கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்
ஒரு ஊர்ல ஒரு பணக்காரன் இருந்தாம். ரொம்ப வசதி; காடுகரை, தோப்பு துறவு, நஞ்சை புஞ்சை எல்லா வசதியும் அமைஞ்சிருந்தது; பொண்டாட்டிஅமையிறதுதாம் பெரும்பாடாயிருந்த து.
முதல்ல ஒரு கலியாணம் நடந்தது. பத்துநா இருந்து குப்பை கொட்டீட்டு மம்மல்ல (இருட்டுல) பிறந்த வீட்டப் பாத்து ஓடீட்டா.
இன்னொருத்திய கலியாணம் முடிச்சாக. ரெண்டு நாளுதாம்; மூனாம் நாள் வீட்டுக்குள்ளயே கவுத்தப் போட்டு செத்துப் போயிட்டா.
பிறகொருத்திய கலியாணம் முடிச்சாக. மூணாவது நாள் பிடிச்சா ஓட்டம். எங்கெ போனான்ணே கண்டுபிடிக்க முடியல.
இப்பிடி மூணு பொண்டாட்டியும் அவங்கூட வாழ்க்கைபோட முடியாம போனதும், என்ன கோளாரோ ஏது கோளாரோன்னு யாருமே பொண்ணு கொடுக்கமாட்டேம்னுட்டாக. இவனுக்கு பொண்டாட்டி இல்லாம இருக்க முடியல.
ஒரு நா,
இந்தப் பணக்காரன் கூடார வண்டிய அவனே ஓட்டிக்கிட்டு எங்கனயாவது போவம்னு போனாம்,போற பாதையில, ஒரு பொண்ணு விறகு பொறுக்கிகொஞ்சம் பெரிய கட்டா கட்டி வச்சிட்டு தலையில தூக்கிவிட யாரச்சும் வருவகளான்னு பாத்துக்கிட்டு நிக்கா.
இவம் அவளப் பாத்ததும் வண்டிய நிப்பாட்டுனாம். ரொம்பச் சின்ன வயசு அழகா இருந்தா. வச்ச கண்ண எடுக்க முடியல.
என்னாத்தா யாரெ பாத்துக்கிட்டு நிக்கெ ன்னு கேட்டாம்.
இந்தக் கட்டெ சித்த பிடிச்சித் தூக்கிவிடணும். யாராச்சும் வருவாகளான்னு பாத்துக்கிட்டு நிக்கெம்ன்னா.
நாந் தூக்கிவிடுதெம் ன்னு இறங்கிவந்து தூக்கிவிட்டாம்.
வண்டிய அங்ஙனயே நிப்பாட்டிட்டு அவ பிறத்தாலயே போனாம். எந்த வீட்டுக்கு அவ போறான்னு கண்டுபிடிக்க.
கொஞ்ச தூரம் போனதும், விறகுக் கட்டை வெளியில போட்டுட்டு அவ ஒரு குடிசைக்குள்ள நுழைஞ்சா.
இவனும் பிறத்தாலயே போனாம்,
உள்ள போயிப் பாத்தா அவளோட அப்பன் கண்ணு தெரியாதவம். ஆத்தா ஒரு அப்புராணி. நண்டுஞ் சிண்டுமா நாலஞ்சி பிள்ளைக. இவதாம் மூத்தவ. இவளவச்சித்தாம் ஆட்டம்.
யாரு; என்ன வந்ததுன்னு கேட்டாக.
ஒங்க மகள பொண்ணு கேட்டு வந்தேம். இந்தாங்க பரிசம்னு கை நிறைய பணத்த அள்ளித் தந்தாம். பணத்துக்கு ஆசைப்பட்டு அவுகளும் சரீன்னுட்டாக.
அப்பவே போயி சேல துணி மணி, தாலிநூலு எல்லாத்தையும் வாங்கியாந்து, தாலியக் கட்டி வண்டியில தூக்கி வச்சிக் கொண்டாந்துட்டாம்.
வீட்டுல கொண்டாந்து அடைச்சி வச்சிக்கிட்டாம். மத்த பொண்ணுக போல இனி ஆயிரப்படான்னு . அக்கம் பக்கம் நகராம அடைமழை பிடிச்சது. கணக்கஅங்ஙனயே கிடந்தாம்.
அவளுக்கு வேண்டியத கவனிச்சிக்கிட ஒரு வேலக்காரிய ஏற்பாடு பண்ணிட்டாம். இருந்த இடத்துக்கு சாப்பாடு கொண்டாந்து கொடுக்க, குளிக்கிறப்ப.முதுகு தேச்சிவிட, தலை சீவி சிங்காரிக்க , பூ வாங்கீடடுவர இப்பிடி.
காலையில வேலைக்காரி வர்ரப்ப, சாயந்திரம் வேலைக்காரி போறப்ப, இந்த ரெண்டு தடவைதாம் அந்த வீட்டுக் கதவ அந்தப் பணக்காரன் திறந்துமூடுவாம். பாக்கி நேரமெல்லாம் சிறைக் கதவுதாம்.
அந்த வேலைக்காரிக்கு இந்தப் பணக்காரம் பொண்டாட்டியப் பாத்து பாத்து பூளாச்ச பொச்சரிப்பு (வயித்தெரிச்ச, பொறாமை) தாங்க முடியல. வேணுங்கதவாங்கி தின்னுட்டு நினைச்ச நகைநட்ட போட்டுப் பாத்துக்கிட்டு முத்தத்துல வெயிலு முகத்துல படாம மஞ்சக் குளிச்சிக்கிட்டு பட்டுச் சேலையா கட்டிக்கிட்டுஇருக்கா இந்த ஒண்ணுமில்லாம வந்த சிறுக்கி; நானு அரை வயித்துக் கஞ்சிக்கு ஆலாப் பறந்துக்கிட்டு அலையுதேம். பிறந்தா இப்பிடி ராசியானபொம்பளையாப்
பிறக்கணும் ன்னு எப்பப் பாத்தாலும் மொன மொன ன்னு முனங்கிக்கிட்டே இருந்தா.
ஒரு நா, வேலைக்காரியிட்ட என்னாத்தா, எப்பப்பாத்தாலும் ஒனக்குள்ளயே பேசிக்கிடுதெ. அப்பிடி என்னதாம் பாடு வந்துட்டது ஒனக்கு ன்னுகேட்டா.பணக்காரம் பொஞ்சாதி.
நெஞ்சு குழிய பெருமூச்சு விட்டு, பிறந்தாலும் ஒன்னைப் போல பிறக்கணும் ன்னா வேலைக்காரி.
அய்யோ, என்னக் கெணக்க நீ இருக்கணும் ன்னு நினைக்க: நானு ஒன்னைக் கெணக்க இருக்கணும்ன்னு நினைக்கேம்.
நா சொன்னபடி நீ கேட்டா நானு நீயாவும் நீ நானாவும் ஆயிறலாம் சம்மதமான்னு கேட்டா.
சொல்லு. இப்பவே நீ சொன்னபடி நாங் கேக்கேம் ன்னா வேலைகாரி.
நீ இப்பவே காச்சல் வந்தது போல குறுக்க முடக்கிப் படுத்துக்க. நானு அவருகிட்ட வேலைக்காரிக்கு காச்ச நெருப்பாக் கொளுத்துது ன்னுசொல்லிருதேம்.மம்மல்ல எஞ் சேலைய நீ உடுத்திக்க. ஒஞ் சேலைய நா உடுத்திக்கிட்டு முகத்த மூடிக்கிட்டு வெளியே போயிருதேம். நீ இங்கெ ஆயுசுபூராவும் ஆண்டுக்கிட்டு இருன்னா,
வேலைக்காரிக்கு சந்தோசம் பொறுக்கல.
இருட்டானதும் வேலைக்காரியோட சேலையக் கட்டிக்கிட்டு முகம் தெரியாம இழுத்து மூடிக்கிட்டு இவ வெளியேறிப் போயிட்டா. இவ சேலையவேலைக்காரி கட்டிக்கிட்டு போர்வையால முகத்த மூடிக்கிட்டு கட்டுல்ல படுத்துக்கிட்டா.
ராத்தரி ஆனதும் பணக்காரன் வேலைக்காரியப் போட்டு அடி கொல்லுதாம்: நாலாவதா வந்தவளும் ஓடிப் பொயிட்டாளே ன்னுட்டு.
என்ன அடிச்சி என்ன செய்ய. போனவ போனதுதாம்.இருந்தவ இருந்ததுதாம், ஒண்ணுமில்லாததுக்கு இவளாவது இருந்து தொலையட்டும்ன்னு வச்சிக்கிடாம்.
இப்பொ கதவும் திறக்கிறதில்ல. சன்னலும் திறக்கிறதில்ல.
காப்பாத்துங்களேம்: யாராவது வந்து என்னெக் காப்பாத்துங்களேம்
இந்தச் சத்தந்தாம் கேட்டுக்கிட்டு இருக்காம்.