சாகித்ய அகாடமி விருது பெறுவதில் நெல்லை சாதனை.. இதுவரை 12 பேருக்கு விருது!
நெல்லை: சாகித்ய அகாடமி விருது பெறுவதில் நெல்லை மாவட்டம் புதிய சாதனையையும், பெருமையையும் பெற்றுள்ளது. கொற்கை நாவலுக்காக இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற ஜோ டிகுரூஸ், இந்த விருதைப் பெறும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 12வது இலக்கியவாதி ஆவார்.
இதன் மூலம் கல்வி மாவட்டமாக இதுவரை அறியப்பட்டு வந்த நெல்லை தற்போது இலக்கியச் சோலையாகவும் தன்னை அடையாளம் காட்டி பெருமிதத்துடன் நிமிர்ந்து நிற்கிறது.
நெல்லை தந்த எழுத்தாளர்கள் ஏராளம்.. எனவே சாகித்ய அகாடமி போன்ற உயரிய விருதுகளை நெல்லையில் வந்து குவிவதில் ஆச்சரியம் இல்லைதான்.
கடலோரக் கவிதை
திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரை கிராமமான உவரியை சேர்ந்தவர் ஜோ டி குருஸ். சென்னை வணிக கப்பல் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக உள்ளார். இவரது நாவல் "கொற்கை' கடற்கரை வாழ் மக்களின் கதையை சொல்கிறது.
முத்து வணிகத்தில் முத்திரை பதித்த நெல்லை
பண்டைக் காலத்தில் முத்து வணிகத்தில் செழித்து விளங்கிய நெல்லை மாவட்டத்தின் (தற்போது தூத்துக்குடி) கொற்கை துறைமுக பகுதியில், 1914ல் துவங்கும் நாவலின் கதை, 2000 ஆண்டில் நிறைவு பெறுகிறது. கப்பல் வணிகத்தின் முன்னேற்றம், கொற்கையில் செழித்த பிற தொழில்களின் விருத்தி, கதை நடக்கும் காலத்தில் இடம்பெறும் அரசியலின் முக்கிய நிகழ்வுகள், வெள்ளையர்கள் மற்றும் கத்தோலிக்க மத பிரதிநிதிகளின் நிலை என, கொற்கையின் உருமாற்றத்தை பிரமிக்கத்தக்க வகையில், எண்ணற்ற தகவல்களுடனும், பாத்திரங்களுடனும் படைத்திருக்கிறார் குருஸ்.
ஆழி சூழ் உலகு
இவர், ஏற்கனவே "ஆழி சூழ் உலகு' என்ற நாவலை எழுதியுள்ளார். நெல்லை தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி, சென்னை லயோலா கல்லூரியில் எம்.ஏ., பொருளாதாரம், திருச்சி ஜோசப் கல்லூரியில் எம்.பில்., பயின்றவர். இவரின் "ஆழி சூழ் உலகு' நாவலுக்கே, இத்தகைய இலக்கிய கவுரவம் எதிர்பார்க்கப்பட்டது.
கடற்கரை சமுதாயத்துக்குக் கிடைத்த அங்கீகாரம்
சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வானது குறித்து ஜோ டி குருஸ் கூறுகையில், கடற்கரை சமுதாயத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். இதன் மூலம், சமவெளி சமுதாய மக்களின் பார்வை, நீர்தேவதையின் மக்கள் மீது படும் என நினைக்கிறேன். சாகித்ய அகாடமி விருதை எதிர்பார்க்கவில்லை. இலக்கிய ஜாம்பவான்கள் பிறந்த நெல்லை மண்ணில் பிறந்ததற்காகவும், எனக்கும் விருது கிடைத்ததற்காகவும் மகிழ்கிறேன் என்றார்.
சென்னையில் வசிக்கும் குரூஸ்
இவரது மனைவி சசிகலா, மகன் அந்தோணி டி குருஸ் 11, மகள் ஹேமா டி குருஸ் 10, ஆகியோருடன் சென்னையில் வசிக்கிறார்.
இதுவரை 12 விருதுகள்
நெல்லை மாவட்டத்தில் இதுவரை 12 பேருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. 1955 ம் ஆண்டு ராஜவல்லிபுரம் ராபிசேதுபிள்ளை எழுதிய தமிழ் இன்பம், 1962 ம் ஆண்டு மீனாட்சிபுரம் சோமசுந்தரம் எழுதிய அக்கறை சீமையிலே, 1965 ம் ஆண்டு கோடகநல்லூர் பிஸ்ரீ.ஆச்சார்யா, ராமனுஜர் வாழ்க்கை வரலாறு, 1970.ம் ஆண்டு இடைசெவல் அழகிரிசாமி அன்பளிப்பு சிறுகதை தொகுப்பு , 1978 ம் ஆண்டு ராஜவல்லிபுரம் வல்லிக் கண்ணன் புதுக் கவிதை தோற்றமும் வளர்ச்சியும், 1983 ம் ஆண்டு தொமுசி ரகுநாதன்.பாரதி காலமும் கருத்தும் ஆய்வு கட்டுரை, 1987 ம் ஆண்டு ஆதவன் சுந்தரம் முதலில் இரவு வரும் சிறுகதை தொகுதி, 1990 ம் ஆண்டு சு.சமுத்திரம் வேரில் பழுத்த பலா நாவல், 1991 ம் ஆண்டு கி.ராஜநாராயணன் கோபாலபுரத்து மக்கள் -நாவல், 2000 ம் ஆண்டு சிவசங்கரன் விமர்சனங்கள்,மதிப்புரை,பேட்டிகள்,ஆய்வு கட்டுரைகள், 2012 ம் ஆண்டு டி.செல்வராஜ் தோல் நாவல், 2013 ம் ஆண்டு ஜோ டி குருஸ் "கொற்கை' நாவல்.