சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம்


  • சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பு இலக்கணம் மற்றும் அவரது பிரம்மாண்டமான 'அன்னை இல்லம்' இல்லம் குறித்த பல அரிய, நுட்பமான சுவாரசியமான தகவல்களை எழுத்தாளர் மருதுமோகன், 'Wow Tamizha' யூடியூப் சேனல் பேட்டியில் சமீபத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு கதாபாத்திரத்திற்காக வீட்டிலிருந்தே சிவாஜி எப்படி தயாராவார் என்பது முதல் படத்தில் அவர் கை, கால், கண்களைப் பயன்படுத்தும் விதம் வரை யாருமே கவனிக்காத பல ரகசியங்களை இந்த நேர்காணலில் மருதுமோகன் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை சிவாஜி ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

    Advertisement

    மருது மோகன் அந்த பேட்டியில், "நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் லலித்குமார் பேலஸ் போல இருக்கும். கீழேயே 16 ரூம்கள் இருக்கும், மேலே 16 ரூம்கள் இருக்கும். மொத்தமாக 25 கிரவுண்டு உள்ள வீடு அது. அன்றைய காலத்தில், இரண்டரை லட்சத்துக்கு அந்த வீட்டை அவர் வாங்கினார்.

    Advertisement

    அதற்கு முன்பு மெட்ராஸ் கவர்னராக இருந்த வெங்கடராம ரெட்டி என்பவர் அந்த வீட்டில் வாழ்ந்து வந்தார். அதற்கும் முன்பு, போக் என்ற பிரிட்டிஷ் கவர்னர் இருந்தார். அதனால்தான், அந்த ரோட்டுக்கு போக் ரோடு என்று பெயர் வந்தது.


    சிவாஜி கணேசன் அன்னை இல்லம் வீடு

    இப்படி இவர்கள் எல்லாம் வாழ்ந்த வீட்டைதான் சிவாஜி கணேசன் விலைக்கு வாங்கினார். இந்த வீட்டை வாங்கிய நேரம், சிவாஜியின் தம்பி அப்போதுதான் லண்டனிலிருந்து வந்திருந்தார். தன்னுடைய அண்ணன் குடியிருக்க போகும் வீடு, ராஜ கம்பீரமாக இருக்க வேண்டும் என்று சொல்லி, 50 லட்சம் மதிப்புள்ள தேக்கு மரத்தை வாங்கி தனி படிக்கட்டுகளை செய்தார்.

    Advertisement

    அந்த படிக்கட்டில் சிவாஜி கணேசன் இறங்கி வந்தாலே சிறப்பான சத்தம் கேட்கும். அதேபோல அன்றைய தினம் எந்த கேரக்டரை நடிக்க போகிறாரோ, அதற்குரிய நடையில்தான் படிக்கட்டில் சத்தம் கேட்கும். அதாவது வீட்டிலேயே அந்த கேரக்டருக்கான நடையை அவர் ஆரம்பித்துவிடுவார்.

    காலத்தில் அழியாத பாடல்

    பிராமின் ரோலுக்கு 2 காலையும் வைத்து நடப்பார். நிற்கும்போது இடது காலை தூக்கி வைத்து நின்றால் வாரியர் கேரக்டர் என்று அர்த்தம். வலது காலை தூக்கி வைத்தால், பணக்காரர் அல்லது புலவர் கேரக்டர் என்று அர்த்தம். மகாகவி காளிதாஸ் படத்தில் 'காலத்தில் அழியாத பாடலில்' சிவாஜி கணேசன் காலை கவனித்தால் இது உங்களுக்கு புரியும்.

    Advertisement

    தன்னுடைய கைகளால், தன் மார்பை தொடுவது, தோளை தொடுவது என ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் வைத்திருப்பார். வேறு எந்த நடிகரும், கை, கால்களை வைத்து, இப்படி இலக்கணம் வைத்து நடித்ததை நான் பார்த்ததில்லை.

    இதோ எந்தன் தெய்வம்

    அதேபோல கொலைகாரனாக ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தால், அந்த படம் முழுக்க இடதுகையை மட்டுமே பயன்படுத்துவார். ஒருவேளை படத்தில் பாதி கதையில் கொலை செய்தாலும்கூட, இடது கையையே பயன்படுத்துவார். பாபு படத்தில் கொலை ஒன்றை செய்துவிடுவார். 'இதோ எந்தன் தெய்வம்' பாட்டில் இடது கையை நீட்டியே பாடுவார். இதை யாருமே கவனித்ததேயில்லை.

    Advertisement

    கை, கால்களை பயன்படுத்துவதை போல, கண்களுக்கும் இலக்கணம் வைத்திருக்கிறார். ராஜபார்ட் ரங்கதுரை படத்தில், தங்கையை கைவிட்ட மாப்பிள்ளை, வேறு திருமணம் செய்து கொள்வார். அந்த கல்யாணத்துக்கு வந்திருக்கும் சிவாஜி, மாப்பிள்ளையை பார்த்து கொண்டேதான் இருப்பார். அந்த பார்வையிலேயே, உருத்தல் அதிகமாகி, அந்த மாப்பிள்ளை சிவாஜி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிடுவார்.

    பச்சை விளக்கு வித்தியாசமான ரோல்

    ஒரு படத்தில் சிவாஜி நடித்த படமே சிவாஜியுடன் போட்டி போட்டது. 1964-ல் அவரது 14 படங்கள் ரிலீஸானது. இதில் 14 விதமான கேரக்டர்கள். ஒரு நடிகர், அந்த ஒரே கேரக்டரின் ஆன்மாவை மட்டுமே மனதில் ஏற்றிக் கொள்ள முடியும், அந்த சீனை நடித்து முடித்தும்தான், வேறு கேரக்டரை மனதில் ஏற்றி கொள்ள முடியும் என்று பிரபல ஆங்கில நடிகர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி சொல்வார்.

    Advertisement

    ஆனால் சிவாஜி 1964-ல் கர்ணன், புதிய பறவை, பச்சை விளக்கு, கை கொடுத்த தெய்வம் என வித்தியாசமான கேரக்டர்களை நடித்தார். அதாவது ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நடிப்பு விதியையும் மீறி நடித்தவர் சிவாஜி கணேசன். லஞ்சம் வாங்கும் போலீஸா? அல்லது நேர்மையான போலீஸா? என்பதைகூட, தன்னுடைய கண்களாலேயே நடித்து வெளிக்காட்டக்கூடியவர் இந்த உலகில் நடிகர் திலகம் மட்டுமே." என்றெல்லாம் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

    English Summary

    Sivaji Ganesan’s Annai Illam wonders! The Strange Sound From the Staircase and His Little-Known Left-Hand Secret