முகத்தில் தெளித்த சாரல்...
வாழ்க்கை மென்மையாய் இருப்பது
வளைந்தும். சுருங்கியும், வளர்ந்தும்
உயிர்த் தன்மையை உள்ளடக்கியது---
தென்றலாய்,
மலராய்
நீரோட்டமாய் மென்மையின் இயல்புகளோடு
பரிமளிக்கும் அற்புதமாக இருப்பது வாழ்வு.
ஒழுக்கம் வேறு - அதீதக் கட்டுப்பாடு வேறு
ஒழுக்கம் உள் மையத்துள் நிகழ்வது
கட்டுப்பாடு வெளிப்புற்த்தைத்தான் சார்ந்த நிகழ்வு.
எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும்
இதைச் சிறிதும் நகர்த்தக் கூடாது
தவறியும் கால் நாற்காலியில் பட்டுவிடக்கூடாது
என்று நிறைய "கூடாதுகள்" "கூடுபவைகள்"
சேரசேர வாழ்க்கை சிரமாமாகிவிடும்.
அழுக்கடையக் கூடாது என்பதில் கவனம் செலுத்துபவர்களுடைய
முழுநேரமும் அழுக்கின் மீது இருக்குமே தவிர
தூய்மையின் மீது அல்ல-
பாவம்-
இவர்கள் எப்போதும் இறுகி இறுகி
இனிய நொடிகளைத் தவறுபவர்கள்
விருந்தினர்களுடன் பேசும் போது கூட
எந்தப் பொருள் உடையுமோ என்ற சிந்தனையே
எப்போதும் இருக்கும்.
விருந்தினர்களுக்கு நல்ல பாத்திரங்கள்
நல்ல விரிப்புகள்
நல்ல கம்பளம் என்று
தனக்கென வாழ்ந்ததிலும் அடுத்தவர்கள்
இவர்களுக்கு அதிக முக்கியம்-
உணர்வினால் அல்ல - உள்ளத்தினால் அல்ல - பகட்டினால்
இஸ்ஸாவின் நுணுக்கமான வரிகள்-
நான் சாவகாசமாக வாழ்கிறேன்-
எனக்கு அவசரமில்லை-
என் அழகியல் வேறு-
எனக்கு என் வீட்டிலும் நான் முக்கியம் -
என் நிம்மதியும், என்மகிழ்ச்சியும் முக்கியம்-
ஏனென்றால் எனக்குப் பின்னாலும் என் வீடு இருக்கும்-
நான் இருக்காமலும் என் வீடு வாழும்.
தோட்டம் என்பது மலர்களும், சருகளும் உதிர்ந்திருப்பதுதான்
பறவைகளின் எச்சங்களும், அவற்றின் பாடல்களும் நிறைந்ததுதான்
அவற்றை எல்லாம் பெருக்கித் தள்ளத் தேவையில்லை-
இந்த வீடு நமக்குமட்டும் தான்
நாம் கட்டிய வீடு நமக்குமட்டும் என்றாலும்
நாம் மட்டுமா இதைக் கட்டினோம் -
தேனீக்களின் வீட்டில் நாம் கை வைக்கவில்லையா?
அரக்குப் பூச்சிகளின் வீட்டை கபளீகரிக்கவில்லையா?
இந்த வீடு எனக்கு மட்டுமல்ல -
எதுவுமே என்னுடையதல்ல -
வாழ்க்கை இறுக்கங்களையும், சட்டங்களையும் தாண்டியது -
அது நதியாக இருக்கட்டும்: அணைகளை உடைத்தெறிவோம்