சென்னை: விஷ்ணு விஷால் என்பவர் சிறந்த நடிகர்.. தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கால் முறிவில் ஆரம்பித்து கல்யாண முறிவு வரை பல சரிவுகள் ஏற்பட்டாலும், கலைத்துறையின் மீது கொண்ட ஈடுபாட்டால் அவர் தொடர்ந்து முன்னேறி வருகிறார் என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.. அத்துடன் விஷ்ணு விஷால் சந்தித்த சறுக்கல்கள், சாதனைகளையும் விலாவரியாக அந்த பேட்டியில் பதிவு செய்துள்ளார்.
Aram Naadu என்ற சேனலில் பேட்டி தந்துள்ள தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "விஷ்ணு விஷால் அடிப்படையில் சச்சின் டெண்டுல்கரைப் போலச் சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் உழைத்த ஒரு தீவிரமான கிரிக்கெட் வீரர் ஆவார். மாநில அளவிலான போட்டிகளுக்குத் தேர்வாகியிருந்த நேரத்தில், கடுமையான உழைப்பு மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக அவரது 2 கால்களின் எலும்புகளிலும் 'ஏர்லைன் கிராக்' எனப்படும் சிறிய விரிசல்கள் ஏற்பட்டன.
டாக்டரின் அட்வைஸ்படி குறைந்தது 6 மாதங்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டியிருந்தது. அந்த ஓய்வுக் காலத்தில்தான் நிறைய சினிமா படங்களை பார்த்து, அவருக்குள் நடிப்பதற்கான ஆர்வம் பிறந்தது. அவரது அப்பா ரமேஷ் குடவாலா ஒரு புகழ்பெற்ற ஏடிஜிபி (ADGP) காவல் அதிகாரி ஆவார். தான் ஒரு பெரிய போலீஸ் ஆபீசராக இருந்தாலும், தனது மகனின் சினிமா வாய்ப்பிற்காக ஒவ்வொரு அலுவலகமாக கூடவே வந்து மணிக்கணக்காகக் காத்திருந்தார். ஒரு உயரிய பதவியில் இருக்கும் தன்னுடைய அப்பாவை இப்படி காக்க வைத்துவிட்டோமே என்ற குற்ற உணர்வுதான், விஷ்ணு விஷாலுக்குள் ஒரு பெரிய வைராக்கியத்தை ஏற்படுத்தியது. இந்த துறையில் சாதித்தே தீர வேண்டும் என்ற வெறியோடு உழைத்த அவருக்குச் சுசீந்திரன் இயக்கத்தில் கிடைத்த முதல் சான்ஸ்தான் 'வெண்ணிலா கபடி குழு'. அந்த படம் அவருக்குப் பெரிய அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு அவர் வழக்கமான வணிகப் படங்களைத் தேர்ந்தெடுக்காமல் 'ஜீவா', 'மாவீரன் கிட்டு', 'முண்டாசுப்பட்டி' மற்றும் 'நீர்பறவை' போன்ற முற்றிலும் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தனது எதார்த்தமான நடிப்புத் திறமையை நிரூபித்தார். காடன் என்ற படத்தில் சண்டை காட்சியொன்றில் நடித்தபோது அவருக்கு முதுகுத் தண்டுவடத்தில் கடுமையான காயம் ஏற்பட்டு, 8 மாதங்களுக்கும் மேலாக முடங்க நேர்ந்தது. நடிகர் அஜித் குமார் போல , விஷ்ணு விஷாலும் மீண்டு வந்து 'இன்று நேற்று நாளை', 'ராட்சசன்', 'எப்.ஐ.ஆர்' மற்றும் 'கட்டா குஸ்தி' போன்ற தொடர் வெற்றிகளைத் தந்தார். அவரது 'லால் சலாம்' படத்தில் ரஜினிகாந்தின் கவுரவத் தோற்றம் படத்தின் ஒட்டுமொத்தப் புகழையும் ஆக்கிரமித்ததால், விஷ்ணு விஷாலுக்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் போனது. தனிப்பட்ட வாழ்க்கையில், காதலித்து மணம் முடித்த பந்தம் விவாகரத்தில் முடிந்ததாலும், 'ஆரியன்' என்ற ஆண் குழந்தை இருந்ததாலும் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகி, மதுப் பழக்கத்திற்கும் அடிமையானார். இருந்தாலும் அதிலிருந்தும் மீண்டு வந்து தற்போது 'கட்டா குஸ்தி 2' உள்ளிட்ட படங்களில் பன்முகத்தன்மையுடன் நடித்து வருகிறார். ஆனாலும் 100 கோடி அல்லது 150 கோடி வசூலைத் தாண்டிய ஒரு பிரம்மாண்ட மேசிவ் ஹிட் திரைப்படம் அவருக்கு இன்னும் அமையவில்லை, அதற்கான போராட்டம் தொடர்கிறது. நடிகர் சூர்யாவே 400 கோடி வசூலைத் தொடுவதற்குத் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராட வேண்டியிருந்தது. அதுபோல மாபெரும் வெற்றி விஷ்ணு விஷாலுக்கும் எதிர்காலத்தில் நிச்சயம் கிடைக்கும். சினிமாவில் அவரது பெயர் நிலையாக நிலைத்து நிற்கும். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கால் முறிவில் ஆரம்பித்து கல்யாண முறிவு வரை பல சரிவுகள் ஏற்பட்டாலும், கலைத்துறையின் மீது கொண்ட ஈடுபாட்டால் அவர் தொடர்ந்து முன்னேறி வருகிறார். சினிமா உலகம் என்பது வெளியில் இருந்து பார்ப்பது போல எளிதானது கிடையாது... வெற்றி பெறும் வரை இங்கு ஈகோ பிரச்சனைகள் முதல் அனைத்து விதமான மோதல்களையும் கடந்துதான் வரவேண்டும் என்பதுதான்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.யார் இந்த விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால் ஹிட் படங்கள்
கால் முறிவு டூ கல்யாண முறிவு
100 கோடி வசூல் படங்கள்