முகத்தில் தெளித்த சாரல்...
மணியோசைகள் மறைகின்றன-
மலர்களின் வாசம் மட்டுமே மீதமிருக்கின்றன
பூரணமான மாலைப் பொழுது.
Temple bells out
the fragrant blossoms remain
A perfect evening
பெயர் தெரியாதவர் யாரோ எழுதிய கவிதை-
பல உன்னதமான புதையல்கள்
பெயர் தெரியாதவர்களிடம் இருந்து தான் நமக்குக் கிடைத்திருக்கிறது.
மொழியிலும், கலையிலும், இலக்கியத்திலும்.
மொழியைக் கண்டு பிடித்தவன் பெயர் நமக்குத் தெரியாது.
சிற்பத்தின் மீது விழுந்த முதல் வரி யாருடையது
என்பது தெரியாது.
வண்ணத்தைக் குழைத்த முதல் தூரிகை யாருடைய
சுட்டுவிரலுக்கும் கட்டைவிரலுக்கும் இடையே இருந்தது
என்பது தெரியாது.
இன்று புழங்கும் பழமொழிகள் எல்லாம்
முதல்முதல் ஒருஜோடி உதடுகளில் புது மொழியாக
உதித்திருக்க வேண்டும்.
ஆனால் நமக்கு அந்த உதடுகளின் விலாசம் தெரியாது.
முகவரியில்லாத முகங்கள் மூலமாகத் தான்
நாம் நமது முகவரியைபெற்றிருக்கிறோம்-
பொம்மைகளைச் செய்தவர்களே பெருமைப்படும் காலத்தில்
சிற்பங்களைச் செய்தும் சிலாகிக்கப்படாதவர்கள்
நினைந்து கொள்ளப்பட வேண்டும்.
சிற்பி நினைப்பதெல்லாம்
சிற்பம் தான் தன்னுடைய கையொப்பம் என்று-
மணியோசகைள் மறைகின்றன-
கோயில் மணியோசை எதற்கு?
யாரை எழுப்ப?
எத்தனை ஓசைகள் கேட்டாலும்
தூங்குபவர்கள் எழப்போவதில்லை-
கனவுகளை அவர்கள் நிகழ்வுகளிலும் அதிகமாக நேசிப்பவர்கள்.
விழித்துக் கொண்டிருப்பவர்களை எழுப்ப வேண்டியதேயில்லை-
மணியோசசைகளால் என்ன பயன்?