நடிகர் சந்திரசேகருக்கு முரசொலி விருது - ரூ.1 லட்சம் பொற்கிழி
சென்னை: நடிகர் சந்திரசேகருக்கு முரசொலி அறக்கட்டளை வழங்கும் ரூ. 1லட்சம் பொற்கிழியும், சிறப்பு விருதும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து முரசொலி அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முரசொலி அறக்கட்டளை சார்பில் தமிழ் மொழி, இலக்கியம், கலாச்சாரம் ஆகியவற்றில் சிறந்தோரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முரசொலி நிறுவனர் மற்றும் முரசொலி அறக்கட்டளை நிறுவனர் கலைஞர் விருதும், ரூ. 1 லட்சம் பொற்கிழியும் வழங்கப்படும்.
2007ம் ஆண்டுக்கான விருதுகள் வி.சி.குழந்தைச்சாமி, து.நெப்போலியன், ஜே.பி.கிருஷ்ணா ஆகியோருக்கு வழங்கப்படும் என கடந்த மாதம் 29ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 2007ம் ஆண்டுக்கான முரசொலி மாறன் சிறப்பு விருதும், ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும் வாகை சந்திரசேகருக்கு வழங்கப்படும்.
பிப்ரவரி 15ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும் விழாவில் நிதியமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான அன்பழகன் தலைமையில், முதல்வர் கருணாநிதி விருதினையும், பொற்கிழியையும் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.