சென்னை: மலையாள சினிமாவில் நடிப்பாலும், தன்னுடைய தைரியமான கருத்துகளாலும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய நடிகை பார்வதி திருவொத்து மீண்டும் ஒரு முறை தனது பேச்சால் கவனத்தை ஈர்த்துள்ளார்.
திரையுலகில் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பார்வதி, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட அதிர்ச்சிகரமான அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
பார்வதி பேசும்போது, "நான் செய்தது பெரிய சாதனை எதுவும் இல்லை. ஒரு பொறுப்புள்ள மனிதராக செய்ய வேண்டிய அடிப்படை விஷயத்தையே செய்தேன். ஆனால் அதற்காக நான் கடுமையான தாக்குதல்களை சந்திக்க வேண்டியிருந்தது" என்று கூறியுள்ளார். 2017-ஆம் ஆண்டு கேரளாவில் நடிகை ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு திரையுலகில் பெண்களின் பாதுகாப்பு குறித்து வெளிப்படையாக பேசிய பார்வதி, அதன் பின்னர் கடும் எதிர்ப்புகளையும் வெறுப்புப் பிரசாரங்களையும் எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார். "என்னை மிரட்டினார்கள். கொலை மிரட்டல்கள் வந்தன. பாலியல் வன்கொடுமை மிரட்டல்களும் வந்தன. சிலர் என்னுடைய குரலை அடக்கவே முயன்றார்கள். ஆனால் நான் பின்னடையவில்லை" என அவர் உருக்கமாக கூறியுள்ளார். திரையுலகில் பெண்களின் உரிமை, சமத்துவம், பாதுகாப்பு போன்ற விஷயங்களில் தொடர்ந்து பேசி வரும் பார்வதி, அதற்காக தனது சினிமா வாழ்க்கையிலும் பாதிப்புகளை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். "எனது அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடுகள் காரணமாக பல பெரிய பட வாய்ப்புகளை இழந்தேன். சில கதவுகள் எனக்காக மூடப்பட்டன. ஆனால் பின்னர் புரிந்தது... அந்த வாய்ப்புகள் எனக்கானவை அல்ல" என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம் திரைத்துறையில் கருத்து சொல்லும் பெண்கள் இன்னும் எவ்வளவு அழுத்தங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் தன்னை காப்பாற்றியது தனது குடும்பமும் நண்பர்களும் தான் என பார்வதி தெரிவித்துள்ளார். "எனக்கு ஆதரவாக நிற்கும் அம்மா, அப்பா, சகோதரன் மற்றும் நண்பர்கள் இருக்கிறார்கள். நான் தனியாக இல்லை என்ற உணர்வு என்னை முன்னோக்கி நகர்த்தியது" என்று கூறியுள்ளார். மேலும், பெண்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஆதரவு வட்டமும் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய பாதுகாப்பு கவசமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 2006-ஆம் ஆண்டு மலையாள திரைப்படங்கள் மூலம் அறிமுகமான பார்வதி, தனது இயல்பான நடிப்பால் விரைவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ள அவர், பல தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்றுள்ளார். தமிழில் "பூ", "மரியான்", "தங்கலான்" உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்துள்ளார். கிளாமர் அல்லது கமர்சியல் வெற்றியை மட்டும் நோக்காமல், கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்வதிலேயே பார்வதி எப்போதும் கவனம் செலுத்தி வருகிறார். பார்வதியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "அனைவரும் அமைதியாக இருந்தபோது பேச தைரியம் காட்டியவர் பார்வதி", "எதிர்ப்புகள் வந்தாலும் கருத்தை மாற்றாத நடிகை", "திரையுலகில் பெண்களுக்கான குரலாக தொடர்ந்து நிற்பவர்" என பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், "கருத்து சொல்லும் உரிமை அனைவருக்கும் உள்ளது; ஆனால் அதை ஏற்கும் மனநிலை சமூகத்தில் இன்னும் வளர வேண்டும்" என்றும் பலர் பதிவிட்டு வருகின்றனர். திரையுலகில் பலர் சர்ச்சைகளை தவிர்த்து அமைதியாக செல்லும் சூழ்நிலையில், தன்னுடைய நிலைப்பாட்டை தொடர்ந்து வெளிப்படையாக கூறி வரும் பார்வதி திருவொத்தின் இந்த பேச்சு மீண்டும் ஒருமுறை சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.நடிகை பார்வதி பேச்சு
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்
பெண்களுக்காக குரல்
குடும்பமும் நண்பர்களும் தான் பலம்
“அவரை நான் பார்க்கவே மாட்டேன்..” – திருமணம் பற்றி 54-வது பிறந்தநாளில் மனம் திறந்த நடிகை தபு
யார் இந்த பார்வதி?
ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?