பாக்ஸுக்குள் இருந்த வைரக்கல்... பாரதிராஜாவின் அந்த ஒரு முடிவால் ராதாரவிக்கு ஏற்பட்ட வருத்தம் என்ன?


  • சென்னை: முதல் மரியாதை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை, தனது இயக்கத்தின் பாணிக்கு ஏற்ப முழுமையாக மாற்றி, ஒரு சிறந்த எதார்த்தமான காவியத்தை உருவாக்கியவர் பாரதிராஜா. சிவாஜி கணேசனே முதலில் இந்தத் திரைக் கதையை எதிர்த்தபோதும், பாரதிராஜா தனது பிடிவாதத்தால் அந்தப் படத்தை மிகச் சிறப்பாகக் கொண்டு வந்தார் என்று இயக்குநர் இமயத்துக்கு புகழஞ்சலி சூட்டி உள்ளார் மூத்த நடிகர் ராதாரவி.

    Advertisement

    ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ள ராதாரவி, "பாரதிராஜா எதற்கும் அஞ்சாத ஒரு இரும்பு உள்ளம் படைத்தவர். தான் கொண்ட கொள்கை மற்றும் கருத்துக்களிலிருந்து அவர் எதற்காகவும், எப்போதும் பின்வாங்கியதே இல்லை. அவருக்குப் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை மிகவும் பிடிக்கும்.. அந்தப் பிரியத்திலிருந்து அவர் கடைசி நாள் வரை மாறவே இல்லை.

    Advertisement

    நடிகர் ராதாரவி புகழாரம்

    அதேசமயம், அவருக்குப் பெரிய அளவில் உதவியாக இருந்த கலைஞர் கருணாநிதியைம் அவர் மதிக்கத் தவறவில்லை. தமிழ் திரைத்துறையில் "தமிழ்" என்ற அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தவர் அவர்தான். தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திலிருந்து இயக்குநர்களைத் தனியாகப் பிரித்து, '"தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்" உருவாவதற்குக் காரணமே பாரதிராஜாதான். அந்தப் பெருமை முழுமையாக அவரையே சேரும்

    அவருடைய டைரக்‌ஷனில் நான் 'காதல் ஓவியம்' என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளேன். ஒரு நடிகராக அந்தப் படம் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத ஒன்று என்றாலும், பாரதிராஜா போன்ற ஒரு மாபெரும் இயக்குநருடன் பழகியதை ஒரு சந்தோஷமான விஷயமாகக் கருதுகிறேன்.

    Advertisement

    பொக்கிஷம் - வைரக்கல்

    ஆனால், அவர் பிற்காலத்தில் நிறைய படங்களில் நடிகராகப் பரிணமித்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இயக்குநர் பாரதிராஜா என்பவர் பெட்டிக்குள் இருக்கும் வைரக்கல் போல ரகசியமாக இருந்தால்தான் மதிப்பு. அவர் எப்போது பெட்டியைத் திறப்பார், எப்போது வைரத்தைப் பார்ப்போம் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்க்க வேண்டும். அவர் தொடர்ந்து படங்களில் நடித்ததால், பாரதிராஜா இப்படித்தான் இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரிந்துபோய், அந்த ரகசியம் இல்லாமல் போய்விட்டது.

    பாரதிராஜா இன்னும் ஒரு 10 ஆண்டுகள் உயிரோடு இருந்திருக்கலாம். அவருடைய இரும்பு போன்ற உடல்நிலை திடீரென மோசமடைந்ததற்குக் காரணம், அவருடைய ஒரே மகன் மனோஜின் மறைவுதான்.

    Advertisement

    தாஜ்மஹால் - மகன் மனோஜ்

    மகன் இறந்த துக்கம் தாங்காமல் அவர் முற்றிலும் மனமுடைந்துபோனார். மனோஜ் கதாநாயகனாக நடித்த 'தாஜ்மஹால்' படம் உருவானபோது, தன் மகன் மீது ஒரு தகப்பனாக அவர் எவ்வளவு பெரிய ஆசையும் எதிர்பார்ப்பும் வைத்திருந்தார் என்பதை எங்களை நேரில் அழைத்துச் சென்று காட்டியபோது என்னால் உணர முடிந்தது.

    மனோஜின் கல்யாணத்துக்கு நான் சொந்த செலவில் சென்றிருந்தபோது, சொந்தக் காசில் செலவு செய்து வந்த ஒரே நபர் ராதாரவி மட்டும்தான் என்று அனைவர் முன்னிலையிலும் நெகிழ்ந்து பாராட்டினார். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக அவர் குடும்பத்தினர் மற்றும் மருமகள் இல்லாமல் தனிமையில் வாடியது மிகவும் கொடுமையானது. எவ்வளவு பெரிய வீடு இருந்தாலும், கடைசி காலத்தில் தனிமை ஒரு மனிதனை வாட்டி வதைத்துவிடும்."

    Advertisement

    முதல் மரியாதை - சிவாஜி கணேசன்

    பாரதிராஜா ஒரு கடுமையான மனிதராக இருந்தாலும், படங்களில் அந்தத் தீவிரத்தைக் காட்டாமல் எப்படி அவ்வளவு மென்மையான மற்றும் எதார்த்தமான கிராமத்து கதைகளை எடுத்தார் என்பது வியப்பிற்குரியது.

    ஆரம்பத்தில் அனைவரும் அவரை 'கிராமத்துப் படங்கள் எடுக்கத்தான் லாயக்கு' என்று விமர்சித்தபோது, அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக 'சிகப்பு ரோஜாக்கள்' என்ற முற்றிலும் மாறுபட்ட திரில்லர் படத்தை அவர் இயக்கிக் காட்டினார்.

    'முதல் மரியாதை' திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைத் தனது இயக்கத்தின் பாணிக்கு ஏற்ப முழுமையாக மாற்றி, ஒரு சிறந்த எதார்த்தமான காவியத்தை உருவாக்கினார். சிவாஜி கணேசனே முதலில் இந்தத் திரைக் கதையை எதிர்த்தபோதும், பாரதிராஜா தனது பிடிவாதத்தால் அந்தப் படத்தை மிகச் சிறப்பாகக் கொண்டு வந்தார்.

    Advertisement

    அவர் ஒரு காட்சியை படமாக்கும்போது தனக்குத் திருப்தி வரும் வரை விடமாட்டார். ஷாட் ஓகே ஆகும் வரை 10 முறை என்றாலும் எடுப்பார். இதில் நடிக்கிறவர்கள் டயர்ட் ஆனாலும், பாரதிராஜா ஒருபோதும் டயர்ட் ஆக மாட்டார் என்றெல்லாம் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

    English Summary

    The Diamond Inside the Box: The One Decision of Bharathiraja That Deeply Saddened Radharavi!