For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கண்ணதாசனை காணுவோம்

By Staff
Google Oneindia Tamil News

1. வாழ்ந்து பார்க்க வேண்டும் ...

வாழ்ந்து பார்க்க வேண்டும் - அறிவில்
மனிதனாக வேண்டும்
வாசல் தேடி உலகம் - உன்னை
வாழ்த்திப் பாட வேண்டும்!

நாடு காக்க வேண்டும் - முடிந்தால்
நன்மை செய்ய வேண்டும்
கேடு செய்யும் மனதை கண்டால்
கிள்ளி வீச வேண்டும்!

தமிழும் வாழ வேண்டும் - மனிதன்
தரமும் வாழ வேண்டும்
அமைதி என்றும் வேண்டும் - ஆசை
அளவு காண வேண்டும்!

காற்று வீச வேண்டும் - பெண்கள்
காதல் பேச வேண்டும்
காதல் பேசும் பெண்கள் - வாழ்வில்
கவிதையாக வேண்டும்!

மானங்காக்க வேண்டும் - பெண்களை
மதித்து வாழ வேண்டும்
உண்மை நண்பர் வேண்டும் - இருவர்
ஒருவராக வேண்டும்! (வாழ்ந்து)


2. ஆறு மனமே ஆறு ..

Shivaji Ganesan ஆறுமனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு! (ஆறு)

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி!

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் - வரும்
துன்பத்தில் இன்பம் பட்டாகும் - இந்த
இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்! (ஆறு)

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை
உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்!

உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்! (ஆறு)

ஆசை, கோபம், களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்

அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம் - இதில்
மிருகம் என்பது கள்ளமனம் - உயர்
தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த
ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம் (ஆறு)


3. கடவுள் இருக்கின்றான் ..

M.G.Ramachandran கடவுள் இருக்கின்றான் - அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா?

காற்றில் தவழுகிறாய் - அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா?

இருளில் விழிக்கின்றாய் - எதிரே
இருப்பது புரிகின்றதா?
இசையை ரசிக்கின்றாய் - இசையின்
உருவம் வருகின்றதா?

உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம்
வெளியே தெரிகின்றதா?
புத்தன் மறைந்து விட்டான் - அவன்தன்
போதனை மறைகின்றதா?

சத்தியம் தோற்றதுண்டா - உலகில்
தருமம் அழிந்ததுண்டா - இதை
சரித்திரம் முழுவதும் படித்த பின்னாலும்
சஞ்சலம் வருகின்றதா -

தேடியும் கிடைக்காது - நீதி
தெருவினில் இருக்காது!
சாட்டைக்கு அடங்காது - நீதி
சட்டத்தில் மயங்காது
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி
காக்கவும் தயங்காது!

4. வீடு வரை உறவு ..

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா? (வீடு)

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! (வீடு)

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! (வீடு)

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு! (வீடு)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X