கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்
ஒரு ஊர்ல ஒரு அக்காளும் தம்பியும் இருந்தாக. அக்காவுக்கு தம்பி பேர்ல உசுரு. அப்பிடி ஒத்துமையா பாசமா இருக்காக. இவகளுக்கு ஆத்தா அப்பன்இல்ல. பிள்ளைகள வீட்டுல விட்டுட்டு காட்டுக்கு போயி அவக வேல செஞ்சிக்கிட்டிருந்தப்ப ஒளி அடிச்சி கருகி செத்துப் போனாக. பிள்ளக அனாதஆயிட்டாக.
என்ன செய்ய, எப்பிடியாச்சும் பிழைக்கனுமில்ல. ஊருக்குள்ள மாடு மேய்ச்சி, கன்னு மேய்ச்சி, விறவு வாங்கி பெறக்கி வித்து, அத்தக்கொத்து வேலக செஞ்சிவயித்தக் கழுவுனாங்க. எப்படியொ பிள்ளைக இளந்தாரியும், குமரியும் ஆயிட்டாக.
அக்காளுக்கு தம்பிக்காரனே ஒரு மாப்பிள்ளைய பாத்து கலியாணம் முடிச்சிவச்சி மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வச்சாம்.
புருசம் வீட்டுக்கு வந்த அக்காக்காரிக்கு தம்பியப் பிரிஞ்சி இருக்க முடியல. ஒன்னுவிட்டு ஒரு நாளைக்கு எந் தம்பியப் பாக்கப்போறேம் எந் தம்பியப்பாக்கப் போறேம்ன்னு ஓடியாந்துருவா,
தம்பிக்காரனும் அப்பிடித்தாம் ; நடூச்சாமம் தூங்கிட்டிருக்கெயில அக்கா வாராப்பல கனாக் கண்டான்னா அம்புட்டுத்தேம் ; அப்பவே அக்காவப்பாக்கனும்ன்னு எந்திரிச்சி நடையக் கட்டிருவாம்.
ரெண்டு ஓடைய கழிச்சா அக்கா வீடுதாம். விடிய முன்னால அக்கா முன்னால போயி நின்னுருவாம்.
புருசன்கூட வேலைக்குக் கிளம்பிக்கிட்டிருக்க அக்கா தம்பியப் பாக்கவும். கிட்டவந்து அவன தடவிக் கொடுத்து முகந்துடைச்சி, வான்னு உக்கார வச்சி,வெதுவெதுன்னு ஒரு களியக் கிண்டி ஆனங் காய்ச்சி தம்பிக்குப் போடுவ.
காத்துக்கிட்டிருக்க புருசங்கிட்ட, நீரு போரும் இந்தா வந்திருதேம்ன்னு அனுப்பி வச்சிட்டுத் தம்பிகிட்ட பிரியாமாப் பேசி சீராட்டிக்கிட்டிருப்ப. புஞ்சைக்குப்போன புருசங்காரன், அவ இப்ப வந்துரூவா, பிறகு வந்துரூவான்னு காத்துக்கிட்டிருப்பாம். ஒரு வேலையும் செய்ய ஓடாது.
தம்பிய ஊருக்கு அனுப்பிச்சிட்டு, அடி திரும்ப நிறைஞ்ச முகத்தோட புஞ்சைக்கு பூளாச்ச (பொறாமை) கொல்லும். புஞ்சை வேலய கெடுத்த மச்சினனைகொத்தித் திங்கணும் போல வெளம் பிச்சிக்கிட்டு வரும்.
இப்படி இருக்கையில,
அக்கா மாசமா இருந்தா.
இது தெரிஞ்ச தம்பிக்காரன் அடிக்கடி அக்காளப் பாக்க, அவளுக்கு திங்க அவளுக்குப் பிடித்தமான பண்டங்கள வாங்கியாந்து கொடுப்பாம்.
புஞ்சை வேலைக கெட்டதுமில்லாம பொண்டாட்டிகிட்ட ஒரு உத்தது உருத்தது கூட பேச முடியாம இப்பிடி ஆயிட்டதேன்னு புருசங்காரனுக்கு இருக்கு. அவம்பொறுத்துப் பொறுத்துப் பாத்தாம். பொறுக்க முடியல.
உன்னோட தம்பிக்காரன் இனிமெ இங்கெ வரக்கூடாது ; நீயும் அங்கெ போகக்கூடாதுன்னு கராலாச் சொல்லீட்டாம்.
இதக் கேட்டு அக்காக்காரி உக்கி ஒடுங்கிப் போனா. அதுலயிருந்து தம்பியும், அக்காக்காரியப் பாக்கம ஆலாப் பறந்துக்கிட்டுக் கிடக்காம்.ஒருத்தருக்கொருத்தர் பாராத ஏக்கத்துல, கஞ்சித் தண்ணி செல்லாம ஒடுங்கிப் போனாக. காடு கரைகள்ள தூரத்துல மறவா நின்னு பாத்து கண்ணெத்தொடைச்சிடுவாக.
இப்பிடி இருக்கையில,
அக்காளுக்கு பொம்பளப் பிள்ள பிறந்திருக்குன்னு எப்படியோ யாரோ தாக்கல் சொன்னாக. அதெக் கேட்டதும் தம்பி உடனே அரிசி, கோழிஇதெல்லாம் கொண்டுக்கிட்டு அக்கா வீட்டுக்கு வந்தாம்.