முகத்தில் தெளித்த சாரல்...
நாம் கைகளைத் தட்டும் போது
பணிப்பெண் தேநீர் கொண்டு வருகிறாள்;
பறவைகள் பறக்கத் தொடங்குகின்றன-
மீன்கள் நெருங்குகின்றன
சருகவாவில் உள்ள குளக்கரையில்
என்கிற Zen கவிதை நுணுக்கமான தியானத்தின் வெளிப்பாடு.
தியானம் என்பது கவனிப்பது-
வெளியேயும், உள்ளேயும்
பாஷை என்பது புரிந்து கொள்வதில் இருக்கிறது-
பேசுவதில் இல்லை.
ஒரே சொல் ஒவ்வொரு விதமாக உணரப்படுகிறது.
கேட்பவர்களின் காதுகளில் பாஷை உற்பத்தியாகிறதே தவிர
பேசுபவர்கள் உதடுகளில் அல்ல.
பேச்சு என்பது கேட்பவர்களிடம் நிறைவு பெறுகிறது-
அவரவர் அனுபவத்திற்கேற்ப
அவரவர் சூழலுக்கேற்ப
அவரவர் உணர்வுகளுக்கேற்ப
சொற்களுக்கு வடிவம் கிடைக்கிறது.
சொற்கள் நீராக இருக்கிறது:
கேட்பவர்கள் பாத்திரமாக ஆகிறார்கள்.
சொல்லுவதோடு நம் பணி முடிவடைந்து விடுவதில்லை-
கேட்பவர்களைத் திருப்பிச் சொல்லி சரிபார்க்க வேண்டும்.
தகவல் பரிமாற்றத்தின் சகல விளக்கங்களையும்
உள்ளடக்கியதாய் மிளிர்கிறது இந்தக் கவிதை..
கைகளைத் தட்டுவதில் பல மொழிகள் உள்ளன.
கூட்டத்தில் தட்டுவது பாராட்டுவதற்கு
கூடத்தில் தட்டுவது கூப்பிடுவதற்கு
பரிபூரண மகிழ்ச்சியில்
கலையின் ஆழத்தில் நெகிழ்ந்திருப்பவன்
கைதட்ட வேண்டிய அவசியமேயில்லே.
அவன் தலையசைப்பும், முகமலர்ச்சியுமே
வாழ்த்துப்பாக்களாக வலம் வருகின்றன.
குறட்பாவிலேயே கூற முடிந்ததற்கு
விருத்தப்பா எதற்கு?
கைதட்டிக் கூப்பிடுவது என்பது
விரைவைக் கருதி
தூரத்தை அனுசரித்து-
நம்மிடம் நோக்கத்தைக் காட்டிலும்
தரத்திற்கு அதிக முக்கியத்துவம்.