சென்னை: தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நடிகைகளில் முக்கியமானவர் ஊர்வசி. ஹீரோயினாக அறிமுகமாகி, இன்று குணச்சித்திர நடிகையாகவும் தேசிய விருது வென்ற கலைஞராகவும் திகழும் அவர், சமீபத்தில் பகிர்ந்த ஒரு சம்பவம் ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.
விரைவில் வெளியாகவுள்ள 'பரிமளா & கோ' திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஊர்வசி, மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து குறித்து பகிர்ந்த நினைவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இன்று "உருவ கேலி" தவறு என்பது குறித்து விழிப்புணர்வு அதிகரித்திருந்தாலும், ஒரு காலத்தில் அது சாதாரண விஷயமாகவே பார்க்கப்பட்டது. சினிமாவிலும் அதே நிலைதான் இருந்ததாக ஊர்வசி கூறியுள்ளார். "யாராவது குண்டாக இருந்தாலோ, வேறு மாதிரி தோற்றம் இருந்தாலோ, அதையே வைத்து கேலி செய்வார்கள். அப்போது அதில் என்ன தவறு இருக்கிறது என்று கூட எனக்கு தெரியாது. மற்றவர்கள் சிரித்தால் நானும் சிரித்துவிடுவேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகர் குமரிமுத்துவுடன் நடித்த அனுபவம் குறித்து பேசிய அவர்,"ஒரு படத்துல குமரிமுத்து அண்ணனோட நடித்தேன். அவரை மாதிரி கண்களை வைத்து நடிக்க சொல்லிட்டாங்க. நானும் அப்படியே பண்ணேன். ஷாட் முடிஞ்சதும் எல்லாரும் கை தட்டி சிரிச்சாங்க. அப்போ அது பெரிய விஷயம்னு எனக்கு தோணல." ஆனால் அதன்பிறகு நடந்த ஒரு சம்பவம் தன்னை முழுமையாக மாற்றிவிட்டதாக ஊர்வசி தெரிவித்துள்ளார்."பிறகு ஒரு தடவை குமரிமுத்து அண்ணனை நான் பேட்டி எடுத்தேன். சின்ன வயசுல உங்க ஆசை என்னன்னு கேட்டேன். அதுக்கு அவர், 'நல்லா படிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா முடியல. போலீஸாகணும்னு ஆசை இருந்துச்சு. இந்த கண்களால அந்த வேலை கிடைக்கல. டிரைவிங் கத்துக்க போனப்போ கூட, கண்ணு சரியா இருக்கிறவங்களாலேயே ஓட்ட முடியல, நீ எப்படி ஒன்னரை கண்ணை வச்சுக்கிட்டு ஓட்டப் போறேன்னு கேட்டாங்க'ன்னு சொன்னார்." அதன் பிறகு குமரிமுத்து சொன்ன ஒரு வார்த்தை தான் தன்னை மிகவும் பாதித்ததாக ஊர்வசி கூறினார். "இப்படி பேசிட்டு இருந்தவர் திடீர்னு, 'நீ கூட ஒரு படத்துல என்னை மாதிரி கண் வைத்து நடித்தாயே'ன்னு சொன்னார். அவ்வளவுதான். எனக்கு என்னமோ மாதிரி ஆயிடுச்சு. அந்த பேட்டி முடிஞ்சதும் வெளியே போயி அழுதுட்டேன்." அந்த வார்த்தையை கேட்ட உடனே தன்னால் அங்கே இருக்க முடியாமல் வெளியே சென்று அழுதுவிட்டதாக ஊர்வசி கூறியுள்ளார். ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் சந்தித்த அவமானங்களையும், அதையே தனது அடையாளமாக மாற்றிய உறுதியையும் அந்த ஒரு வரி வெளிப்படுத்தியதாக ஊர்வசி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அந்த சம்பவத்திற்குப் பிறகு இனி ஒருபோதும் யாருடைய உடல் தோற்றத்தையும், குறைபாடுகளையும் வைத்து கேலி செய்யக்கூடாது என்று முடிவு செய்ததாக ஊர்வசி கூறியுள்ளார். "ஒரு நிமிட சிரிப்புக்காக மற்றொருவரின் மனதை காயப்படுத்தக்கூடாது என்பதை குமரிமுத்து எனக்கு கற்றுக்கொடுத்தார்" என்று அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் தற்போது ஊர்வசியின் இந்த பேட்டி பரவலாக பகிரப்பட்டு வருகிறது. "ஒருவரின் தோற்றத்தை வைத்து கேலி செய்வது எவ்வளவு ஆழமான காயத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது" என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சினிமாவில் நகைச்சுவையாக காட்டப்பட்ட பல விஷயங்கள், நிஜ வாழ்க்கையில் ஒருவரின் மனதை எவ்வளவு பாதிக்கக்கூடும் என்பதை குமரிமுத்துவின் வாழ்க்கையும், ஊர்வசியின் இந்த ஒப்புதலும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளது. சிரிப்பை கொடுத்த கலைஞன் குமரிமுத்து இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும், "இந்த கண்கள்தான் எனக்கு சோறு போடுது" என்ற அவரது வார்த்தை பலரின் மனதிலும் நீண்ட காலம் ஒலித்துக்கொண்டே இருக்கும்.சிரிப்பின் பின்னால் இருந்த வலி
குமரி முத்து சொன்ன வார்த்தை
என்று கூறினார்.
என்று நினைவு கூர்ந்தார்.National Award: விருதை கையில் வாங்கியதும் ஊர்வசி சொன்ன விஷயம்! எமோஷனலான ஜிவி பிரகாஷ்! குவியும் பாராட்டு
கண் கலங்கிய ஊர்வசி
வாழ்க்கையை மாற்றிய பாடம்
ஊர்வசி சொன்ன வார்த்தை வைரல்