சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் முடிவால் எழுந்த விவாதம்.. இலங்கை பாடகிக்கு நேர்ந்த கதி! வருத்தத்தில் ரசிகர்கள்


  • சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான இசை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான 'சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்' சீசன் 5, பல மாதங்களாக ரசிகர்களை கவர்ந்த பயணத்திற்கு பிறகு பிரம்மாண்டமான கிராண்ட் பைனலுடன் நேற்று நிறைவடைந்துள்ளது. இறுதிப் போட்டியில் அபிஷேகா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டாலும், தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருவது இலங்கை போட்டியாளர் வர்ஜாவின் பெயர்தான்.

    Advertisement

    போட்டி முடிந்து பல மணி நேரங்கள் கடந்த பிறகும், "டைட்டில் வின்னர் அபிஷேகாவா? இல்லை ரசிகர்களின் மனம் கவர்ந்த வின்னர் வர்ஜாவா?" என்ற விவாதம் இணையத்தில் சூடுபிடித்துள்ளது.

    Advertisement

    6 திறமையாளர்கள்

    இந்த சீசனின் இறுதிப் போட்டியில் சுமன் ராஜ், தன்வி, வர்ஜா, விஷ்ணுவர்தன், அபிஷேகா மற்றும் அக்சத் நிரூபம் ஆகிய ஆறு போட்டியாளர்கள் களமிறங்கினர்.

    ஒவ்வொருவரும் தலா இரண்டு பாடல்களை பாடி தங்களது திறமையை வெளிப்படுத்தினர். கர்நாடக இசை, மெலடி, நாட்டுப்புற பாடல்கள், பழம்பெரும் திரைப்பட பாடல்கள் என பல்வேறு வகைகளில் போட்டியாளர்கள் அசத்தினர். இந்த சீசனின் நடுவர்களாக ஸ்ரீனிவாஸ், சைந்தவி, ஸ்வேதா மோகன் மற்றும் எஸ்.பி.பி. சரண் ஆகியோர் பங்கேற்று போட்டியாளர்களை மதிப்பீடு செய்தனர்.

    டைட்டிலை வென்ற அபிஷேகா

    நடுவர்களின் மதிப்பெண்கள் மற்றும் மக்களின் வாக்குகள் அடிப்படையில் அபிஷேகா சீசன் 5-ன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.
    சீசன் முழுவதும் தனது குரல் வளம், ஸ்ருதி சுத்தம் மற்றும் மேடை தன்னம்பிக்கையால் ரசிகர்களை கவர்ந்த அபிஷேகா, இறுதியில் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தார். அவரது பெயர் அறிவிக்கப்பட்டதும் அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது. குடும்பத்தினரும் ரசிகர்களும் மகிழ்ச்சியில் கண்கலங்கினர்.

    Advertisement

    ரன்னர் அப் யார்?

    இந்த சீசனில் விஷ்ணுவர்தன் முதல் ரன்னர் அப் பட்டத்தை கைப்பற்றினார். பல வாரங்களாக தொடர்ந்து சிறப்பாக பாடி வந்த அவர், இறுதிவரை அபிஷேகாவுக்கு கடும் போட்டி கொடுத்தார். மூன்றாவது இடத்தை தன்வி பெற்றார். அவரது இனிமையான குரலும், உணர்வுபூர்வமான பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

    இறுதி முடிவுகள்

    டைட்டில் வின்னர் - அபிஷேகா, முதல் ரன்னர் அப் - விஷ்ணுவர்தன், இரண்டாம் ரன்னர் அப் - தன்வி ஆனால் இணையத்தில் பேசப்படுவது வர்ஜா தான்! இந்த சீசனின் மிகவும் பேசப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர் இலங்கையை சேர்ந்த வர்ஜா. திருகோணமலை மாவட்டம் முகத்துவாரம் பகுதியை சேர்ந்த அவர், ஆடிஷன் சுற்றிலேயே கே.பி. சுந்தராம்பாள் பாடிய "பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா" பாடலை பாடி நடுவர்களை மட்டுமல்ல ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தினார்.

    Advertisement

    அதன்பிறகு ஒவ்வொரு சுற்றிலும் மிகவும் கடினமான பாடல்களை தேர்வு செய்து பாடிய அவர், தனது கணீர் குரலால் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

    டாப் 3-லாவது வர்ஜா இருக்கணும்

    கிராண்ட் பைனலுக்கு முன்பாக சமூக வலைதளங்களில் நடைபெற்ற பல கருத்துக்கணிப்புகளில் வர்ஜாவின் பெயர் முன்னிலையில் இருந்தது. இதனால் குறைந்தபட்சம் டாப் 3-ல் அவர் இடம்பெறுவார் என ரசிகர்கள் நம்பியிருந்தனர். ஆனால் இறுதி முடிவில் அவரது பெயர் டாப் 3 பட்டியலில் இல்லாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக இலங்கை தமிழ் ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    Advertisement

    கோப்பை கிடைக்கல

    வர்ஜாவின் ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் பல பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். "கோப்பை கிடைக்கலன்னா என்ன? வர்ஜா எங்க மனசுல வின்னர்", "இலங்கையில் இருந்து வந்து இவ்வளவு தூரம் வந்ததே பெரிய சாதனை", "குரலால் ரசிகர்களை ஜெயிச்சிட்டார்" போன்ற கருத்துக்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன.

    சரிகமப மேடையில் இருந்து சினிமாவுக்கு?

    கடந்த சீசன்களில் பங்கேற்ற பல போட்டியாளர்கள் தற்போது பின்னணி பாடகர்களாகவும் மேடை கலைஞர்களாகவும் வளர்ந்து வருகின்றனர். அதேபோல் இந்த சீசனின் போட்டியாளர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று இசை வட்டாரங்கள் கூறுகின்றன.

    Advertisement

    குறிப்பாக அபிஷேகா, விஷ்ணுவர்தன், தன்வி மற்றும் வர்ஜா ஆகியோருக்கு எதிர்காலத்தில் திரைப்பட இசை உலகில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

    Tamizha Tamizha: இந்த நிலைமை யாருக்கும் வரகூடாது.. தமிழா தமிழாவை கண்ணீரில் மிதக்க வைத்த பெண்!

    முடிவை விட போட்டியாளர்களே வெற்றி

    ஒரு ரியாலிட்டி ஷோவில் ஒருவருக்கு மட்டுமே கோப்பை கிடைக்க முடியும். ஆனால் இந்த சீசனில் பங்கேற்ற பல குழந்தைகள் தங்களது திறமையால் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளனர்.

    அபிஷேகா டைட்டில் வின்னராக கோப்பையை கைப்பற்றியிருக்கலாம். ஆனால் வர்ஜா, விஷ்ணுவர்தன், தன்வி உள்ளிட்ட போட்டியாளர்களும் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளனர் என்பதே சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பேசப்படும் கருத்தாக உள்ளது.

    English Summary

    The grand finale of Zee Tamil’s popular music reality show Sarigamapa Little Champs Season 5 concluded with young singer Abisheka being crowned the winner. However, despite the celebrations surrounding the title victory, social media discussions have largely focused on another contestant — Sri Lankan singer Varja.The season finale featured six talented finalists: Suman Raj, Thanvi, Varja, Vishnuvardhan, Abisheka, and Akshath Niroobam. Each contestant delivered impressive performances across multiple genres, showcasing remarkable musical talent throughout the competition.Based on judges' scores and public voting, Abisheka secured the championship title, while Vishnuvardhan finished as the first runner-up and Thanvi claimed the second runner-up position. The results were met with applause inside the venue, but online reactions soon shifted attention toward Varja.