கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்
ஒரு காட்டுல ஒரு நாகப்பாம்பு இருந்தது. ரொம்ப சோம்பேறி, இரை எடுக்கப் போகாது. பாக்க அழகா, ரொம்ப நல்லா இருக்கும். இதத் தேடிசாரைப் பாம்புக வரும். அதுக வரும்போதெல்லாம் இந்தப் பாம்புக்கு பிரியமா இரை கொண்டாந்து தந்து, இது கூடப் பேசிப் பழகி நல்லாப் பொல்லாஇருந்துட்டுப் போவும்.
நாகப் பாம்பு முட்டையிட்டு அடைகாக்கும். அடை முடிஞ்சி, முட்டைகள்ளயிருந்து குட்டிக வரும். அப்பிடி வர வர அந்த குட்டிகள் எல்லாத்தையும் ஒவ்வொண்ணாப்பிடிச்சி விழுங்கிடும்! ஒத்தக் குட்டி கூட மிஞ்சாது.
மற்ற பாம்புகளெல்லாம் அடைகாத்து குட்டிகளோட வெளியில வரும்போது மெலிஞ்சு தெரியும். இந்த பாம்பு மட்டும் குட்டிகள எடுத்து முழுங்கிட்டு, பசிஇன்னதுன்னே தெரியாம தள தளன்னு மின்னாப்பா இருகும்.
பாத்தா ஆசை வரும்!
இப்பிடி பாக்க வார மத்த பாம்புக படுத்தே கிடந்தா உடம்பு என்னத்துக்காகும். எங்க கூட வா. வயலுப் பக்கம் போவோம் ; எலியப் பிடிப்போம்.குளத்துப் பக்கம் போவோம் ; தவளையைப் பிடிப்போம்ன்னு கூப்புடும்.
ஒண்ணத்துக்கும் அசையாது. தேடிவர சாரைப் பாம்புக கொண்டார விருந்துச் சாப்பாட சாப்பிட வேண்டியது. அதுகளோட பேசி உல்லாசமா இருக்க வேண்டியது.இப்பிடியே அதொட பொழுது கழிஞ்சிக்கிட்டிருந்தது.
ஒரு நா, ஈசன் சிவனார் இந்த நாகப் பாம்பெ தற்செயலாப் பாத்தாராம், அடாடா என்ன அழகு என்ன அழகு. தூக்கி கழுத்துல போட்டுக்கிடலாம்போலிருக்கேன்னு எண்ணம் வந்துட்டதாம்.
உடனே, நாகப்பாம்பு முட்டை இட ஆரம்பிச்சி அடைகாக்க ஆரம்பிச்சது.
நாள் ஆக ஆக அதுக்கு பசி தாள முடியல. எப்ப குட்டிக வெளிய வரும் எடுத்து ஒவ்வொண்ணா முழுங்குவம்ன்னு இருக்கு.
நாள் ஆயிக்கிட்டே போகுது. குஞ்சுக முட்டைவெடிச்சி வெளிய வரமாட்டேங்கு. முதல் முட்டையப் பாக்கு. அதுல இருந்துதாம் முதக்குட்டி வெளிய வரணும். ஒருஅரவத்தையும் காணம். பசி குடலைப் பிடுங்குது.
தேடி வர சாரைப் பாம்புகளையும் காணம். பசியோட தனீயா கஸ்டப்படுது. பசி தாங்க முடியல. இனி முட்டைகளையே எடுத்து முழுங்கிற வேண்டியதுதாம்ங்கிறநிலைமைக்கு வந்த போதுதாம் ஒரு அதிசயம் நடந்தது!
ஒரே சமயத்துல எட்டு மூட்டைகளும் வெடிச்சது. முட்டைகளிலிருந்து பாம்புக் குட்டிக வரல்ல ; எட்டு முட்டைகள்ல இருந்தும் எட்டு அட்ட காளிகள்வெளிய வந்ததாம். அப்பிடி வெளிய வந்த சமயம் கண்ணைப் பறிக்கிற ஒளி வானத்துக்கும் பூமிக்குமா மின்னிச்சாம். மின்னல் கொட்டு முழுங்கிச்சாம், இடி.