சென்னை: தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த கிராமத்து நாயகனான நடிகர் பாண்டியனின் எதார்த்தமான திரையுலகப் பயணம் குறித்தம், அவரது பந்தா இல்லாத குணம் குறித்தும், தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் விரிவாக கூறியிருக்கிறார்.. பாண்டியனுக்கு பிடித்த அசைவ உணவுகள், அவரது நட்பு வட்டாரமான 'பஞ்சபாண்டவர்கள்' கூட்டணி போன்றவை குறித்தும் விலாவரியாக பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார். இதை பாண்டியனின் ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.
media circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள ஆஸ்கார் மூவிஸ் பாலாஜி பிரபு, "1985 முதல் 1989-ல் அவருக்குத் திருமணம் ஆகும் வரை, ராயப்பேட்டையில் உள்ள எங்கள் ஆஸ்கார் மூவிஸ் ஆபீஸ் கட்டடத்தின் மேல் மாடியில் தான் பாண்டியன் வாடகைக்குக் குடியிருந்தார்.
அவரோடு செம்பகமூர்த்தி, வடுகுநாதன், கணபதி ஆகிய நால்வரும் பேச்சுலர்களாக தங்கியிருந்தார்கள். அப்போது எனக்கு 13, 14 வயது இருக்கும். நான் அடிக்கடி அவர் வீட்டுக்குச் செல்வேன். ஒரு பெரிய நடிகராக இருந்தாலும், சட்டை கூட போடாமல் சாதாரணமாகப் பாயில் படுத்துக் கிடப்பார் பாண்டியன்.. அவரிடம் எந்தவிதமான அல்டாப்போ, பந்தாவோ நான் பார்த்ததே இல்லை. அவருக்குச் சாப்பாட்டு விஷயத்தில் அசைவம் என்றால் கொள்ளை பிரியம். எங்கள் ஆபீஸ் முக்கிலிருந்த புகழ்பெற்ற ராமசாமி ஹோட்டலில் இருந்து நாட்டுக்கோழி பிரியாணி, மூளை வறுவல், விரால் மீன் போன்றவற்றை லேண்ட்லைனில் போன் செய்து ஆர்டர் கொடுத்து அடிக்கடி வாங்கிச் சாப்பிடுவார் பாண்டியன்.. பொதுவாகச் சினிமாக்காரர்களுக்கு வீடு தர யோசிப்பார்கள், ஆனால் பாண்டியன் 1ம் தேதி வந்தவுடன் வாடகை பணத்தைக் கவரில் போட்டு சரியாக கொடுத்துவிடும் ஒரு பெர்ஃபெக்ட் ஜென்டில்மேன். சினிமாவில் விஜயகாந்த், ராதாரவி, தியாகு, வாகை சந்திரசேகர், பாண்டியன் ஆகிய 5 பேரும் பஞ்சபாண்டவர்கள் போல ஒரு சிறந்த நட்புக் கூட்டணியாகச் சுற்றி வந்தார்கள். எந்த விசேஷம் என்றாலும் ஒரே காரில் தான் போவார்கள், ஒன்றாக சாப்பிட போவார்கள், ஒன்றாகச் சேர்ந்து அரட்டை அடிப்பார்கள். சினிமாவில் பிரபு, கார்த்திக், ரகுவரன் போன்றோரை போல, பாண்டியனும் ஒரு மினிமம் கேரண்டி நடிகராக விளங்கினார். அதாவது, 30 லட்சம் பட்ஜெட்டில் பாண்டியனை வைத்துப் படம் எடுத்தால் தயாரிப்பாளருக்கு நிச்சயம் 2 முதல் 3 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும் என்ற பிசினஸ் மார்க்கெட் அவருக்கு இருந்தது. "டேய் நம்ம பாண்டியன் படம்ப்பா, மண்வாசனை பாண்டியன்" என்று போஸ்டரைப் பார்த்தே மக்கள் தியேட்டருக்கு வந்தார்கள். பாண்டியராஜன் இயக்கத்தில் அவர் நடித்த "ஆண் பாவம்" படம் அண்ணன்-தம்பி கதையாக மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி, அவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. நிறைய நடிகர்கள் செய்யும் அதே தப்பைப் பாண்டியனும் செய்தார். சொந்தமாகப் படம் எடுக்க ஆரம்பித்தார். அவர் தயாரித்த "பந்தய குதிரை" படம் 90% முடிந்தும் ரிலீஸ் ஆகாமல் முடங்கியது. "ஆண்களை நம்பாதே" படமும் நஷ்டமடைந்தது. இப்படி அடுத்தடுத்து தயாரித்த படங்கள் தோல்வியடைந்ததால் பெரும் கடனாளியாக மாறி, தன் மனநிம்மதியை இழந்தார். பட வாய்ப்புகளும் குறைந்தன. அந்தச் சரிவிலும் பாரதிராஜா சார் மீண்டும் 'கிழக்குச் சீமையிலே' படத்தில் "எதுக்கு பொண்டாட்டி..." பாடலின் மூலம் அவருக்கு மறுவாழ்வு தந்தார். சிட்டிசன், பெரிய மருது எனப் பல படங்களில் நடித்தார். ஆனால், கடன்பிரஷர் காரணமாக பாண்டியன் ஓவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார். "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பது போல, அந்தப் பழக்கத்திலிருந்து அவரால் மீளவே முடியவில்லை. மஞ்சள்காமாலை நோய் வந்த பிறகும், நண்பர்கள், மனைவி, மகன் யார் சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து குடித்தார். கடைசி காலத்தில் கல்லீரல் பாதிக்கப்பட்டு பணமும் இல்லாமல் நஷ்டப்பட்டு நின்றபோது, பாரதிராஜா சார் தான் தன் ஆபீஸிலேயே வைத்து அவரைப் பராமரித்து வந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நோயோடு போராட முடியாமல் 2008-ல் பாண்டியன் இறந்துபோனார். சமீபத்தில் நாம் திறமையான கலைஞர் ரோபோ சங்கரை எப்படிக் குடியினாலேயே ஆபத்தான கட்டத்திற்குச் சென்று இழந்துவிட்டோமோ, அப்படித்தான் அன்று பாண்டியனும் குடியிலிருந்து வெளியில் வர முடியாமல் மரணத்தைத் தழுவினார். இதுதான் நடிகர் பாண்டியனின் சொல்லப்படாத பக்கங்கள்." என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.நடிகர் பாண்டியன் - நல்ல மனிதர்
பஞ்ச பாண்டவர்கள் நட்பும்
சொந்தப் பட நஷ்டம்
லிவர் ஃபெயிலியர்