சென்னை: நடிகர் வடிவேலு குறித்து கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் அடிக்கடி எழுந்த விமர்சனங்களில் ஒன்று, தன்னுடன் நெருக்கமாக பணியாற்றிய பல பிரபலங்களின் இறுதி அஞ்சலியில் அவர் நேரில் கலந்து கொள்ளாதது பற்றியது.
குறிப்பாக நடிகர் விவேக் மற்றும் கேப்டன் விஜயகாந்தின் மறைவு நேரத்தில் வடிவேலு காணப்படாதது சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அந்த விமர்சனங்களுக்கு தற்போது வடிவேலு மனம் திறந்து விளக்கம் அளித்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய ஒரு பேட்டியில் இதுகுறித்து பேசும்போது வடிவேலு மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். "விவேக் இழப்பு எனக்கு தாங்க முடியாத வேதனை. அவருடைய இறப்புக்கு கூட நான் போகலன்னு நிறைய பேர் பேசினாங்க. ஆனால் அதுக்குப் பின்னாடி இருந்த உண்மை யாருக்கும் தெரியாது". என்று சொல்லி இருக்கிறார். மேலும் அவர் பேசுகையில், "அந்த நேரம் கொரோனா காலம். நானே உடல்நல பிரச்சனையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தேன். எங்க வீட்டிலேயே எல்லாரும் பயத்துல இருந்தாங்க. ஒருத்தருக்கு ஏதாவது ஆயிடுமோன்னு அச்சம் இருந்தது. அதனால்தான் நேரடியாக போக முடியல. ஆனா அதுக்காக நான் கவலைப்படலன்னு அர்த்தம் இல்ல. பிறகு அவரோட வீட்டுக்கு நேரில் போய், மனைவி, பிள்ளைகள் எல்லாரிடமும் ஆறுதல் சொல்லிட்டு வந்தேன்" என்று கண்கலங்க கூறியிருக்கிறார். இந்த விளக்கம் ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. ஏனென்றால் நடிகர் விவேக் மற்றும் வடிவேலு இணைந்த காமெடி காட்சிகள் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத பொக்கிஷங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றன. இருவரின் டைமிங் காமெடி, கவுண்டர் வசனங்கள், இயல்பான நடிப்பு - இவை எல்லாம் சேர்ந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவை. அப்படிப்பட்ட நெருக்கமான கூட்டணியில் இருந்த ஒருவரின் இறப்புக்கு வடிவேலு செல்லாதது அப்போது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. நடிகர் விவேக் கடந்த 2021ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியது. சின்ன கலைவாணர் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட விவேக், வெறும் காமெடி நடிகராக மட்டும் இல்லாமல், சமூக கருத்துக்களை நகைச்சுவையுடன் சொன்ன தனித்துவமான கலைஞர். மரம் நடும் விழிப்புணர்வு முதல் கல்வி பற்றிய கருத்துகள் வரை பல நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு சென்றவர். அதேபோல் கேப்டன் விஜயகாந்த் மறைந்தபோதும் வடிவேலு நேரில் செல்லவில்லை என்பது குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. ஏற்கனவே அரசியல் மற்றும் சினிமா பின்னணியில் இருவருக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக பேசப்பட்டதால், அந்த விமர்சனங்கள் இன்னும் அதிகரித்தன. "எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் இறப்பு வீட்டுக்கு போயிருக்கலாம்" என்ற கருத்துகளும் அப்போது பரவின. ஆனால் தற்போது வடிவேலு அளித்துள்ள இந்த விளக்கம், அவர் வெளியில் காட்டாத தனிப்பட்ட வேதனைகளும் இருந்திருக்கலாம் என்ற எண்ணத்தை சிலரிடம் ஏற்படுத்தியுள்ளது. வெளியில் அமைதியாக இருந்ததால் அவர் உணர்ச்சியற்றவர் என்று முடிவு செய்து விட முடியாது என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் காமெடி உலகையே ஆட்சி செய்த வடிவேலு, தனது தனித்துவமான உடல் மொழி, வசன உச்சரிப்பு, காமெடி டைமிங் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர். விவேக், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலருடன் இணைந்து எண்ணற்ற ஹிட் காட்சிகளை கொடுத்தவர். ஆனால் அவரது தனிப்பட்ட முடிவுகள் பலமுறை சர்ச்சையையும் கிளப்பியிருக்கின்றன. தற்போது அவர் கண்கலங்க கூறிய இந்த விளக்கம், பழைய விமர்சனங்களை மீண்டும் பேச வைத்தாலும், மறுபக்கம் அவரின் மனிதநேய பக்கத்தையும் ரசிகர்கள் புதிதாக பார்க்க வைத்திருக்கிறது. "போகலன்னா பாசம் இல்லன்னு அர்த்தமில்லை" என்ற வடிவேலுவின் மறைமுக பதில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.வடிவேலு பேட்டி
வடிவேலு விவேக் நடிப்பு
விவேக் இறப்பு
வடிவேலு பற்றிய சர்ச்சை
ரஜினி பற்றி பரவிய சர்ச்சை.. இதுதாங்க நடந்தது.. நானே நொந்து போயிட்டேன்.. வடிவேலு விளக்கம்