சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த விஜய், இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக உயர்ந்திருக்கிறார். அரசியலுக்கு வந்த பிறகும் அவரைச் சுற்றி விமர்சனங்கள், பாராட்டுகள் என விவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், இன்று அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் விஜய்யின் பின்னால், பலருக்கும் தெரியாத ஒரு கஷ்டமான குடும்பப் பயணம் இருந்ததாக இயக்குநரும் நடிகருமான ரங்கநாதன் பகிர்ந்துள்ள தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரங்கநாதன் பேட்டி
ஒரு பேட்டியில் அவர் பேசியபோது, "இப்போது விஜய் முதல்வராக இருப்பதால் அவர் எந்த கஷ்டமும் இல்லாமல் வளர்ந்தார் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது" என்று ஆரம்பித்தார்.
அவர் தொடர்ந்து, "எங்கள் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆரம்ப காலத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். சினிமாவில் ஒரு வாய்ப்புக்காக பல கதவுகளைத் தட்டினார். விஜய் பிறந்த பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கை சீராக ஆரம்பித்தது. அதற்கு முன்பு குடும்பம் சந்தித்த கஷ்டங்களை வெளியில் யாரும் பார்த்ததே இல்லை" என்றார்.
அவரை மிகவும் நெகிழ வைத்த சம்பவத்தையும் அவர் பகிர்ந்தார். "விஜய் கைக்குழந்தையாக இருந்த காலம் அது. வீட்டில் குழந்தைக்கு பால் பவுடர் வாங்கிக் கொடுக்க கூட வசதி இல்லாத நிலை. ஒரு பிரபல நடிகர் உதவுவார் என்ற நம்பிக்கையில் எஸ்.ஏ. சந்திரசேகர் அவருடைய வீட்டிற்கு சென்றார். 'நாளைக்கு வாங்க' என்று சொன்னதால் மறுநாளும் முழு நாளும் காத்திருந்தார். இரண்டு நாட்கள் தொடர்ந்து அந்த வீட்டின் வாசலில் நம்பிக்கையோடு இருந்தும், கடைசி வரை ஒரு டின் பால் பவுடர் கூட கிடைக்கவில்லை. அந்த ஏமாற்றத்தோடு வீட்டிற்கு திரும்பிய சம்பவம் இன்னும் மறக்க முடியாது" என்று ரங்கநாதன் உருக்கமாக கூறியுள்ளார். அந்த நேரத்தில் விஜய் குழந்தை என்பதால் இந்த சம்பவங்கள் அவருக்குத் தெரியாது. ஆனால் வளர்ந்த பிறகு தனது பெற்றோர் சந்தித்த போராட்டங்களை எஸ்.ஏ. சந்திரசேகரும், ஷோபாவும் விஜயிடம் சொல்லித்தான் வளர்த்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். "எந்த கஷ்டம் வந்தாலும் உடைந்து போகக்கூடாது... போராடினால் வெற்றி நிச்சயம் என்ற மனப்பக்குவத்தில்தான் விஜய் வளர்க்கப்பட்டார். அதனால்தான் சினிமாவில் ஆரம்பத்தில் எவ்வளவு விமர்சனம் வந்தாலும் அவர் பதிலடி கொடுக்கவில்லை. தன்னுடைய உழைப்பால் மட்டுமே அனைவரையும் பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தார்" என்றும் ரங்கநாதன் கூறியுள்ளார். சினிமாவில் அறிமுகமான காலத்தில் விஜய்யின் தோற்றம், நடிப்பு, நடனம் என பல விஷயங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. "ஹீரோவாக முடியாது", "நீடிக்க மாட்டார்" என்ற விமர்சனங்களையும் அவர் சந்தித்தார். ஆனால் ஒவ்வொரு படத்திலும் தன்னை மேம்படுத்திக் கொண்ட அவர், பின்னர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார். அதன்பிறகு அரசியலிலும் களம் இறங்கி, மக்கள் ஆதரவுடன் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். தற்போது மக்கள் மத்தியில் நேரடியாக சென்று அரசு திட்டங்களை தொடங்கி வைப்பது, மராத்தான் ஓட்டம் போன்ற பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, பொதுமக்களுடன் புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து பேசுபொருளாகி வருகின்றன. அதே நேரத்தில் அவரை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த சூழலில் ரங்கநாதன் பகிர்ந்துள்ள இந்த பழைய நினைவு, "இன்று அதிகாரத்தில் இருப்பவரின் பின்னால் எவ்வளவு வலி, அவமானம், போராட்டம் இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது" என்ற விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், "பால் பவுடருக்கே வழியில்லாத குடும்பத்தில் பிறந்த குழந்தை இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக உயர்ந்திருக்கிறார்... அதற்கு காரணம் விடாமுயற்சியும், பெற்றோர் கற்றுக் கொடுத்த வாழ்க்கைப் பாடமும்தான்" என்று பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.எஸ்.ஏ. சந்திரசேகர் பட்ட கஷ்டங்கள்
விஜய் பேசும்போது எமோஷனலான திரிஷா.. கண்கலங்கி கையெடுத்து கும்பிட்ட எஸ்.ஏ சந்திரசேகர்
முதல்வர் விஜய் ஆரம்பகாலம்