முகத்தில் தெளித்த சாரல்...
யுகோஸ்லோவியாவின் ஹைகூ ஒன்றைப் படிக்க நேர்ந்தது.
சுவர்க் கோழிகள்
கோடைப் பகல் அமைதியை
இன்னும் அதிகமாக்குகின்றன.
The noisy crickets
make even deeper
The summer day silence
vio vukasovic
உற்றுப்பார்த்தால் உண்மை தெரியும்-
கடினமான பாறையைச் தோண்டினால் தோன்றும் ஊற்று
வற்றுவதேயில்லை-
சண்டைக்குப்பின் ஏற்படுகிற இணக்கம் ஆழமானதாயிருக்கிறது-
முரண்பாடுகளுக்கிடையே உண்மை இறைந்து கிடக்கிறது.
டாவோ சொல்கிறது
மென்மையானதே உறுதியானது
வளைந்து கொடுப்பதை உடைக்க முடியாது என்று
புன்னகை புரிந்துகொண்டு நமக்காக காத்திருப்பவனை
எப்படி புண்படுத்த முடியும்.
இருளையும், பகலையும் எப்படி இனம் பிரிப்பது?
எல்லா பகலிலும் இருளும் ஒட்டிக்கொண்டிருக்கிறது-
இரவுக்கும் பகலுக்குமான வேறுபாடு
இருளின் அடர்த்தியின் விகிதத்தில் தானே தவிர
இருள் இல்லாமையால் அல்ல-
நாம் பகலிலும் விழிகளை மூடினால்
வீட்டின் சன்னல்களை மூடினால்
வரும் இருட்டை எப்படி விரட்டுவது?
இருட்டே நிரந்தரம் - வெளிச்சம் தற்காலிகம் -
ஆதியும் அந்தமும் இருட்டுதான்
கருவறையும் இருட்டு-
கல்லறையும் இருட்டு-
வெளிச்சம் என்பது இடைப்பட்ட காலம்தான்.
கோடைப் பகல் அமைதியானது -
யாரும் வீதியில் இல்லை. விளையாட்டு இல்லை-
ஆமைகள் ஓட்டுக்குள் அடங்குவது போல்
மனிதர்கள் வீட்டுக்குள் அடங்குவர்.
அமைதியென்பது நிசப்தமல்ல-
அமைதியென்பது நிசப்தத்திலும் மாறுபட்டது-
அமைதி இயல்பாய் உருவாவது-
பூக்களின் சிரிப்புக்கும்,
சருகுகளின் சலசலப்புக்கும்
வணணத்துப் பூச்சிகளின் சிறகசைப்புக்கும்
வண்டுகளின் ரீங்காரத்திற்கும்
பறவைகளின் பாட்டிற்கும்
அமைதியின் மடியில் இடம் உண்டு.
அமைதி தோட்டத்தில் நிலவுவது-
நிசப்தம் மயானத்தில் காண்பது.
நிசப்தம் எதிர்மறையானது-
செயற்கையானது
நாமே உண்டு பண்ணுவது-
அமைதியைப் பறவைகளின் பாடல் வரிகள்
அலங்கரிக்கின்றன.
சிகாடா பூச்சிகளும்,
சுவர்க் கோழிகளும் அவற்றின் அடர்த்தியை அதிகப்படுத்துகின்றன-
கருப்பு மீசைக்கடியில் இருக்கும் பற்களின் வெண்மை
இன்னும் அதிகமாய்த் தெரிவது போலத்தான்
சுவர்க்கோழிகளின் சப்தம் அமைதியை அதிகப்படுத்துகின்றது.
சுவர்கோழிகளின் சப்தம் நமக்கு
ஆறுதலைத் தருகிறது.
நிசப்தத்தில் நாம் தொலைந்து போகிறோம்-
அமைதியில் நம்மைக் கண்டு பிடிக்கிறோம்-
வாழ்க்கை என்பது தொலைபபதிலும், தேடுவதிலுமாய்த் தொடர்கையில்
எப்போது கண்டுபிடிப்பது நிகழும்.