100ஐ தொடாமல் போன சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்ரி.. கடைசிவரை நிறைவேறாத ரியல் ஜென்டில்மேனின் ஆசை இதுதானா


  • சென்னை: சூப்பர் குட் பிலிம்ஸ்' தயாரிப்பில் வெளியான 99 படங்களுமே மிகவும் தரமானவை. ஆர்பி சௌத்ரி படங்களில் இரட்டை அர்த்த வசனங்களோ, ஆபாசமான காட்சிகளோ, தேவையற்ற கவர்ச்சியோ ஒருபோதும் இருக்காது. ஆர்.பி. சௌதரி தயாரித்த படங்கள் எதுவும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும், கதையில் பிரம்மாண்டமாக இருக்கும் என்றெல்லாம் புகழ்ந்து பேசியிருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.

    Advertisement

    பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் பேசும்போது, "ஆர்.பி. சௌதரி மிகச்சிறந்த பண்பாளர், அனைவரிடமும் எப்போதும் இன்முகத்தோடு பழகக்கூடிய மாபெரும் ஜென்டில்மேன். சினிமா துறையில் எத்தனையோ சவால்களும், நெருக்கடிகளும் நிறைந்திருந்த போதிலும், அவர் யாரிடமும் ஒருபோதும் கோபப்பட்டதே இல்லை. எந்தச் சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்காமல், மிகவும் மென்மையாகவும் அதிர்ந்து பேசாமலும் பழகும் உன்னத குணம் செளத்ரியிடம் இருந்தது.

    Advertisement

    ரியல் ஜென்டில்மேன்

    சினிமா தொழிலை தனது தெய்வமாக நினைத்து அவர் முழு அர்ப்பணிப்புடன் உழைத்த காரணத்தினால்தான், தயாரிப்பாளராக அவரால் அடுக்கடுக்கான இமாலய வெற்றிகளைச் சாதிக்க முடிந்தது. தமிழ் சினிமாவில் எத்தனையோ திறமையாளர்களுக்கு வாழ்க்கையையும், புதிய வெளிச்சத்தையும் தந்து கைதூக்கி விட்ட பெருமை அவருக்கு உண்டு.

    திரைத்துறையில் பல நடிகர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர்கள் மத்தியில், மிக முக்கியமான பல புதிய இயக்குனர்களைத் தமிழ் சினிமாவிற்கு வாரி வழங்கிய தனிச்சிறப்பு ஆர்.பி. சௌதரிக்கு மட்டுமே சேரும். இன்று தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களாக இருக்கும் விக்ரமன், கே.எஸ். ரவிக்குமார், எழில், சசி, பேரரசு, ராஜகுமாரன், ராசு மதுரவன், லிங்குசாமி போன்றவர்களின் வாழ்க்கைக்கு அடித்தளமாக இருந்து பிள்ளையார் சுழி போட்டதே இவர்தான்.

    Advertisement

    சூப்பர் குட் பிலிம்ஸ்' தயாரிப்பில் வெளியான 99 படங்களுமே மிகவும் தரமானவை. அவருடைய படங்களில் இரட்டை அர்த்த வசனங்களோ, ஆபாசமான காட்சிகளோ, தேவையற்ற கவர்ச்சியோ ஒருபோதும் இருக்காது. ஆர்.பி. சௌதரி தயாரித்த படங்கள் எதுவும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும், கதையில் பிரம்மாண்டமாக இருக்கும்.

    சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சௌத்ரி

    தமிழ் சினிமாவில் கலெக்ஷனை அள்ளிக் குவித்து, தியேட்டர் ரெக்கார்டுகளை உடைத்த 'நாட்டாமை' படத்திற்குப் பிறகுதான் நடிகர் சரத்குமாருக்கு ஒரு பெரிய சினிமா வாழ்க்கையே கிடைத்தது. அதேபோல், 'சூரியவம்சம்' திரைப்படம் எக்காலமும் மறக்க முடியாத ஒரு அற்புதமான, உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையாகும்.

    Advertisement

    ஆர்.பி. சௌதரி கதையை மட்டுமே முழுமையாக நம்புவார். ஒரு இயக்குனர் அவரிடம் கதை சொல்லும்போதே, அந்தப் படம் மக்களிடம் போய் சேருமா, அதில் மனித உணர்வுகளும் சென்டிமென்ட்டும் சரியாக இருக்கிறதா என்று துல்லியமாகக் கணிப்பதில் அவர் ஒரு கில்லாடி.

    ஆரம்பத்தில் மசாலா படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் விஜய்யை வைத்து 'பூவே உனக்காக' படத்தைத் தயாரித்தார். அது விஜய்யின் சினிமா கேரியரிலேயே மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாகவும், வெற்றிப் படமாகவும் அமைந்தது. அதன்பின்னர் விஜய்யை வைத்தே 'துள்ளாத மனமும் துள்ளும்', 'திருப்பாச்சி', 'ஜில்லா' எனப் பல சூப்பர் ஹிட் படங்களை அவர் தயாரித்துள்ளார்.

    Advertisement

    100வது படம் நிறைவேறாத ஆசை

    அதேபோன்று, நீ வருவாய் என படமும் இவரது தயாரிப்பில் உருவான ஒரு மிகச்சிறந்த வெற்றிப் படமாகும். விஜய், அஜித் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களாக வளர்ந்த பிறகு அவர் அவர்களைப் புக் செய்யவில்லை; மாறாக, அவர்கள் தங்களின் ஆரம்பகால வளர்ச்சிப் பாதையில் இருந்தபோதே அவர்களை நம்பித் தனது படங்களில் ஒப்பந்தம் செய்தார்.

    ஆனால் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சிலம்பரசன், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களை வைத்துப் படம் தயாரித்ததே இல்லை. பொதுவாக ஒரு நடிகருக்குப் பெரிய மார்க்கெட் உருவானதும், பெரும்பாலான தயாரிப்பாளர்கள் அந்த நடிகர் பின்னால் ஓடி, அவருக்காகக் கதைகளை உருவாக்குவார்கள்.

    Advertisement

    கதையின் நாயகன் சௌத்ரி

    ஆனால், ஆர்.பி. சௌத்ரியைப் பொறுத்தவரை அவரது நிறுவனத்தில் எந்தவொரு நடிகரும் ஹீரோ கிடையாது; அங்கு எப்போதுமே 'கதை' மட்டும்தான் உண்மையான ஹீரோ. கதைதான் முதன்மையான நாயகன் என்பதைத் தீர்க்கமாக நம்பி அவர் செயல்பட்டதால்தான், இத்தனை பிரம்மாண்டமான வெற்றிகள் அவருக்குச் சாத்தியமாயின.

    ஆர்.பி. சௌத்ரி தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இதுவரை 99 திரைப்படங்களைத் தயாரித்து முடித்துள்ளார். அவரது தயாரிப்பில் 100-வது திரைப்படமாக உருவாக வேண்டிய படத்தை, தளபதி விஜய்யை வைத்துத் தயாரிக்க வேண்டும் என்று அவர் பெரும் முயற்சி எடுத்தார்,.. அதுவே அவருடைய மிகப்பெரிய ஆசையாகவும் இருந்தது.

    250 கோடி ரூபாய் விஜய் சம்பளம்

    ஆனால், விஜய் இன்று 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவிற்கு இமாலய உயரத்திற்குச் சென்றுவிட்டார். அவருடைய ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்றாலே குறைந்தது 450 கோடி ரூபாய் பட்ஜெட் தேவைப்படுகிறது. இவ்வளவு பெரிய பிரம்மாண்ட பட்ஜெட்டில் படம் தயாரிப்பது குறித்த பேச்சுவார்த்தை தள்ளிப் போய்க்கொண்டே இருந்ததே தவிர, இறுதிவரை அது கைகூடவே இல்லை.

    விஜய்யை வைத்து 100-வது படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்.பி. சௌத்ரியின் அந்த இறுதி ஆசை, அவர் மறைவதற்குள் நிறைவேறாமலேயே போய்விட்டது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Super Good Films Chaudhry Fell Short of the 100-Mark… Was This the Real Gentleman’s Unfulfilled Dream Until the End?