நீல பத்மநாபனுக்கு சாகித்ய அகாடமி விருது
பிரபல தமிழ் எழுத்தாளர் நீல. பத்மநாபனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. அவர் எழுதிய இலையுதிர் காலம் எனற நாவலுக்காக இந்த இலக்கிய விருது கிடைத்துள்ளது.
ரூ. 50,000 ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுப் பட்டயத்தைக் கொண்டது சாகித்ய அகாடமி விருது.
பத்மநாபன் தவிர பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 23 எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுக்கும் சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.
பிப்ரவரி 20ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் பத்மநாபன் உள்ளிட்ட 23 பேருக்கும் விருது வழங்கப்படும்.
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் 1938ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி பிறந்தவர் நீல. பத்மநாபன். அங்கேயே வசித்தும் வருகிறார்.
கேரளத்தில் பிறந்து, நவீன தமிழ் இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சியில் பெறும் பங்காற்றியவர் நீல. பத்மநாபன்.
எழுத்தின் மீது தீராத காதல் கொண்டிருந்த பத்மநாபன், சிறு வயது முதலே தமிழ் எழுத்தில் மிகத் தீவிரப் பற்று கொண்டவர்.
இதுவரை தமிழில் 34 நாவல்களையும், மலையாளத்தில் 4 மொழிபெயர்ப்பு நாவல்களையும் எழுதியுள்ளார் நீல.பத்மநாபன்.
கேரள பல்கலைக்கழக போர்ட் ஆப் ஸ்டடிஸின் உறுப்பினராகவும், சாகித்ய அகாடமி செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ள நீல. பத்மநாபன், இந்திய மற்றும் சர்வதேச மொழிகளில் இவரது நூல்கள் பல மொழியாக்கம் செய்யப்பட்ட பெருமைக்குரியவை.
பள்ளிகொண்டபுரம், தலைமுறைகள், உதயதாரகை, பகவதி கோவில் தெரு, தேரோடும் வீதி உள்ளிட்ட நாவல்கள் நீல. பத்மநாபனின் எழுத்துச் செழுமைக்கு சிறந்த சான்றுகள்.
இவரது நீல.பத்மநாபன் கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்ற கவிதைத் தொகுப்பாகும்.