பாரதி பக்கம்
எழுதிய ஒரு ஹைகூ கவிதை
பெயரைக் கேட்டதும்
புதிதாகப் பார்த்தேன்
பூக்கும் இந்தப் புல்லை
ஆங்கிலத்தில் இதன் மொழிபெயர்ப்பு
I looked at it a new
this flowering weed
weed என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு களை என்றிருந்தாலும்
அதைப் புல் என்றுதான் பெயர்த்திருக்கிறேன்.
ஒரு வகையில் எல்லாச் செடிகளும் களைதான்.
கம்புக் கொல்லையில் முளைக்கும் நெல் கூட களைதான்.
எந்தச் செடியும் நம் கண்களின் கண்ணோட்டத்தில் தான் களையாகிறது.
நம் கண்ணில் தான் களை முளைக்கிறது.
நம் மனவயலில் தான் களை விதைக்கப்படுகிறது.
இருத்தலின் இதயத்தில் எல்லாச் செடிகளும் இடம் பெற்றிருக்கிறது.
இயற்கையில் எல்லாவற்றிற்கும் சம இடமிருக்கிறது.
தேவையில்லாதது எதுவும் பூமி மீது பூப்பதில்லை.
இருத்தலின் கொசுவும், தேனியும் சமதன்மையுடன் இருக்கின்றன.
ஒன்று மனிதனைச் சுரண்டுகிறது.
இன்னொன்றை மனிதன் சுரண்டுகிறான்.
நாணயத்தின் வெவ்வேறு பக்கங்களாய் அவை மிளிர்கின்றன.
புல் பூப்பதைப் பற்றிய நாம் ஏன் கவலைப்படப் போகிறோம்
அந்தப் பூவில் பழம் தோன்றுமா?
அது மணம் பரப்புமா?
அதில் வாசனைத் திரவியம் வருமா?
அதில் மாலை தொடுக்க முடியுமா?
அதனால் மருந்து கொடுக்க முடியுமா?
நமது கவலையெல்லாம் புல்லின் பூவை ரசிப்பதில் இல்லை.
மாறாக அதைப் பூக்காமல் தடுப்பதில்தான்.
பூமியில் எது நமக்குப் பயன்படுமோ
அது மட்டும் தான் உற்பத்தியாக வேண்டும்.
உலகத்தில் உள்ளவை எல்லாம் நமக்காகவே படைக்கப்பட வேண்டுமென்றால்
நாம் யாருக்காகப் படைக்கப்பட்டோமா?
இந்தக் கேள்வியை எச்சரிக்கையோடு தவிர்ப்போம்.
இந்தப் புல் தினமும் தான் தென்படுகிறது.
சிலிர்க்கும் பூவுடன் அதை மற்ற்வர்கள் பார்க்காவிட்டாலும்
தினமும் பார்க்கிற புல் தான்.
உண்மையான கவிஞனைப் புல்லும் ஈர்க்கிறது. புட்பமும் ஈர்க்கிறது
பைன் மரமும், அருகம்புல்லும் அவனுக்கு
ஒரே உயரமாகத் தெரிகின்றன.
புல்லை நேசிக்க பெயர் தேவையில்லை.
பூவை வாசிக்க பெயர் ஆடம்பரம்.
பெயர் தெரியும் போதெல்லாம் பரிச்சயம் அதிகமாகிறது.
பரிச்சயம் உண்டானதும் அழகு உதிர்ந்து போகிறது.
பெயர் தெரியும் போதெல்லாம் தன்முனைப்பு கூடுகிறது.
தன் முனைப்பும், வியக்கும் உணர்வும் இரு துருவங்களாய் விரிகின்றன.
பெயர்கள் எல்லாம் செயற்கையானவை.
பயன் குறித்தவை
பயனற்றவைக்கும் பெயர் வைப்போம்
அவை பயனற்றவை என்று அறிந்து கொண்டு உதறித்தள்ள.
பெயர் தெரியாதவரை இந்தப் புல் அழகானதாக இருந்தது.
பெயர் தெரியாமலேயே இருந்திருக்கக்கூடாதா?
பெயர் தெரிந்தவர்கள் நமக்குப் பரிச்சயமானவர்கள்
என்கிற பொது விதியை மீறி
பெயர் தெரிந்தவுடன் பூக்கின்ற இந்தப் புல் அந்நியமாகிப் போனது.
இனி
அந்தப் புல்லைப் பார்க்கும் போதெல்லாம்
இனி பெயர் நினைவுக்கு வரும்.
அதன் சிலிர்ப்பு
மலர்ச்சி
அழகு
எல்லாமே மறந்து போகும்.
இப்படித்தான் நாம்
அழகழகாய் சுதந்திரமாய் வானத்தில் பறக்கும்
பறவைகளுக்கெல்லாம் பெயர் வைத்தோம்
ஒவ்வொன்றாய் அவை பூமியை விட்டு மறைய ஆரம்பித்தன.
இன்னும் சில நாட்களில்
நம்மிடம் பிராய்லர் கோழிகள் மட்டுமே பறவைகளாயிருக்கப் போகின்றன.
பெயர் வைத்தவை நமக்கு அடிமைகளாயின.
தங்கள் இயல்புத் தன்மைகளை உதிர்க்கச் செய்தோம்.
முட்கள் இல்லாத ரோஜாக்கள் செய்தோம்
விதைகள் இல்லாத திராட்சைகள் செய்தோம்
கொடுக்குகளற்ற தேனீக்கள் செய்தோம்
காளைகளையெல்லாம் காயடித்தோம்
கன்றுக்குப் பால் தராத பசுக்கள் செய்தோம்
செயற்கைக் கருவூட்டலில்
காளைகளையெல்லாம் எருதுகளாக்கினோம்
மாமிசத் துண்டுகளுக்காக
சிங்கங்கள் கர்ஜனையைத் தொலைத்து
கூண்டுக்குள் அடைந்தன.
இனியும் சொல்லுங்கள்
பூக்களின் நெற்றியில் பெயர்களை ஒட்ட வேண்டுமா?