மைசூர்: 'காந்தாரா' திரைப்பட சர்ச்சை விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மைசூரில் உள்ள புகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நேரில் வந்து சுவாமி தரிசனம் செய்தார்.
இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டியின் பிரம்மாண்ட படைப்பான 'காந்தாரா சாப்டர்-1' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, கோவாவில் நடைபெற்ற ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா ஒன்றில் நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார்.
அப்போது மேடையில், 'காந்தாரா' படத்தில் வரும் 'தெய்வ' கதாபாத்திரத்தின் புனிதமான சைகைகளையும், சத்தத்தையும் அவர் கிண்டல் செய்யும் தொனியில் இமிடேட் (Imitate) செய்து காட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இந்து மத நம்பிக்கைகளையும், பழங்குடியின மக்களின் வழிபாட்டு முறைகளையும் ரன்வீர் சிங் புண்படுத்திவிட்டதாகப் பல்வேறு வலதுசாரி அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், நடிகர் ரன்வீர் சிங் இச்சம்பவம் குறித்து எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி ரன்வீர் சிங் தரப்பில் முறையான மன்னிப்புக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், கடந்த மே 5, 2026 அன்று நடிகர் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டது. அதே வேளையில், தனது செயலுக்குப் பரிகாரமாக அடுத்த நான்கு வாரங்களுக்குள் கர்நாடகாவில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சென்று நேரில் வழிபட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தது. ரகசியமாக வந்த நடிகர்: நீதிமன்றக் கெடு முடிவடைய இருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரன்வீர் சிங் மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வந்து தனது பரிகார வழிபாட்டை நிறைவு செய்தார். இதுகுறித்து சாமுண்டீஸ்வரி கோயில் செயல் அலுவலர் எம்.ஜே. ரூபா செய்தியாளர்களிடம் கூறுகையில், "நடிகர் ரன்வீர் சிங் வருவது குறித்து எவ்வித முன்னறிவிப்பும் எங்களுக்குத் தரப்படவில்லை. முகக்கவசம் (Mask) அணிந்து ஒரு சாதாரண பக்தரைப் போல அவர் கோயிலுக்குள் வந்தார். அங்கிருந்த அர்ச்சகர் சுனிலிடம், தான் செய்த தவறுக்காக அம்மனிடம் மன்னிப்புக் கேட்க வந்திருப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து, கர்ப்பக்கிருகத்தில் அம்மனுக்குச் செய்யப்பட்ட சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொண்ட அவர், பொதுமக்களும் பக்தர்களும் அதிகளவில் கூடுவதற்கு முன்பாகவே கோயிலை விட்டுப் புறப்பட்டுச் சென்றார்" என்று தெரிவித்தார்.நீதிமன்ற உத்தரவும் பரிகாரமும்: