60 வருஷமா பேசியே நாட்டை கெடுத்துட்டாங்க.. விஜய் ஏன் அமைதியா இருக்கிறார்?விமர்சனத்துக்கு SAC அதிரடி


  • சென்னை: தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு அவரைச் சுற்றி அதிகமாக பேசப்படும் ஒரு விமர்சனம் என்னவென்றால் "வெளியில் மேடையில் பேசும் அளவுக்கு சட்டசபையில் பேசவே இல்லை" என்பதுதான். பொதுக்கூட்ட மேடைகளில் ஆக்ரோஷமாக பேசும் விஜய், சட்டசபைக்குள் சென்றவுடன் ஏன் அமைதியாக இருக்கிறார், ஏன் செய்தியாளர்களை சந்தித்து கருத்து சொல்லவில்லை, ஏன் எல்லா விவகாரத்துக்கும் நேரடியாக பதில் தரவில்லை என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கின்றன.

    Advertisement

    இந்த சூழ்நிலையில், அந்த விமர்சனங்களுக்கு விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கொடுத்த பதில் தான் இப்போது வைரலாகி வருகிறது.

    Advertisement

    எஸ் ஏ சந்திரசேகர் பேட்டி

    செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஏ.சி, "கடந்த 60 ஆண்டுகளாக இங்க இருக்கிற அரசியல்வாதிகள் பேசி பேசியே நாட்டை கெடுத்துட்டாங்க. வெறும் பேச்சை மட்டும் கேட்டு மக்கள் பழகிட்டாங்க. அதே மாதிரி விஜயும் தினமும் பேசணும்னு எதிர்பார்ப்பது சரியில்லை. அரசியலில் பேசுறது முக்கியமில்லை... செயல்படுறதுதான் முக்கியம்.

    விஜய் மக்களுக்காக களத்தில் இறங்கி வேலை செய்கிறார். மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அப்படி செய்கிற ஒருத்தர் தேவையில்லாமல் எதற்காக எப்போதும் பேசிக்கிட்டே இருக்கணும்?" என்று கூறியிருக்கிறார். இந்த ஒரு பதிலே, விஜயை "வாயைத் திறக்காத முதல்வர்" என்று விமர்சித்தவர்களுக்கு நேரடி பதிலடி போல பார்க்கப்படுகிறது.

    Advertisement

    விஜயின் ஸ்பெஷல் பிறந்தநாள்

    அதிலும் இந்த முறை விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பற்றி எஸ்.ஏ.சி பேசியது ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமாக பேசப்படுகிறது. இதுவரை விஜய் தனது பிறந்தநாளை ஒரு நடிகராக கொண்டாடியிருக்கலாம்; ஆனால் இந்த முறை அது வேறு மாதிரி இருந்தது என்றார் எஸ்.ஏ.சி. "இந்த முறை அவர் நடிகராக இல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். இந்த நிலைக்கு வர காரணம் மக்கள் அவர்மீது வைத்த அன்பு, குழந்தைகள் வைத்த பாசம், ரசிகர்கள் கொடுத்த நம்பிக்கை. அதனால்தான் அவர் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற பொறுப்போடு இருக்கிறார்" என்று பெருமையாக கூறியுள்ளார்.

    Advertisement

    விமர்சனங்களுக்கு பதில்

    விஜயைச் சுற்றியுள்ள விமர்சனங்களில் முக்கியமான ஒன்று, "படங்களில் மட்டும் வீர வசனம்... ஆனால் சட்டசபையில் அமைதி" என்பதுதான். குறிப்பாக எதிர்க்கட்சியினரும், சில அரசியல் விமர்சகர்களும், "பொதுக்கூட்டத்தில் தீவிரமாக பேசும் விஜய், சட்டசபையில் ஏன் அதே வேகத்தில் குரல் கொடுக்கவில்லை?" என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

    சட்டசபையில் அவர் பல நேரங்களில் அமைதியாக அமர்ந்து மற்றவர்கள் பேசுவதை கவனிப்பது, நோட்ஸ் எடுத்துக் கொண்டே இருப்பது, முகத்தில் பெரிய வெளிப்பாடு இல்லாமல் இருப்பது என இதையெல்லாம் வைத்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்களும் விமர்சனங்களும் ஓடியன.

    Advertisement

    ஆனால் அதற்கே இப்போது எஸ்.ஏ.சி சொன்ன பதில், விஜய்யின் அரசியல் பாணியை விளக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. "செயல்படுறதுதான் முக்கியம்" என்ற வரி தான் இதில் ஹைலைட். அதாவது, தினமும் மைக் பிடித்து பேசுவதைவிட, முடிவெடுத்து அதை நிறைவேற்றுவது தான் ஆட்சியின் மொழி என்ற சைகையையே எஸ்.ஏ.சி கொடுத்திருக்கிறார் என்று விஜய் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். மறுபுறம், விமர்சகர்கள் மட்டும் "அமைதியை அரசியல் யுக்தியாக மாற்றிக் காட்டுகிறார்கள்" என்றும் கூறி வருகிறார்கள்.

    விஜயின் அரசியல் பயணத்தை ஆரம்பத்திலிருந்தே நெருக்கமாக பார்த்தவராக அவருடைய அப்பா எஸ்.ஏ.சி பேசுவதால், இந்த கருத்துக்கு கூடுதல் கவனம் கிடைத்திருக்கிறது. ஒரு தந்தையாக மகனைப் பாராட்டுகிறார் என்பதற்கும் அப்பாற்பட்டு, "விஜய் பேசாமல் இருப்பது பலவீனம் இல்லை; அது திட்டமிட்ட அணுகுமுறை" என்ற கோணத்தில் இந்த பேச்சு பேசப்படுகிறது.

    Advertisement

    குறிப்பாக விஜய் முதல்வராகி சில வாரங்களே ஆன நிலையில், அவரைச் சுற்றியுள்ள ஒவ்வொரு நடவடிக்கையும் இப்போது பெரிதாக கவனிக்கப்படும் சூழல் இருக்கிறது. அந்த சூழலில் எஸ்.ஏ.சி கொடுத்த இந்த பதில், "விஜய் மவுனம் காக்கிறாரா... இல்லை வேலையிலேயே பதில் சொல்கிறாரா?" என்ற புதிய விவாதத்தையே கிளப்பியுள்ளது.

    மொத்தத்தில், "60 வருஷமா பேசி பேசியே நாட்டை கெடுத்துட்டாங்க" என்ற எஸ்.ஏ.சியின் வரி வெறும் அரசியல் கமெண்ட் அல்ல; விஜயின் தற்போதைய ஆட்சிப் பாணியை பாதுகாக்கும் மிகத் தெளிவான பதிலாகவே பார்க்கப்படுகிறது. சட்டசபையில் அமைதியாக இருக்கும் முதல்வர் விஜய், வெளியிலோ உள்ளேயோ எப்போது எந்த மொழியில் பதில் சொல்வார் என்ற கேள்வி இன்னும் தொடர்ந்தாலும், இப்போதைக்கு அந்த விவாதத்துக்கு தந்தை எஸ்.ஏ.சி கொடுத்த பதில் தான் சமூக வலைதளங்களில் முழுக்க முழுக்க ஓடிக் கொண்டிருக்கிறது.

    English Summary

    Vijay: Director SA Chandrasekhar has come out strongly in support of Chief Minister Vijay amid criticism that he is not speaking enough in the Assembly or to the media. In a sharp response, SAC said Tamil Nadu has already been damaged by politicians who “kept talking for 60 years” without meaningful action, and argued that governance should be judged by work rather than constant speeches. He also highlighted Vijay’s latest birthday as a special one, saying this time he celebrated not as an actor but as a people-elected Chief Minister. SAC’s comments are now being seen as a direct defence of Vijay’s political style, with supporters saying his silence is a strategy focused on action rather than rhetoric.