சென்னை: இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜின் திடீர் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரின் மறைவு செய்தி வெளியானதிலிருந்து, பழைய பேட்டிகள், மேடை நிகழ்ச்சிகள், ரசிகர்களுடன் பகிர்ந்த தருணங்கள் என பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன.
அதில் ரசிகர்களை அதிகம் நெகிழ வைத்திருப்பது, சமீபத்தில் நடைபெற்ற பாக்யராஜின் 50 ஆண்டு திரைப்பயண விழாவில் அவரது மகன் சாந்தனு பேசிய உரைதான்.
அந்த விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள், பாக்யராஜுடன் தங்களுக்கு இருந்த நினைவுகளை பகிர்ந்து அவரை மனதார பாராட்டினர். அனைவரும் பேசி முடித்த பிறகு மேடையேறிய சாந்தனு, ஆரம்பத்திலேயே, "நான் இங்கே பாக்யராஜின் மகனாக பேச வரவில்லை... அவருடைய ரசிகனாக பேச வருகிறேன்..." என்று கூறியதும் அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. அதன்பிறகு அவர் சொன்ன வார்த்தைகள் இன்று பலரையும் கண்கலங்க வைத்துள்ளன. "கடவுள் வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால், என்னுடைய ஆயுளில் இருந்து பத்து வருடத்தை எடுத்து என் அப்பாவுக்கு கொடுத்திடுங்கள் என்பதைத்தான் கேட்பேன்..." என்று சாந்தனு உணர்ச்சியுடன் பேசினார். அந்த வார்த்தைகள் மேடையில் இருந்த பாக்யராஜையே நெகிழ வைத்தன. உடனே "சும்மா இருடா... அப்படி எல்லாம் சொல்லாதே..." இன்று மகன் பேசியதை ஏற்க முடியாத ஒரு முகபாவனையுடன் அவர் ரியாக்ட் செய்த காட்சியும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதன் பின்னர் தொடர்ந்து பேசிய சாந்தனு, "என்னுடைய அப்பா இன்னும் பல ஆண்டுகள் படங்கள் இயக்க வேண்டும்... நடிக்க வேண்டும்... அவர் ரசிகனாக அதுதான் என்னுடைய ஆசை..." என்று கண்கலங்கியபடி கூறியிருந்தார். ஆனால், அந்த ஆசை நிறைவேறுவதற்குள் பாக்யராஜ் திடீரென மாரடைப்பால் காலமானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியபோது, தந்தையின் உடலை பார்த்து கதறி அழுத சாந்தனுவின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பலரது மனதையும் உருக்கியுள்ளன. ஒருபுறம், சில ரசிகர்கள் "தன்னுடைய ஆயுளில் இருந்து பத்து வருடம் கொடுக்கிறேன் என்று மகன் சொன்னபோது அதை ஏற்க முடியாமல் சிரித்த தந்தை... இன்று அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார். வாழ்க்கை எவ்வளவு கணிக்க முடியாதது!" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். மற்றொருபுறம், "பாக்யராஜ் ஒரு சிறந்த இயக்குநர் மட்டுமல்ல... மகன் உயிராக நேசித்த ஒரு அப்பாவும் கூட. அந்த அப்பா-மகன் பாசத்தை இந்த ஒரு வீடியோவே சொல்லிவிடுகிறது" என்றும் ரசிகர்கள் உருக்கமாக கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். ஒரு மேடையில் மகன் வெளிப்படுத்திய அன்பு... சில நாட்களில் தந்தையின் மறைவால் கண்ணீராக மாறியிருப்பது, இன்று தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை மிகவும் கனக்க வைத்திருக்கிறது.பாக்யராஜின் பாராட்டு நிகழ்ச்சி
சாந்தனு பேச்சு
கதறி அழுத சாந்தனு
Bhagyaraj: இந்தி, இங்கிலீஷ் தெரியாது! ஆனாலும் அமிதாப்பை இயக்கிய பாக்யராஜ்! யார் இவர்?
கடைசியாக பாக்யராஜ் முகத்தை கூட பார்க்க முடியல.. அவருக்கா இப்படி ஒரு மரணம் வரணும்? கதறி அழுத கலா மாஸ்டர்