சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா திரையில் சிரித்துக் கொண்டிருந்தாலும், திரைக்குப் பின்னால் அவர் சந்தித்து வரும் மனஅழுத்தம் இப்போது ரசிகர்களை சற்றே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
'காக்டெயில் 2' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா, சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி பரவும் வதந்திகள், திரித்து வெளியிடப்படும் பேச்சுகள், சொல்லாத விஷயங்களையே தன் வாயில் வைத்து பரப்பும் நடைமுறைகள் குறித்து வெளிப்படையாகவே வேதனை தெரிவித்திருக்கிறார்.
"இப்போது எதையாவது பேசுவதற்கே பயமாக இருக்கிறது. நான் சொல்லாத விஷயங்களைக் கூட நான் சொன்னது போல மாற்றி வெளியிடுகிறார்கள். தினமும் என்னைப் பற்றி இன்னும் என்ன தவறான செய்தி வரும் என்று தெரியாமல் இருக்கிறது" என்று அவர் வருத்தத்துடன் கூறி இருக்கிற. பொதுவாக ரசிகர்களை எப்போதும் சிரித்த முகத்தில்தான் சந்திக்கும் ராஷ்மிகா, இப்படி மனம் திறந்து பேசியிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. ராஷ்மிகா மந்தனா இன்று தென்னிந்திய சினிமாவையும், பாலிவுட்டையும் ஒரே நேரத்தில் கையில் வைத்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர். கன்னடத்தில் தொடங்கிய பயணம், தெலுங்கில் உச்சம் தொட்டு, தமிழிலும் ஹிந்தியிலும் தொடர்ந்து படங்கள் செய்து பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் நடிகை. 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்', 'புஷ்பா', 'அனிமல்' போன்ற படங்கள் அவரை பான்-இந்தியா முகமாக மாற்றின. அதனால்தான் அவரின் ஒவ்வொரு படம், ஒவ்வொரு பேட்டி, ஒவ்வொரு ஸ்டேஜ் அப்பியரன்ஸும் கூட இணையத்தில் பெரும் பேசுபொருளாகி விடுகிறது. ஆனால் அதே புகழ்தான் இப்போது அவருக்கு சுமையாக மாறிவிட்டதா என்ற கேள்வி எழுகிறது. ராஷ்மிகா சொன்ன வருத்தத்திலிருந்து தெரியும் விஷயம் என்னவென்றால், சமூக வலைதளங்களில் நடிகைகளைப் பற்றிய 'நேரடி தகவல்' விட 'வதந்தி'தான் வேகமாக ஓடுகிறது என்பதுதான். அவர் ஒரு மேடையில் சொன்ன ஒரு வரி, அடுத்த நிமிடமே வேறு அர்த்தத்தில் திருப்பப்பட்டு விடுகிறது. சொல்லாத விஷயமே "ராஷ்மிகா சொன்னார்" என்ற தலைப்பில் பரவுகிறது. அந்த அளவுக்கு நடிகர்களின் ஒவ்வொரு வார்த்தையும் இப்போது சோசியல் மீடியா கையில் போய் வேறு ரூபம் எடுத்து வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக ராஷ்மிகாவைச் சுற்றி சமூக வலைதளங்களில் பரவிய பேச்சுகள் ஏராளம். 'காக்டெயில் 2' படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பிறகும் படத்தைச் சுற்றி பல வதந்திகள் ஓடியன. படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த யூகங்கள், கோ-ஸ்டார்களுடன் இணைத்து பரவிய கிசுகிசுக்கள், புரமோஷன் நிகழ்ச்சிகளில் எடுத்த சிறிய வீடியோக்களை வைத்து உருவாக்கப்பட்ட தவறான விளக்கங்கள் - இவை எல்லாம் இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டன. ராஸ்மிகாவின் தற்போதைய பேச்சில் ஒரு சோர்வு தெளிவாக தெரிகிறது. "தினமும் என்னைப் பற்றி என்ன புதிய வதந்தி வரும் என்று தெரியவில்லை" என்ற அவரது வரி, ஒரு நடிகையின் பிரபலத்துக்கு பின்னால் இருக்கும் அழுத்தத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. ரசிகர்களுக்கு இது ஒரு செய்தி மட்டுமாக இருக்கலாம்; ஆனால் அந்த நடிகைக்கு அது தினசரி மனஅழுத்தமாக மாறிவிடுகிறது என்பதே ராஷ்மிகா சொல்ல வந்த முக்கிய விஷயம். மேலும், இத்தகைய பொய்யான செய்திகள் நடிகர்களின் தொழில்முறை வாழ்க்கையை மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கிறது என அவர் கூறியிருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று. ஒரு பேட்டியில் சொன்ன ஒரு வாக்கியம் திரித்து போனால், அது குடும்பத்திலும், நண்பர்களிடையிலும், தொழில் வட்டாரத்திலும் தவறான புரிதலை உருவாக்கிவிட முடியும். குறிப்பாக சமூக வலைதளங்கள் 'வேகத்துக்கு' முக்கியத்துவம் கொடுக்கும் இந்த காலத்தில், உண்மை சரிபார்க்கப்படுவதற்குள் பொய் பல லட்சம் பேரிடம் சென்றுவிடுகிறது. அதுதான் பல நடிகர்கள் ஓபன் ஆக பேச அச்சப்பட காரணமாக இருக்கிறது.ராஷ்மிகா வேதனை
நேஷனல் கிரஸ்
வதந்திகள்
ரசிகர்கள் கருத்து