்தில் இயங்குகிறது. அதுபோல தமிழகத்திலும் மாற்று மின்சார திட்டங்களை அதிகரிக்க வேண்டும் என்பதையே நான் குறிப்பிட்டேன். ஆனால் அதை வேறு விதமாக சித்தரித்து விட்டார்கள்" என்று கூறியுள்ளார். மேலும், "உண்மையை முழுமையாக அறியாமல் விமர்சிப்பது வருத்தமளிக்கிறது. நான் சொன்ன கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. நான் கூறியது மக்களுக்கு எதிரானது அல்ல. எதிர்காலத் தீர்வு குறித்து சொன்ன கருத்துதான்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மாஸ்டர் மகேந்திரனின் இந்த விளக்கமும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு தரப்பு, "அவர் பேசியதை தவறாக புரிந்து கொண்டார்கள்" என ஆதரவு தெரிவிக்க, மற்றொரு தரப்பு "மக்கள் சந்திக்கும் பிரச்சினையை லேசாக எடுத்துப் பேசக் கூடாது" என தொடர்ந்து விமர்சித்து வருகிறது. குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களின் அன்பை பெற்ற மாஸ்டர் மகேந்திரன், தற்போது ஒரு அரசியல் சார்ந்த கருத்தால் இணையத்தின் ஹாட் டாப்பிக்காக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சர்ச்சை இன்னும் சில நாட்கள் சமூக வலைதளங்களில் பேசப்படும் விஷயமாகவே இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மாஸ்டர் மகேந்திரன் பேட்டி
சர்ச்சைக்கு விளக்கம்
மாஸ்டர் மகேந்திரன் பாவம்.. 3 நிமிட வீடியோவால் மாறிய வாழ்க்கை! இனிதான் பிரச்சனை.. சிறகடிக்க ஆசை நடிகர் ஓபன்
கரண்ட் கட் பிரச்சனை