சிங்கை வீதிகளில் பாரதி!
முறுக்கு மீசைக்காரனின் மிடுக்கான தமிழை மிக எடுப்பாக அரங்கேற்றிக்கொண்டிருக்கும் சிங்கை அமைப்புகளை தமிழ் சார்ந்து தலைவணங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
கடந்த வாரம் சிங்கை 'கடற்கரைச்சாலை கவிமாலையில்' பாரதி தலைப்பில் கவியரங்கம் சிறப்பாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஹெண்டர்சன் சமூக மன்றத்தின் சிறப்பான ஏற்பாட்டில் இவ்வாரம் பட்டிமன்றம் அரங்கேறியது.
"பாரதி பெரிதும் வலியுறுத்துவது" பெண்ணுரிமையே! மொழியுணர்வே! என்பதே தலைப்பு.
ஐயகோ என்ன இது தலைப்பு? பாரதியை இவ்வகையில் எப்படி பிரித்துப் பார்ப்பது என குழப்பத்துடன் அந் நிகழ்வில் கலந்துகொண்ட எனக்கு அங்கு மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது!
அங்கே நடுவராக மூத்த தமிழ் மாணவர் என்கிற தன் அறிமுகத்தில் அகம் மகிழும் அய்யா புருசோத்தமன் அவர்களும், பெண்ணுரிமையே என முனைவர் இரத்தின வெங்கடேசன், திருமதி ஜெயஸ்ரீ தாமோதரன், எம்.ஜே .பிரசாத் அவர்களும், மொழியுணர்வே என எதிர்வாதத்தில் சொல்லருவி சிவக்குமார், கவிஞர் கோவிந்தராஜ், பிரவீன்குமார் ஆகிய அத்தனை பேரும் தமது சிரத்தையான பேச்சில், குழுமியிருந்த தமிழ் ஆர்வலர்களின் சிந்தை சிறக்கச்செய்தனர்.
மேலும், அவர்களின் பேச்சில் தான் எத்தனை வரலாற்றுத் தகவல்கள். அவர் தம் எடுத்துக்காட்டுக்களில் எடுத்தியம்பிய பாடல்வரிகள், கட்டுரைத் தகவல்கள் எல்லாம் என்னுள் பாரதியை மிக ஆழமாக அழுந்தச் செய்தது. இறுதியில் பாரதி மிகவும் வலியிறுத்துவது பெண்ணுரிமையே என தீர்ப்பு வழங்கப்பட்டது.
பாரதியின் நினைவு தின அஞ்சலியை முன்னிட்டு கவியரங்கங்கள், அவனது சீற்றம் நிறைந்த எழுத்துக்களை மையப்படுத்தி பட்டிமன்றம் என ஒரு உயிர்ப்பான உலகக்கவியை உயர்த்திப்பிடிப்பதில் தனது உள்ளக்களிப்பை உறுதிசெய்துகொண்டிருக்கும் அமைப்புகளின் சேவை பாராட்டுதலுக்குரியது.
-கோட்டை பிரபு ([email protected])