கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்
ஒரு நாட்டுலா, ஒரு ஊராளுத ராசா இருந்தாரு. அந்த ராசாவுக்கு பொம்பளைகன்னாப் போதும் ! அவுகளுக்குப் பின்னால பேயா அலைவாரு.
ராசாவப் பெத்த அம்மாவுக்கு தன்னோட மகன் இப்பிடி கூறு கெட்டு அலையுதானேன்னு வருத்தம். கலியாணம் கட்டி வச்சிட்டா சரியாயிடுவாம்ன்னு ஒரு ராசாமகளப் பாத்து கட்டி வச்சா.
கலியாணத்துக்கு முன்னால இந்த ராசாவப் போலவே அந்த ராசா மகளும் ஒரு மாததான் திரிச்சல் திரிஞ்சவங்கிறது இவங்களுக்குத் தெரியாது.
ஒரு அஞ்சாறு மாசந்தான் ராசா இவளை சுத்திக்கிட்டே அலைஞ்சார். அதுக்குப் பிறகு பழையபடிக்கு பிறக்கித் திங்க போயிட்டாரு. இவளும் புருசனுக்காககாத்திருந்து காத்திருந்து பாத்தா. நாயி நக்கித்தாம் தீரும்ங்கிற கணக்குல அவன் அலையிதாம். பொறுத்துப் பொறுத்துப் பாத்த ராசா பொண்டாட்டியும்அங்கிட்டு இங்கிட்டுன்னு மேயப் பிறப்பிட்டுட்டா.
ஆம்பளை எப்பிடி அலைஞ்சாலும் ஊரு எதுவும் பேசாது. சகதியைக் கண்டா மிதிப்பாம்; தண்ணியக் கண்டா கழுவிக்கிடுவாம் அவன் ஆம்பளைன்னு ஊருபேசிக்கிடும். பொம்பளைன்னா அப்பிடியா. பொழுது தூர்ந்த நேரம் அடுத்த வீட்டு வாசல்ல போயி நின்னாக்கூட போச்சி போச்சின்னு பேசும்.
ராசா பொண்டாட்டியப்பத்தி அப்படித்தாம் பேசுதாக. ராசாவப் பெத்தவ காதுலயும் இந்தப் பேச்சு வந்து அரசல் புரசலா விழுந்துச்சி.
இது என்ன காலக் கொடும. நம்ம மகன் ஊராளுத ராசா. அவன் இப்பிடி அப்பிடின்னு இருக்கத்தாம் செய்வாம். இவ ராசா பொண்டாட்டி; இவளும் இப்பிடிஅலைஞ்சா எப்பிடின்னு மருமகளைப் பாக்கப்பபோனா, ஏ தாயீ, ஒன்னப்பத்தி இப்பிடி கண்டாங்காணியா பேச்சு வருதே ன்னா.
மருமகளுக்கு கோவம் இன்ன மட்டுமில்ல. பெத்த பிள்ளைய ஒடுக்கி வைக்க துப்பில்லாம ஊர்மேய விட்டுட்டு இங்க வந்து புத்தி சொல்ல வந்துட்டான்னுநினைச்சிக்கிட்டு. முதல்ல அவங்கவங்க ஒழுங்கா இருந்துக்கிட்டு மத்தவங்களுக்கு புத்தி சொல்ல வரணும் னு ஒரு போடு போட்டதும் மாமியாக்காரிமூச்சிக்காட்டாம எந்திரிச்சிப் போயிட்டா.
மாமியா போனதுக்குப் பிறகு இவளுக்கு ரொம்ப பயமாயிட்டது. அவ இனி சும்மா இருக்க மாட்டா. மகன உசுப்பி விடுவா. அதுக்கு முன்னால நாமஏதாவது செய்யணும்னு சொல்லி இவளோட சேத்திக்காரன வரச்சொல்லி, இன்ன இன்ன மாதிரி சங்கதி. நம்ம விசயம் வெளிப்பட்டா நம்ம ரெண்டு பேத்தையும்ராசா கழுவுல ஏத்திருவாரு. இப்ப என்ன செய்யலாம்ன்னு கவலையோட கேட்டா.
இம்புட்டுதானெ. நீ ஒண்ணுத்துக்கும் கவலைப்படாதெ. அததுக்கு ஒரு வழியிருக்கு. அத நாம் பாத்துக்கிருதேம்னு சொல்லிட்டுப் போயி, அந்த ஊர்லயே ஒருகெட்டிக்கார தறி நெசவு செய்யிற தொள்ளாளியப் பாத்து பேசுனாம்.
பிறகு அவனையுங் கூட்டிக்கிட்டு அரண்மனைக்கு வந்து, மகாராஜா இவம் ஒரு அருமையான நெசவுக்காரன் . இவன் நெசவு செய்யிற சேலைய யாரு உடுத்துவந்தாலும் அந்தச் சேலையப் பாக்கிறவங்க, உடம்பால மாத்திரமில்ல, மனசால கூட கெட்டுப் போகாதவகளோட கண்ணுக்குத்தான் தெரியும் அந்தச் சேல.
அப்பிடியா ; அப்ப அந்த மாதிரியான ஒரு சேலய நெசவு செஞ்சி கொண்டாரச் சொல்லு ன்னு ராசா உத்தரவு தந்துட்டாரு.
அதேபோல ஒரு சேலை நெசவு செஞ்சிட்டு வந்து அதுக்கு முன்னால அந்த சேத்திக்காரன் ராணியப் பாத்து அந்த சேலை யோட குட்டு நெட்டு எல்லாம்சொல்லி, பாக்கப்போற எல்லாருமெ இந்த சேலை ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லப் போறாங்க பாரு! அந்த வேடிக்கைய ன்னாம்.
ராணியோட பிறந்தநாள் அன்னிக்கு அந்த அபூர்வமான சேலைய உடுத்துக்கிட்டு (உண்மையில ராணி உள்ளாடையோட மட்டுந்தாம் இருந்தா), ஊரோடவந்து பாத்து அடேயப்பா என்னமா இருக்குன்னு இந்தப் புதுச் சேலைய புகழ்ந்தாங்களாம்.