சென்னை: திரையுலகில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கும் இளம் கலைஞர்களின் வாழ்க்கை வெளியில் இருந்து பார்க்கும்போது வண்ணமயமாகத் தெரிந்தாலும், அதன் பின்னால் இருக்கும் மன அழுத்தங்களும் போராட்டங்களும் பல நேரங்களில் வெளிச்சத்துக்கு வருவதில்லை. அந்த வகையில் தற்போது இந்திய தொலைக்காட்சி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவமாக மாறியுள்ளது நடிகை சஞ்சிதா உகாலேவின் மரணம்.
'கும்கும் பாக்யா', 'வாக்லே கி துனியா' உள்ளிட்ட பிரபல ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்பான இனிய இரு மலர்கள் சீரியலிலும் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றிருந்த சஞ்சிதா உகாலே, தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது வெறும் 22.
மகாராஷ்டிரா மாநிலம் நலசோபாரா கிழக்கு பகுதியில் உள்ள தனது வீட்டில் கடந்த ஜூன் 14-ம் தேதி மாலை இந்த சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அறைக்குள் தனியாக சென்ற சஞ்சிதா, கதவை பூட்டிக் கொண்டதாகவும், பின்னர் நீண்ட நேரமாக வெளியே வராததால் குடும்பத்தினர் சந்தேகமடைந்ததாகவும் கூறப்படுகிறது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர் உயிரிழந்த நிலையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை அவரது இந்த முடிவுக்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மிக இளம் வயதிலேயே நடிப்புலகில் காலடி எடுத்து வைத்தவர் சஞ்சிதா உகாலே. ஹிந்தி தொலைக்காட்சியில் நீண்ட காலமாக ஒளிபரப்பாகி வரும் 'கும்கும் பாக்யா' சீரியலில் 'தியா தண்டன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் அதிக கவனம் பெற்றார். கும்கும் பாக்கியா என்ற சீரியல் தான் தமிழில் இனிய இரு மலர்கள் என்ற பெயரில் ஒளிபரப்பானது. அதேபோல் குடும்ப ரசிகர்கள் மத்தியில் பிரபலமான 'வாக்லே கி துனியா' தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் 'தில் வாலி துல்ஹா லே ஜாயேகி' தொடரில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். சீரியல்களைத் தாண்டி சினிமா மற்றும் ஓடிடி தளங்களிலும் தனது பயணத்தை தொடங்கியிருந்தார். சமீபத்தில் வெளியான நடிகர் விக்கி கவுஷல் நடித்த 'சாவா' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் இளம் வயது தோற்றத்தில் நடித்திருந்தார். அதேபோல் மனோஜ் பாஜ்பாய் நடித்த 'சைலன்ஸ் 2' வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். சீரியல், சினிமா, ஓடிடி என மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் அவரது வாழ்க்கை திடீரென முடிவுக்கு வந்திருப்பது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. சஞ்சிதா சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்தார். படப்பிடிப்பு தள புகைப்படங்கள், குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட தருணங்கள், நண்பர்களுடன் பகிர்ந்த வீடியோக்கள் என தொடர்ந்து பதிவிட்டு வந்தார். சமூக வலைதளங்களில் எப்போதும் சிரித்த முகத்தோடு காணப்பட்ட சஞ்சிதாவின் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது ரசிகர்களை மேலும் வேதனைப்படுத்தி வருகின்றன. "இவ்வளவு கனவுகளோடு ஓடிய ஒரு பெண்ணின் வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடிந்து போக வேண்டிய அவசியம் என்ன?" என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும், அதற்கான தீர்வு உயிரை மாய்த்துக் கொள்வது அல்ல என்பதையே இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன. ஒரு முடிவு பல குடும்பங்களின் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றிவிடும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. "இன்னும் நிறைய சாதித்திருக்க வேண்டிய வயசு இது", "அவருடைய நடிப்பு பயணம் இப்போதுதான் தொடங்கியிருந்தது", "இவ்வளவு இளம் வயதில் இப்படி ஒரு செய்தியை கேட்க வேண்டியிருக்கும் என்று நினைக்கவில்லை" என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வேதனையை பகிர்ந்து வருகின்றனர்.வீட்டிலேயே நிகழ்ந்த சோகம்
யார் இந்த சஞ்சிதா?
விக்கி கவுஷல் படத்திலும் நடித்தார்
சமூக வலைதளங்களில் ஆக்டிவ்
ரசிகர்களை உலுக்கிய கடைசி பதிவுகள்
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம்
ஒரு உயிரின் மதிப்பு
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம்
கண்ணீரில் ரசிகர்கள்