கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்
ஒரு ஊர்ல ஒரு புருஷன், பெண்டாட்டி. அவகளுக்கு நாலு பொம்பளைப் பிள்ளைக.குடும்பத்தோட ஆறு பேரும் தினமும் மலைக்குப் போயி ஆளுக்கு ஒரு சுமை விறகுகொண்டாந்து, கடைசி மகள மட்டும் விறகுக் கட்டோட வீட்டுக்குப் போகச்சொல்லிட்டு மச்சவுகளெல்லாம் ஊருக்குள்ள போயி, விறகு வேண்டியவுகளுக்குகொடுத்து, அதுக்குப் பதிலா தானியந்தவசம் வாங்கிட்டு வந்து குத்திப்பெறக்கி சோறுகாய்ச்சி சாப்பிட்டுப் படுப்பாக.
இப்படி அன்னாடு வேல செஞ்சும் வாய்க்கும் வகுத்துக்கும் எட்டாம சீரழிஞ்சும்சீப்பட்டும் கிடக்கையில, இந்த நாலு பொண்ணுகளும் ஆளாயி குலுக்கை (குதிர்)குலுக்கையா நிக்காக.
இப்படி நாலும் ஒன்னுபோல ஆளாகி நிக்கிறாகளே இதுகள எப்படிக் கரையேத்தப்போறோம்ன்னு கவலை அடைஞ்சி, தின்ன சோறு உடல்ல ஒட்டாம புருசனும்பெண்டாட்டியும் கதிகலங்கி போயி கிடக்காக, இப்படி இருக்கையில ஒருநா,
இவுக மலைக்குப் போயி வெறகு பொறுக்கிட்டு இருக்கையில, ஒரு திக்கம் முனகலும்முக்கலுமா சத்தம் கேக்கு. என்னது இது புதுசா இருக்கேன்னு சத்தம் வந்த திக்கம்போயிப் பாக்க, அங்க ஒருத்தன் உடம்பெல்லாம் நெத்தக்காடா (இரத்தம் கொட்டி)முனகிக்கிட்டுக் கிடக்காம். உசுரு இப்போ, பொயிருமோ பிறகு பொயிருமோன்னுபரிதவிச்சிக்கிட்டு கிடக்கு. அவனப் பாத்துப் பதறி போனாக. ஆளைப் பாத்தாராஜாவீட்டுப் பிள்ளை கெணக்கா இருக்கு. தன்னுசாரில்ல (பிரக்ஞை இல்லை).
பிறக்கின விறகை மட்டும் கட்டா கட்டிக்கிட்டு அவனயும் தூக்கிக் கிட்டு வீட்டுக்குவந்து, நெத்தத்தத் தொடைச்சி கழுவி பச்சல அறைச்சி பூசி ஒத்தனங் கொடுத்து, கஞ்சித்தண்ணி ஊத்தி ராவும் பகலுமா இருந்து பண்டுகம்பாத்து பிழைக்க வச்சிட்டாக.
அவனுக்கு தன்னுசார் வந்ததும் கண்ணு திறந்து பாத்தாம். நீ யாரப்பா என்னவிவரம்ன்னு கேட்டாக. மலைக்கு அந்தப் பக்கம் பெரிய்ய பண்ணையாருக்கு ஒரேமகன். அப்பனுக்கும் மகனுக்கும் பிடிக்கல. இவனோட வாடாவழி"" (வாழாவழி)ப்போக்கும் திரிச்சலும் அவுகளுக்குப் பிடிக்க. சண்டை போட்டுக்கிட்டு ஊர விட்டேமலைக்கு இந்தப் பக்கம் வந்துரனும்ன்னு தாண்டி வாரப்பதாம் கரடி வந்துபிடிச்சிக்கிட்டது. அதோட பிடியில இருந்து போராடி தப்பிக்க முடியல. அதோடஅப்படி சண்டை போட்டதுலதாம் இப்படி ஆயிட்டதுங்கிற விவரம் தெரிஞ்சது.
அவம் படுக்கையில கிடக்கும்போது இந்த நாலு உடம்பிறப்புகளும் அவன பிள்ளையப்பாத்துகிடறதுபோல ஆதரவா பாத்துக்கிட்டாக. அப்பிடி ஒரு பிரியமா நடந்துக்கிட்டாக.அந்த வசதியான வீட்டுப்பிள்ள இங்கெ கட்டாந்தரையில - நல்ல ஒரு விரிப்பு கூடஇல்லாம - கிடந்தாம்.
அவனுக்கு குணமாகி எழுந்திருச்சி நடக்க அனையநாள் ஆயிட்டது. ஏழைப்பட்டஅந்தக் குடும்பத்தைப் பாக்கப் பாக்க பாவமா இருந்தது. இந்தக் கஷ்டத்துலயும்நம்மளை இப்பிடி கவனிச்சிக்கிடுதாகளே இவுகளுக்கு நாம பதிலுக்கு என்னசெய்யப்போறோம்ன்னு நினைச்சி நினைச்சி மருகுனாம்.
நினைச்சிப் பாக்கிறப்ப இந்தப் பிள்ளைகளைக் கட்டிக்குடுக்கிறதுதாம் இவங்களுக்குப்பெரும்பாடா இருக்கும். இவுகளுக்கு நாம எதாவது உதவின்னு செய்யணும்ன்னா,இந்த நாலு பொம்பளைப் பிள்ளைகள்ள ஒரு பிள்ளையக் கட்டிக்கிடறுதாம்இவுகளுக்குச் செய்யிற ஒரு உதவின்னு நினைச்சாம். நாலையும் பாக்கிறப்ப நாலுபேரும் ஒன்னுபோல இருக்காக! ஒன்னுபோல இவம்பேர்ல உசுராப் பழகுதாக.இவனால ஒரு முடிவுக்கு வர முடியல. சரி; அவுககிட்ட நாம அபிப்பிராயத்தசொல்லுவோம். அவுக என்ன சொல்லுதாகளோ அதாம்ன்னு தீர்மானிச்சி, ஒருநாஅந்தப் பிள்ளக இல்லாத நேரமாப்பாத்து இவஞ் சொன்னாம்,
நாலு பொண்ணுகள வச்சிக்கிட்டு நீங்க கவலப்படுததெ நாம் பாத்துக்கிட்டுத்தாம்இருக்கேம். காட்டுல என்ன கரடி அடிச்சி அங்கனயே நா செத்துப் போயிருந்தாலும்போனதுதாம். நீங்க பாத்து என்னெத் தூக்கிட்டுவந்து அரும்பாடுபட்டு காப்பாத்திட்டிக.பதிலுக்கு உங்களுக்கு நாஞ் செய்யிற உவகாரமா நெனைச்சிக் கேக்கேம். ஒங்க நாலுபிள்ளகள்ள ஒரு பொண்ண எனக்குக் கட்டி வச்சீகன்னா நா சந்தோசமாக் கலியாணம்பண்ணிக்கிடுதேம்ன்னாம்.
இதெக் கேட்டதும் அவகளுக்கு சந்தோசம் பொறுக்கல. ஒரு கவலையும் வந்தது. இதுசரிப்பட்டு வருமா. கடைசி வரைக்கும் நம்ம பிள்ளைய வச்சிக் காப்பாதுவானா.தேடாம ஒரு மாப்பிள்ள வீடு தேடி வந்துருக்கெ; அது பெரிசில்லையா.