திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை இன்று திறக்கப்படுகிறது. தமிழின் ஆடி, மலையாள கருக்கிடகம் மாதப் பிறப்புகளின் மாதாந்திர பூஜைக்காக இன்று மாலை சபரிமலை நடை திறக்கப்படுகிறது. ஜுலை 21 வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ள் நிலையில், ஆன்-லைன் முன்பதிவு துவங்கியுள்ளது.
கேரளாவின் மலைப்பகுதியில் அமைந்துள்ள சபரிமலையில் குடிகொண்டிருக்கும் தர்மசாஸ்தா ஐயப்பனை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி, கேரளா, தமிழகம்,கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கமாக உள்ளது.
சபரிமலைக்கு பக்தர்கள் பொதுவாக பம்பா மற்றும் எரிமேலி வழியாக புனித பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில் இந்தப் பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெற்ற மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாவுக்காக கோவில் நடை திறக்கப்பட்டு, அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலையை தரிசித்தனர். பின்னர் மகரவிளக்கு பூஜை நிறைவடைந்ததைத் தொடர்ந்து கோவில் நடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில், மலையாள "கருக்கிடகம்" மற்றும் தமிழின் "ஆடி" மாதப்பிறப்புகளை முன்னிட்டு, மாதாந்திர பூஜைக்காக இன்று (ஜுலை 16ம் தேதி) மாலை 5 மணிக்கு பிரசித்தி பெற்ற சபரிமலை நடை திறக்கப்படுகிறது. ஜூலை 21ம் தேதி வரை வழக்கமான மாதாந்திர பூஜைகளில் பங்கேற்று பக்தர்கள் தரிசனம் செய்ய "வெர்ச்சுவல் க்யூ" மூலம் ஆன்-லைன் முன்பதிவு துவங்கியுள்ளது. இன்று (16.07.26 ) மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி பிரசாந்த் நம்பூதிரி, நடைதிருந்து யோக நித்திரையில் இருக்கும் ஐயப்பனுக்கு தீபம் காட்டி வழக்கமான பூஜைகளை துவக்குகிறார். தொடர்ந்து, மேல்சாந்தி கற்பூர ஆழியில் தீபம் ஏற்றியதும் பக்தர்கள் 18ம் படியேறி சாமி தரிசனம் செய்யத் துவங்குவர். ஜுலை 21-ம் தேதி வரை நிர்மல்ய பூஜை, கணபதி ஹோமம், நெய் அபிஷோம், புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. தினமும் காலை 5 மணிக்கு நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்குப் பின் இரவு 10மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். பக்தர்கள், தரிசனத்திற்காக sabarimalaonline.org. in மற்றும் தங்கும் விடுதிக்கு https://www.onlinetdb.com என்ற அதிகாரபூர்வ இணைய தளங்களில் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.