முகத்தில் தெளித்த சாரல்...
யாரையெல்லாம் கைதட்டிக் கூப்பிட முடியும் என்கிற
பட்டியல் ஒவ்வொருவரிடமும் உண்டு.
நாமே தயாரிக்கும் மனப்பட்டியல் - ரகசியப் பட்டியல்
பணியாளர்களுக்கு சவுகரியமானது
கைதட்டிக் கூப்பிடுவதுதான்.
அற்ப நேரமே நிகழும் உறவில்
அவர்கள் பெயர்கள், முகவரிகள் நமக்கெதற்கு.
பணியாளர்கள் அனைவருக்கும் நாம் ஒரே மாதிரியான முகம்
ஒட்ட வைத்திருக்கிறோம்.
அந்த முகம் நம்மிடம் பரிச்சயமான கீழ்ப்டிதலுடைய முகம்.
பணியாளரைப் பற்றி நாம் எங்கு
படிக்க நேர்ந்தாலும் நமக்கு நம்
பணியாளரே நினைவில் வருவார்.
பறவைகளுக்குப் பாவம்
பறப்பது சுகமாக இருந்தது போய்
இறகுகள் தப்பிப்பதற்கு என்று ஆகி விட்டன.
பெரிய கழுகைக் கண்டு பயப்படாத சிட்டு
சின்ன சிறுவனைக் கண்டு நடுங்குகிறது.
பருந்துகளும், கழுகு களும்
பூமியில் பறக்க முடியாமல் உதிர்ந்து போன
பறவைகளைத் தான் வேட்டையாடுகின்றன.
பறக்கின்ற பறவைகளின் மீது
அவற்றிற்கும் உயரமான மரியாதை உண்டு.
பறவைகளை பயப்பட வைத்தவன் மனிதன்.
கைதட்டினால் கூட நடுநடுங்கி
அவை பறக்கின்றன.
மனிதக் கைகளில் அகப்படுவதினும்
மரணமே சிறந்தது என்று மனிதர்களிடமிருந்து
தப்பித்து வந்த குஞ்சை
காகங்கள் கொத்தி கொத்தியே
சாகடித்து விடுகின்றன-
சின்ன மீன்களைப் போட்டு பெரிய மீன்களைப் பிடிப்பவர்கள் எனத் தெரியாததால்
அந்த சைகை மீன்களுக்கு நம்பிக்கையளிக்கிறது
தீனி ஏதேனும் போடுவார்களா
என்று நெருங்கி வருகிறது.
யாரேனும்
பிடித்த மீன்களை மறுபடியும் குளத்திலேயே விட்டுவிடுவது
திபெத்தில் உள்ளவர்கள் வழக்கம்.
ஒரே சைகை தான்
ஒன்று பறந்து போகிறது:
ஒன்று உணவு தேடி வருகிறது:
இன்னொன்று உணவு கொண்டு வருகிறது.
நம் மொளனமும் இப்படித்தான்: சைகையும் இப்படித்தான்: மொழியும் இப்படித்தான்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய்.