சென்னை: இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருடனான தனது திரைப்பயண நினைவுகளையும், "மருதுபாண்டி" படம் உருவானபோது நடந்த சுவாரசியமான தகவல்களையும் இயக்குனர் மனோஜ் குமார் நேர்காணல் ஒன்றில் விரிவாகப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, பார்த்திபன் - நடிகை சீதா திருமணப் பதற்றத்தால் "மருதுபாண்டி" படத்தின் பாடல்கள் எவ்வாறு அசாத்திய வேகத்தில் உருவாகின என்பதை அவர் நெகிழ்ச்சியுடன் பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார். இதை இளையராஜாவின் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்கள்.
மருதுபாண்டி படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தபோது, சினிமாவில் ஏற்பட்ட திடீர் வேலைநிறுத்தம் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஸ்டிரைக் முடிந்ததும், மீதமிருந்த இரண்டு பாடல்களை மிக அவசரமாகப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயச் சூழல் இயக்குனருக்கு ஏற்பட்டது. அதற்குப் பின்னணியில் இருந்த சுவாரசியமான காரணத்தை இயக்குனர் மனோஜ் குமார், wow tamizha சேனலில் பின்வருமாறு விளக்குகிறார்:
"என் படத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகை சீதாவை, இயக்குனர் பார்த்திபன் காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்ற தகவல் எனக்குக் கிடைத்தது. அதனால், இந்த 2 பாடல்களையும் நாங்கள் உடனடியாக எடுத்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். ஒருவேளை அவர்கள் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டால், என்னால் படத்தை முடிக்கவே முடியாது என்ற இக்கட்டான சூழல் நிலவியது. இந்த அவசர நிலையை இளையராஜாவின் மேனேஜரிடம் சொல்லி, எப்படியாவது பாடல்களை விரைவாக முடித்துத் தருமாறு கோரிக்கை வைத்தேன்.. அந்தக் காலகட்டத்தில் தெலுங்குத் முன்னணி நாயகர்களான சிரஞ்சீவி, நாகர்ஜுனா போன்றோரே இளையராஜாவின் கால்ஷீட்டைப் பொறுத்தே எங்களது படங்களின் தேதிகளை ஒதுக்கும் அளவிற்கு இசைஞானி உச்சகட்ட பிஸியாக இருந்தார். நான் அன்று ஸ்டுடியோவிற்கு சென்றபோது, 20-க்கும் மேற்பட்ட இயக்குனர்களும் 30-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களும் இளையராஜாவின் வருகைக்காக காத்திருந்தனர். இளையராஜாவின் கார் எப்போதும் அதிகாலை சரியாக 6:35 மணிக்கு பிரசாத் ஸ்டுடியோவின் நுழைவாயிலைக் கடந்து, 6:40-க்கு உள்ளே சென்றுவிடும். நான் அவரிடம் நிலைமையை விளக்க வேண்டும் என்பதற்காக அதிகாலை 6:00 மணிக்கே அங்கு சென்று காத்திருந்தேன். என்னைப் பார்த்த இசைஞானி, 'உள்ளே வா' என்று அழைத்து, சீதாவின் திருமணப் பதற்றத்தைப புரிந்துகொண்டு, மற்ற அனைவரையும் விட எனக்கு முன்னுரிமை அளித்து உடனே பாடல்களைக் கம்போஸ் செய்யத் தொடங்கினார். அவர் எனக்காக அன்று காட்டிய வேகம் யாராலும் கற்பனை செய்ய முடியாதது. காலை 7 மணி முதல் 1 மணி வரை ஒரு பாடல், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு பாடல், மீண்டும் இரவு 6 மணி முதல் 9 மணி வரை ஒரு பாடல் என ஒரே நாளில் மூன்று பாடல்களைக் கம்போஸ் செய்து, முழுமையாகப் பதிவு செய்தும் கொடுத்தார். இதைப் பார்த்த அங்கிருந்த மற்ற இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும், 'உனக்கு என்னப்பா ஜாக்பாட் அடித்துவிட்டது' என்று சொன்னார்கள். கதை எழுதவும், இயக்கவும் தெரிந்த எனக்கு இசையைப் பற்றி பூஜ்ஜிய அறிவுதான் இருந்தது.- மருதுபாண்டி கிளைமாக்ஸ் காட்சிக்கான ரீ-ரிக்கார்ட்டிகில் இளையராஜா என்ன செய்யப்போகிறார் என்று நான் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். காட்சியைப் பார்த்த அவர் சில நோட்ஸ்களை எழுதினார். பிறகு பைனல் டேக் ஒலித்தபோது என்னை அறியாமல் தியேட்டரில் அழுதுவிட்டேன். குழந்தைகளை பாதுகாத்த ஒருவன், இன்று அவரே ஒரு குழந்தை போல கைதாகி செல்லும் அந்த பாத்திரப் படைப்பை தனது இசையால் உலகத் தரத்திற்கு உயர்த்தியிருந்தார் இசைஞானி. அவரது இசையால் மருதுபாண்டி படம் வெள்ளி விழா கொண்டாடியதுடன், எனக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.., ராம்கி, சீதா இருவருமே அப்போது பெரிய மார்க்கெட் இல்லாத சாதாரண நடிகர்கள். ஆனால் படம் வெளியான அன்று ஆனந்த் தியேட்டரில் 'இளையராஜா' என்று டைட்டில் கார்டு போட்டதற்கும், அவரது பாடல்களுக்கும் ரசிகர்கள் தியேட்டரே அதிரும் வகையில் கைதட்டினார்கள்.. ஓப்பனாக சொன்னால், அந்தப் படத்தின் முழு வெற்றிக்கும் காரணம் பண்ணைப்புரத்து சித்தர் இசைஞானி இளையராஜா மட்டும்தான். நான் விழுந்த நேரத்தில் என்னை மீண்டும் எழுந்து நிற்க வைத்தது மருதுபாண்டி படமும், இசைஞானியின் ஆசிர்வாதமும்தான். அதன் பிறகுதான் நான் மீண்டும் மேடேறி வந்து, இன்று 22 படங்கள் இயக்கி உங்கள் முன்னால் கம்பீரமாக நிற்கிறேன்" என்று சிலிர்த்து கூறினார்.பார்த்திபன் - சீதா திருமணம்
ஒரே நாளில் 3 பாட்டுகள்
பண்ணைபுரத்து சித்தர்
ராம்கி சீதா மார்க்கெட்