சென்னை: அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) தளத்தில் வெளியாகியுள்ள 'ராக்' (Raakh) இணையத் தொடர், இந்தியக் க்ரைம் டிராமா ரசிகர்களிடையே பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. மொத்தம் 8 எபிசோடுகளைக் கொண்ட இந்தத் தொடர், 1978 ஆம் ஆண்டு புது தில்லியில் நிகழ்ந்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிய ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, புனைகதை வடிவில் சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 1978-ல் நடந்த புகழ்பெற்ற கீதா சோப்ரா மற்றும் சஞ்சய் சோப்ரா கடத்தல் மற்றும் கொலை வழக்கே இத்தொடருக்கான மையக் கருத்தாகும். அந்தக் காலகட்டத்துப் பின்னணியை மிகத் துல்லியமாகத் திரையில் கொண்டு வந்துள்ள இந்தத் தொடர், வெறும் புலனாய்வுக் கதையாக மட்டுமில்லாமல் குற்றவாளிகளின் சைக்கோ மனநிலை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப சூழலை மிகவும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறது.
டெல்லியில் இரண்டு டீனேஜ் குழந்தைகள் திடீரென கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்படுகின்றனர். இந்த கொடூரச் சம்பவம் தலைநகரம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதற்குக் காரணமான குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் தீவிரப் புலனாய்வுப் பணியில் இறங்குகிறார் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்பிரகாஷ் (அலி ஃபசல் நடித்த கதாபாத்திரம்). பல்வேறு சவால்களுக்கிடையே அவர் குற்றவாளிகளைத் துரத்தும் காட்சிகள் விறுவிறுப்பாகக் காட்டப்பட்டுள்ளன. மறுபுறம், தங்களின் குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களாக சோனாலி பிந்த்ரே மற்றும் அமீர் பஷீர் தங்களின் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக சோனாலி பிந்த்ரேவின் நீண்ட இடைவெளிக்குப் பிறகான கம்பேக் மற்றும் அவரது உணர்வுப்பூர்வமான நடிப்பு பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. குற்றவாளிகளாக நடித்திருக்கும் நடிகர்களும் தங்களின் அச்சுறுத்தும் நடிப்பால் பார்ப்பவர்களைக் குலைநடுங்க வைக்கின்றனர். வேட்டையாடு விளையாடு இரட்டை வில்லன்களை அவ்வப்போது நினைவுபடுத்துகிறது வில்லன்கள் கதாப்பாத்திரம். இயக்குநர் புரோசித் ராய் (Prosit Roy) இயக்கத்தில், அனுஷா நந்தகுமார் மற்றும் சந்தீப் சாகேத் ஆகியோரின் எழுத்து மற்றும் இணை இயக்கத்தில் இத்தொடர் உருவாகியுள்ளது. 1970களின் தில்லி சூழலை, அதன் பிரத்யேக வாகனங்கள், உடைகள் மற்றும் வண்ணக் கலவைகளின் மூலம் மிகவும் திறமையாகப் பதிவு செய்துள்ளனர். தொழில்நுட்ப ரீதியாகவும், நேர்த்தியான ஒளிப்பதிவும் பின்னணி இசையும் பார்வையாளர்களை 1978-ம் ஆண்டிற்கே நேரில் அழைத்துச் செல்லும் அளவுக்குத் தத்ரூபமாக அமைந்துள்ளன. டெல்லி எவ்வளவு அமைதியான நகரம் என்பதை சப்-இன்ஸ்பெக்டர் கதாப்பாத்திரம் தனது காதலியிடம் விவரிக்கும் காட்சிகள் இன்னும் ஒருபடி உண்மைக்கு நெருக்கமாக்குகின்றன. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட மிகச் சிறந்த புலனாய்வுத் தொடர்களின் வரிசையில் 'ராக்' நிச்சயம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. க்ரைம் திரில்லர் கதைகளை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த பொழுதுபோக்காக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரம் வில்லனர்கள் சகட்டுமேனிக்கு கெட்ட வார்த்தை பேசுவதாலும், அவர்கள் வரும் காட்சிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கொஞ்சம் ஆபாசம் எட்டிப் பார்ப்பதாலும், ரத்தம் சிந்தும் காட்சிகள் அவ்வப்போது இருப்பதாலும், இது குழந்தைகளோடு பார்க்கத்தக்க சீரிஸ் அல்ல. நிஜமான வழக்கில் பஞ்சாப்பைச் சேர்ந்த இருவர்தான் கொலையாளிகள் ஆனால் இங்கு அது மாற்ற்பபட்டுள்ளது. கதாநாயகனான சப்-இன்ஸ்பெக்டர் தலித்தாக காட்டப்பட்டுள்ளார். பெண் பத்திரிக்கையாளர் முஸ்லீமாக காட்டப்பட்டுள்ளார். இவை நிஜ வழக்கின் பாத்திரங்களிலிருந்து வேறுபட்டவை என்றபோதிலும், தலித் சமைத்து கொடுப்பதை சாப்பிடுவதே தவிர்க்கப்பட்ட காலம் மாறிவிட்டது என்பதை கண்முன் கொண்டுவர, சப்-இன்ஸ்பெக்டர் தந்தை சமைக்கும் மட்டன் கறி பயன்பட்டுள்ளது.பரபரப்பான கதைக்களமும் கதாபாத்திரங்களும்